2006-10-20

கடைசி பதிவு

அனைவருக்கும் தீபத்திருநாள் வாழ்த்துக்கள்

இத்துடன் அகரவலை தன் பயணத்தை முடித்துக்கொள்கிறது.

2004 செப்டம்பர் 24 அன்று முதல் பதிவை துவக்கிய அகரவலையின் பயணம் இன்று நிறைவு பெறுகிறது.

இதுவரை வாசித்த விமர்சித்த அனைவருக்கும் நன்றி.

அபூர்வ ராகங்கள்

அதிசய ராகமாக தமிழ்த் திரையுலகில் பூத்த ஸ்ரீவித்யா என்ற தாரகை நேற்று உதிர்ந்தது. பாலசந்தரின் இயக்கத்தில் ஸ்ரீவித்யாவின் அபூர்வமான நடிப்பில் கமல் நாயகனாக நடித்த புகழ்பெற்ற படத்தில் தான் ரஜனிகாந்த் அறிமுகமானார். குணச்சித்திர தாரகையாக வலம் வந்த ஸ்ரீவித்யா புகழ்பெற்ற கர்நாடக சங்கீதப்பாடகி எம்.எல்.வசந்தகுமாரியின் புதல்வி.

சமீபகாலமாக திருவனந்தபுரத்தில் தங்கியிருந்த ஸ்ரீவித்யா மலையாள தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்து வந்தார். புற் றுநோய் தாக்கி மருத்துவமனையில் சிகிட்சை பெற்று வந்த அவர் நேற்றிரவு காலமானார். இன்று காலை பொதுமக்கள் மற்றும் திரையுலகினரின் அஞ்சலிக்காக அவரது வீட்டிலும் பின்னர் பொது அரங்கு ஒன்றிலும் வைக்கப் பட்டபின் அரசு மரியாதையுடன் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

தமிழில் சிவாஜி கணேசன் நடித்த திருவருட்செல்வர் திரைப்படத்திலும் மலையாளத்தில் நடிகர் சத்யன் நடித்த சட்டம்பிக்கவல என்ற படத்திலும் தன் திரையுலக வாழ்வை ஆரம்பித்த போது ஸ்ரீவித்யாவுக்கு 13 வயது.

அபூர்வராகங்களின் போது கமலஹாசனால் காதலிக்கப்பட்ட அவர், குடும்பத்தினரின் சம்மதம் கிடைக்காததால் திருமணம் தாமதமான நிலையில் கமல் வாணியைத் திருமணம் செய்து கொண்டதால் இவரும் தனக்கு அச்சூழலில் ஆறுதலாக இருந்த ஜார்ஜ் தாமஸ் என்ற தயாரிப்பாளரை திருமணம் செய்து கொண்டார்.

நோய் கடுமையாகி மருத்துவமனையில் இருந்த போது கடைசி தினங்களில் தன்னைக்காண திரையுலக நண்பர்களை அனுமதிக்க மறுத்துவிட்டார். ஆயினும் அந்நிலையிலும் தன்னைக் காண வந்த கமலஹாசனை மட்டும் சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகையாக மட்டுமல்லாமல் நர்த்தகியாகவும் புகழ் பெற்றிருந்த ஸ்ரீவித்யா தன் இறுதிக்காலத்தில் ஒரு நடனப்பள்ளி நடத்த விரும்பியிருந்தாராம். அது நிறைவேறாத ஆசையாகவே போய்விட்டது.

உலகப்புகழ் சங்கீதப் பாடகியின் மகளான ஸ்ரீவித்யாவும் நல்ல பாடகி. சில திரைப்படங்களிலும் பாடியுள்ள அவர் நான்கு வருடங்களுக்கு முன் நண்பர்களின் வற்புறுத்தலால் கேரளாவில் தானே இயற்றிய கீர்த்தனங்களுடன் சங்கீதக்கச்சேரி நிகழ்த்தினார். அதற்குக்கிடைத்த பாராட்டுக்களால் தொடர்ந்து பல கச்சேரிகள் பாடினார்.

கேரள மாநில அரசின் சிறந்த நடிகைக்கான விருதை இவர் இருமுறை பெற்றுள்ளார். மாநில அரசு மரியாதையோடு நடைபெற்ற இவரது இறுதிச்சடங்கை மூன்று மலையாள தொலைக்காட்சி சேனல்கள் இன்று காலை முதலே நேரடி ஒளிபரப்புச் செய்தன.

கணவனைப் பிரிந்து தனியாகவே வாழ்ந்து வந்த ஸ்ரீவித்யாவுக்கு குழந்தைகள் இல்லை என்பதே மிகப்பெரிய சோகமாக இருந்திருக்கிறது.

2006-10-17

பாட்டுக் கேட்க!

இதில் உள்ள பாடல் classmates என்ற புதிய திரைப்படப்பாடல். உள்ளூர் கேபிள்களில் ஒரு நாளைக்கு 50 முறையாவது ஒளிபரப்பாகி வருகிறது. பாடலின் இனிமையோடு காட்சியில் நகைச்சுவையும் மிகுந்த ரசனைக்குரியவை. கேட்கக்கேட்க பார்க்கப்பார்க்க இனிமை.

இந்தப்படத்தில் நான்கு நாயகர்கள். பாக்கியராஜ் மகளுடன் டூயட் பாடிய பிரித்விராஜ், பிரித்வியின் அண்ணன் இந்திரஜித் (இவர்கள் மறைந்த மலையாள நடிகர் சுகுமாரனின் புதல்வர்கள்), என்மனவானில் ஊமைப்பையன் ஜெயசூர்யா, சித்திரம்பேசுதடி நரேன்.

நாயகி எனமனவானில் ஊமைப்பெண் காவ்யா. கேரள பாக்கியராஜ் பாலச்சந்திரமேனன், கேரளாவின் வடிவேலு (கவுண்டமணி?) ஜகதி மற்றும் நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கும் இந்தப்படம் சமீபத்தில் வெளியாகி சக்கைப்போடு போடுகிறது. பாடல்கள் அனைத்தும் பயங்கர ஹிட்.



2006-10-16

யாருக்கு முதலிடம்?

இது தேர்தல் நேரம். உள்ளாட்சித் தேர்தல்கள் முடிந்து விட்டன. தேர்தல் எண்ணிக்கை முடிந்து முடிவுகள் வெளியாகும் நாளை எதிர்பார்க்கும் வேளை இது. இதற்கிடையில் முக்கியமான மற்றொரு தேர்தலின் முடிவுகள் வெளியாகி இருக்கின்றன. அது என்ன?

ஐஆர்எஸ் என்னும் இந்திய இதழியல் வாசக கணக்கெடுப்பு 2006 முடிவுகள் வெளியிடப் பட்டுள்ளன. இந்த முடிவுகளின் படி முந்தைய கணக்கெடுப்பிலிருந்து இதழ்களின் வாசக எண்ணிக்கையில் பெரும் வீழ்ச்சி தென்படுகிறது.

முதல் இடத்தில் இருக்கும் ஸரஸ் ஸலில் இந்தி இதழ் 63 லட்சம் வாசக எண்ணிக்கை கொண்டுள்ளது. ஆயினும் இது முந்தைய எண்ணிக்கையான 73.61 லட்சத்திலிருந்து பெரும் வீழ்ச்சி கண்டுள்ளது. இரண்டாவது இடத்திலிருக்கும் மலையாள இதழான வனிதா 35.16 லட்சத்திலிருந்து 33.1 லட்சமாகக் குறைந்துள்ளது. 31.93 லட்சத்திலிருந்து 27.7 லட்சமாக இறங்கியுள்ள க்ரிஹஷோபா இந்தி இதழுக்கு மூன்றாமிடம்.

37.59 லட்சம் வாசகர்களைக் கொண்டிருந்த குங்குமம் 26.3 லட்சம் வாசகர்களாக குறைந்தாலும் தமிழில் முதலாவது இடத்தையும் இந்திய அளவில் நான்காவது இடத்தையும் பிடித்துள்ளது. ஐந்தாவது இடத்திலிருக்கும் குமுதம் தமிழில் இரண்டாவது இடம் பெற்று வாசக எண்ணிக்கையில் 30.71 லட்சத்திலிருந்து 25.4 லட்சமாக குறைந்துள்ளது. .

28.49 லட்சத்திலிருந்து 24.4 லட்சம் வாசகர்களாக குறைந்துள்ள இந்தியா டுடேயின் இந்திப் பதிப்பு ஆறாவது இடத்தைப் பிடித்துள்ளது. ஏழாவது இடத்திலிருக்கும் ஆனந்தவிகடன் 25.5 லட்சத்திலிருந்து 23.4 லட்சத்துக்கு சென்று தமிழில் மூன்றாவது இடத்தில் உள்ளது.

ஆங்கில இதழ்களில் India Today முதலிடம், Reader’s Digest இரண்டாமிடம், General Knowledge Today மூன்றாவது இடமும் பெற்றுள்ளன.

தமிழில் பிரம்மாண்டமான தொலைக்காட்சி விளம்பரங்கள் மூலமும் ஏராளமான இலவச இணைப்பு பரிசுகளின் மூலமும் பெற்ற முதலிடத்தை குங்குமம் தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டு வாசக ஈர்ப்பையும் அது தொடர்ந்து பேண முடிந்திருக்கிறது. நீண்ட கால முதலிடத்தை இழந்த குமுதம் அதை மீண்டும் பெற முயற்சித்ததாக தெரியவில்லை. விகடன் எப்போதுமே குமுதத்திற்கு பின்னால் நிற்பதிலேயே திருப்திப் பட்டுக்கொள்கிறது.

ஒரு முக்கிய அறிவிப்பு

2006-10-15

சில குறும்படங்கள்

சில தமிழ் குறும்படங்கள் இங்கே,,,

ஒலியும் ஒளியும்

2006-10-12

ரஜினி - ஆல்பம்-2

இன்னும் சில சிவாஜி பட ஸ்டில்கள். ரஜினி, ஸ்ரேயா.

முந்தைய ஆல்பம் இங்கே








சிவாஜி படக்காட்சிகள்



2006-10-11

தரவரிசையில் இந்தியப் பல்கலைக்கழகங்கள்

உலகின் அதிசிறந்த பல்கலைக்கழகங்கள் பட்டியலை top universities தளம் வெளியிட்டுள்ளது. அது குறித்த வெற்றியின் பதிவு இங்கே.

இங்கே நான் கூற வந்தது இந்தியப் பல்கலைக் கழகங்கள் எத்தனை இதில் இடம் பெற்றுள்ளன என்பதைப் பற்றியது. இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ள முதல் இருநூறு பல்கலைக் கழகங்கள் பட்டியலில் இந்தியப் பல்கலைக் கழகங்கள் மூன்று மட்டும் இடம் பெற்றுள்ளன.

தரவரிசைப் பட்டியலில் கடந்த ஆண்டு 50 வது இடத்தில் இருந்த ஐஐடி இந்த ஆண்டு 57 வது இடத்துக்கு பின்தங்கியுள்ளது. கடந்த ஆண்டு 84 வது இடத்தில் இருந்த ஐஐஎம் இந்த ஆண்டு 68 வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. கடந்த ஆண்டு 192 வது இடத்தில் இருந்த ஜவகர்லால் நேரு பல்கலை இந்த ஆண்டு 183 வது இடத்துக்கு வந்துள்ளது.

இந்தியாவின் மிகச்சிறந்த பல்கலைக் கழகங்களின் நிலையே இதுவென்றால் மற்ற பல்கலைக்கழகங்கள் உலகத்தரத்தில் எந்த இடத்தில் இருக்கும்?

கணினித்துறையில் சாதனைகளைப் புரிந்து வரும் இந்தியர்கள் இந்த உலகத்தரமில்லாத பல்கலைக்கழகங்களில் படித்து வந்தவர்களே என்று எண்ணும்போது வியப்பாகவும் இருக்கிறது.