2005-06-06

சிற்றிதழ்ச் செய்தி

பொள்ளாச்சி சூளேசுவரன்பட்டியைச் சேர்ந்த ம. நடேசன் என்ற நசன் 20 ஆண்டு ஆசிரியப்பணி புரிந்து நல்லாசிரியர் விருது பெற்றவர். இலக்கிய ஆர்வம் காரணமாக தமிழ் இலக்கியச் சிற்றிதழ்களைச் சேகரிக்க ஆரம்பித்த அவர் தமிழில் வெளியான ஏராளமான சிற்றிதழ்களை முழுவதுமாகச் சேகரித்துள்ளார். சுமார் 2500 க்கு மேற்பட்ட சிற்றிதழ்கள் அவரது சேகரிப்பில் உள்ளன.

அவற்றைத் தொகுத்து பட்டியலிட்டு வெளியிட சிறிய அச்சகம் ஒன்றைத் துவங்கி சிற்றிதழ்ச் செய்தி என்ற சிற்றிதழை தானே அச்சுக்கோர்த்து அச்சிட்டு வெளியிட்டார். இதழின் சார்பில் சிறந்த தமிழ்ச்சிற்றிதழ்களுக்கு ஆண்டு தோறும் பரிசுகள் வழங்கிச் சிறப்பித்தார். பின்னர் தமிழம் வலை என்ற இணையதளம் தொடங்கி சிற்றிதழ்ச் செய்தி இதழை அதன் இணைப்பாக, இணைய இதழாக வெளியிட்டு வருகிறார்.

பணி ஓய்வுக்குப் பிறகு தாய்த்தமிழ்த் தொடக்கப்பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார். தமிழ் மற்றும் பொதுவான கற்பித்தலுக்கான எளிய கருவிகளை ஆய்வு நோக்கில் உருவாக்கிச் செயல்படுத்தி வருகிறார். இணையத்தின் மூலம் தமிழ் கற்பித்து வருகிறார். தமிழ் இலக்கியங்களை கற்பிப்பதற்காக தமிழமுது வலைப்பல்கலைக்கழகம் ஆரம்பித்துள்ளார்.

சுமார் 15 ஆண்டுகளாக அவர் சேகரித்துச் சேர்த்த சிற்றிதழ்களை குறுவட்டுகளாக படிப்படியாக வெளியிட்டு வருகிறார். தமிழில் புதுக்கவிதை இயக்கத்தை வளர்த்த வானம்பாடி இதழை முழுமையாக சேகரித்து குறுவட்டாக வெளியிட்டுள்ளார்.

இவரது இணையத் தமிழ்ப்பணிகளின் தொடர்ச்சியாக தமிழ்வலைப்பதிவு ஒன்றைத் துவக்கி தமிழ் அறிஞர்களை அறிமுகம் செய்ய முனைந்துள்ளார். தமிழ் வலைப்பதிவர்கள் சார்பாக அவரை வரவேற்கிறேன்.

நசனின் வலைப்பதிவு: http://www.pollachinasan.blogspot.com/

4 comments:

Vijayakumar said...

பொள்ளாச்சி திரு. நசனின் பணி மகத்தானது. அவருடைய வலைத்தளம் என்னுடைய பேவரைட்களில் ஒன்று. அடிக்கடி நான் படிக்கும் முக்கிய தளங்களில் ஒன்று. இந்த பதிவுக்கு மிக்க நன்றி அனுராக்.

மீனாக்ஸ் | Meenaks said...

பொள்ளாச்சி நசன் அவர்களின் பணி மிகப் பாராட்டுதலுக்குரியது. அவருக்கு எனது வாழ்த்தும் வரவேற்பும்.

மு. சுந்தரமூர்த்தி said...

Anurag,
Thanks for this piece. Mr. Nasan's blog is not listed in 'thamizmanam'. Could you persuade or help him to join?

Chandravathanaa said...

ஊனத்தை வென்ற சாதனையாளன்