2005-10-22

சுந்தர ராமசாமி மறைவு: எழுத்தாளர்கள் அஞ்சலி

சுந்தர ராமசாமி உடல் தகனம்.

நாகர்கோவில்.அக்.21-

தமிழின் முதுபெரும் எழுத்தாளர் சுந்தர ராமசாமி கடந்த 15ம் தேதி அமெரிக்காவில் காலமானார். அவருடைய உடல் அமெரிக்காவிலிருந்து கொண்டு வரப்படுகிறது.

இறுதி மரியாதைக்காக இன்று (21ம் தேதி) வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நாகர்கோவில் 669, கேபி சாலை, சுந்தர விலாஸ் இல்லத்தில் வைக்கப் பட்டிருக்கும். 5 மணிக்கு உடல் செட்டிகுளம் பிள்ளையார் கோவில் அறக்கட்டளை மயானத்தில் தகனம் செய்யப்படும். மதச் சடங்குகள் எதுவும் இராது.

மாலை 6.30 மணிக்கு நெய்தல் சார்பில் ராமவர்மபுரம் பி.டி. பிள்ளை மண்டபத்தில் அஞ்சலி கூட்டம் நடை பெறும்.
***

Image hosted by TinyPic.com

நாகர்கோவில்.அக்.22-

தமிழகத்தின் முதுபெரும் எழுத்தாளர் சுந்தர ராமசாமியின் உடல் நாகர்கோவிலில் நேற்று தகனம் செய்யப்பட்டது. தமிழகம் மற்றும் கேரளாவை சேர்ந்த எழுத்தாளர்கள் பலர் அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

தமிழ் இலக்கிய உலகில் நாவல் மற்றும் சிறுகதை அடிப்படையில் ஒரு மாபெரும் மாற்றத்தை உருவாக்கிய எழுத்தாளராக சுந்தர ராமசாமி கருதப்படுகிறார். அவரது இரண்டாவது நாவலான ஜே.ஜே. சில குறிப்புகள் தமிழ் புதின வரலாற்றில் நவீன இலக்கிய தடத்தை பதித்தது. தமிழ் இலக்கிய உலகில் நீண்ட மைல்கல்லை கடந்து வந்துள்ள எழுத்தாளர் சுந்தர ராமசாமி கடந்த சில நாட்களாக நுரையீரல் பாதிப்பு காரணமாக அவதிப்பட்டு வந்தார். இதற்காக அமெரிக்காவில் சிகிட்சை பெற்று வந்த சுந்தராமசாமி கடந்த 15ம் தேதி காலமானார் அவரது உடல் அமெரிக்காவில் இருந்து நேற்று நாகர்கோவிலில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டுவரப்பட்டது.

தமிழ் மற்றும் மலையாள இலக்கிய உலகை சேர்ந்த எழுத்தாளர்களும், உறவினர்கள் பலரும் அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். காலை 10 மணி முதல் மாலை நான்கு மணி வரை அவரது உடலுக்கு இறுதி மாரியாதை செலுத்தப்பட்டது. எழுத்தாளர்கள் திலகவதி, பிரசன்னா ராமசாமி, பொன்னிலன், நாஞ்சில் நாடன், ஜெயமோகன், தேவேந்திர பூபதி, அப்பாஸ், சுகுமாரன், இளவேனில், சுகிர்தா ராணி, சல்மா, ரமேஷ், பிரமிள், வெங்கடாசலபதி, மோகன், நஞ்சுண்டான், கோணங்கி, உமாமகேஸ்வரி, தமிழ்செல்வன், கலாப்ரியா, மனுஷ்ய புத்திரன், விக்கிரமாதித்தன், ஓவியர் ஆதிமுலம், கேரள பல்கலைக்கழக தமிழ்துறை தலைவர் நாச்சிமுத்து, நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தமிழ்துறை தலைவர் பரமசிவன் ஆகியோர் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

மலையாள எழுத்தாளர்கள் புனத்தில் குஞ்ஞப்துல்லா, சக்கரியா, ஆற்றுர் ரவிவர்மா, மதுநாயர், தமிழ்நாடு கலைஇலக்கிய பெருமன்ற மாவட்ட தலைவர் ஸ்ரீகுமார், நெய்தல் கிருஷ்ணன், டாக்டர் நாச்சி முத்து, தமிழாலயம் பச்சைமால் ஆகியேரும் அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவரது உடல் நாகர்கோவிலில் உள்ள அவரது வீட்டில் இருந்து செட்டிக்குளம் பிள்ளையார் கோயில் அறக்கட்டளை மயானத்திற்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கு அவரது உடல் ஏற்கனவே அறிவித்தபடி மதசடங்குகள் எதுவுமின்றி தகனம் செய்யப்பட்டது.

தொடர்ந்து மாலை 6.30 மணிக்கு நெய்தல் அமைப்பு சார்பில் நகர்கோவில் பி.டி.பிள்ளை மண்டபத்தில் அவருக்கு நினைவு அஞ்சலி கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு தலைமை வகித்து பேராசிரியர் பத்மனாபன் பேசியதாவது:-

"சுந்தர ராமசாமியை எழுத்தாளர் என்பதைவிட நண்பர் என்னும் அடிப்படையில் அதிகமாக நான் அறிவேன். அவரது எழுத்துக்களை விட அவரது ஆளுமை மிகவும் எனக்கு பிடிக்கும். அவரது கவிதை,கட்டுரைகளை விட உரையாடல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். அவரது உரையாடல்கள் நிறைய பதிவு செய்யப்பட வில்லை. மாறுபட்ட கருத்துகள் இருந்தாலும், நட்பை பாதிக்காத வகையில் அவர் நடந்து கொள்வார். புதிய எழுத்தாளர்களுக்கான ஆதரவு, மனிதாபிமானம் ஆகியவை அவரை மனித நேயமுள்ள ஒரு மனிதராக படம்பிடித்துக் காட்டியது. ஒரு பெரிய பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் போல் மனதில் இடம்பிடித்த அவரது பிரிவு ஈடு செய்ய முடியாத இழப்பாகும்." இவ்வாறு அவர் பேசினார்.

தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் மாநில தலைவரும், எழுத்தாளருமான பொன்னீலன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியதாவது:-

"என்னோடு துவங்கி, புதிய எழுத்தாளர்களை அறிமுகப்படுத்துவதில் அதிக அக்கறையை அவர் காட்டி வந்தார். கவிஞனாக இருந்த என்னை நாவல் உலகத்திற்கு நுழைய செய்த பெருமை அவரையே சாரும். ஜீவாவின் தாக்கம், புதுமைப் பித்தனின் ஆளுமை, ரகுநாதனின் நட்பு ஆகியவை அவரை மிகவும் பாதித்திருந்ததை நான் அறிவேன்.

இடதுசாரிகளுடன் நெருக்கமாக இருந்த அவர் 1955ல் உலக அளவில் நடந்த மாறுதல் காரணமாக தன் எழுத்துக்களில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்திக்கொண்டார். தமிழ் இலக்கியத்தில் அவர் தடம் பதித்த முதல் நாவலான ஒரு புளிய மரத்தின் கதை இடதுசாரிகள் சிந்தனை கலந்தே எழுதப் பட்டுள்ளது. அவரை ஒரு மொழிபெயர்ப்பாளர் என்றும் சொல்லலாம். தகழியின் பல படைப்புகளை அவர் மலையாளத்தில் இருந்து மொழி பெயர்த்துள்ளார்.

தமிழ் இலக்கிய சூழலுக்கு பொருத்தமில்லாத குமரிமாவட்டத்தில் ஒரு இலக்கிய இதழை துவங்கி, இங்கிருந்து சென்னைவரை ஒரு தாக்கத்தை அவர் ஏற்படுத்தினார். அந்த இதழ் வியாபார தன்மையற்று இருந்தது மற்றுமொரு சாதனையாகும். சென்னையில் சென்று வாங்க வேண்டிய புத்தகங்களைக்கூட இங்கு வாங்கும் அளவிற்கு ஒரு பெரிய புத்தக நிறுவனத்தை அவர் துவங்கியதும் ஒரு சாதனை தான். எழுத்து உலகிற்கு அவருடைய இழப்பு மிகப்பெரிய பேரிழப்பாகும்." இவ்வாறு அவர் பேசினார்.

இரங்கல் கூட்டத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த எழுத்தாளர்கள், பேராசிரியர்கள், மறைந்த எழுத்தாளரின் குடும்பத்தினர், உறவினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

செய்தி:- தினமலர் நாகர்கோவில். (அக். 21, 22.)
***
தமிழ்ப்பதிவுகள்

2005-10-18

மாமதயானையும் மறக்க இயலாத நாளும்

Image hosted by TinyPic.com

நாகர்கோவில் அருகிலுள்ள வேளிமலையில் உள்ள முருகன் கோயில் பிரசித்தமானது. இதனை குமாரகோவில் என்று அழைப்பார்கள். இங்கிருந்து நவராத்திரி உற்சவத்துக்காக ஆண்டு தோறும் திருவனந்தபுரத்துக்கு சுவாமி ஊர்வலம் செல்லும். வெள்ளிவாகனம் என்னும் குதிரை சிலையுடன் குண்டனி அம்மையும் கோரச்சாமியும் ஊர்வலம் செல்வதாக பெரியவர்கள் கூறுவர். கோரச்சாமி என்பது குமாரசாமியின் மருவல்.
(இந்தப் புராணத்தை பின்னொரு சமயம் எழுதுகிறேன்.) ஊர்வலத்தில் நெற்றிப்பட்டம் சூட்டி அலங்கரிக்கப்பட்ட யானைகளும் செல்வது வழக்கம். இந்த ஆண்டு இவ்வூர்வலம் குமாரகோவிலில் இருந்து செப்டம்பர் 30 அன்று புறப்பட்டது.

*
செப்டம்பர் 30 அன்று பகல் திருவனந்தபுரத்தில் என் சகோதரர் திருமணம் முடிந்து மணமக்களுடன் வாகனங்களில் திரும்பிக் கொண்டிருந்தோம். தமிழக எல்லைக்குள் நுழைந்து மார்த்தாண்டத்தை கடந்து சென்றபோது வழியில் காவலர்கள் நின்று வாகனங்களை திருப்பிக் கொண்டு செல்லுமாறு எச்சரித்துக் கொண்டிருந்தனர். எந்த வாகனமும் அதைப் பொருட்படுத்தாமல் முன்னேற நாங்களும் அதைப் பின்பற்றினோம். சற்று தூரத்தில் சில காவலர்கள் வண்டியை நிறுத்தி விட்டு இறங்கி ஓடிவிடுங்கள் என்று கத்திக் கொண்டே ஓடிவந்தனர். நாங்கள் நிதானமாக வண்டியை நிறுத்தி என்னவென்று கேட்க காவலரோ பதட்டத்துடன் "ஊர்வல யானைக்கு மதம் பிடித்துவிட்டது. இந்தப் பக்கமாக ஓடிவந்து கொண்டிருக்கிறது. உடனே இறங்கி ஓடிவிடுங்கள்..." என்று கூவினார்.

அதைக்கேட்டதும் மணமக்கள் வாகன ஓட்டுநர் காரை நிறுத்தி இறங்கி சாலையோரமாக போய் நின்று கொண்டார். பின்னால் வந்து கொண்டிருந்த எங்கள் காரோட்டி காரை ஓரமாக செலுத்தி அங்கே நின்று கொண்டிருந்த பேருந்தின் மறுபுறம் கொண்டு போய் நிறுத்தினார். சில நிமிடங்களில் வேகமாக எதிர்ப்புறமிருந்து ஓடிவந்து கொண்டிருந்த யானையை காண முடிந்தது. அதன் பின்னாலேயே துப்பாக்கியால் குறிபார்த்தபடி வேனில் தொற்றிக்கொண்டு போலீசார். ஒருவர் வேகமாக சைக்கிளை ஓட்டியபடி வர பின்னாலிருந்தவர் கையில் ஒரு பெரிய வாழைக்குலை. சைக்கிள்வேகமாக முன்னேறி யானையைக்கடந்து சென்றது. பின்னாலிருந்தவர் வாழைக்குலையை யானையின் முன்பாக எறிந்தார். யானை திரும்பிக்கூடப் பார்க்காமல் வாழைக்குலையைக் கடந்து சென்றது. யானை கண் மறைந்ததும் நாங்கள் அந்த இடத்தை விட்டு கிளம்பினோம். கிட்டத்தட்ட ஒரு கிலோமீட்டர் வந்த பிறகே யானையை பின்னே விரட்டி வந்த மக்கள் கூட்டம் எதிர்வரக்கண்டோம். அப்போ யானை எவ்ளோ வேகமா போயிருக்கும்?

இன்னும் இரண்டு கிமீ தூரத்தில் ஊர்வலத்தில் வந்த மற்றொரு யானையும், சப்பறங்களும், பக்தர்களும் நிறுத்தி வைக்கப் பட்டிருந்தனர். அந்த இடத்தில் தான் யானைக்கு மதம் பிடித்திருக்கிறது. யானைக்கு மதம் பிடித்து ஓடினாலும் உண்மையில் அது யாரையும் துன்புறுத்தவில்லை. சாலையின் மத்தியக் கோட்டை ஒட்டியே பல கிலோமீட்டர் தூரம் ஓடி கடைசியில் ஒரு சிறிய கோவிலருகே படுத்துக் கொண்டதாக மறுநாள் பத்திரிகைகளில் பார்த்துத் தெரிந்து கொண்டோம்.

முதுமலைக் காடுகளில் காட்டு யானைக் கூட்டத்துக்கு நடுவே ஜீப்பில் சாகச சவாரி செய்தபோது கிட்டாத திரில்லை இங்கே அனுபவித்தோம். கையில் டிஜிட்டல் கேமராவை வைத்துக் கொண்டு நான் எடுக்க மறந்த ஷாட்டை கல்யாண போட்டோகிராபர் எடுத்துத் தந்தார்...

2005-10-16

சுரா எனும் எழுத்துச்சுடர் அணைந்தது

Image hosted by TinyPic.com


ஒரு மாத இடைவெளிக்குப் பிறகு இன்று தான் மீண்டும் வலைப்பதிவுகளை வாசிக்க முடிந்தது. காலை ஆறரை மணிக்கு இணையத்தில் நுழைந்து தமிழ்மணத்தில் பதிவுகளின் தலைப்புகளை மேய்ந்த போது சுந்தரமூர்த்தி மற்றும் தங்கமணி எழுதிய பதிவுகளைப் பார்த்து அதிர்ச்சியாகி விட்டது. கூகுளில் செய்திகளைத் தேடியபோது மலையாள மனோரமா இணைய தளத்தில் மட்டுமே சுராவின் மரணச்செய்தி வெளியிடப் பட்டிருந்தது. பின்னும் தேடியபோது News Today, NewKerala.com, Webindia123 போன்ற தளங்களில் காண முடிந்தது. தமிழ் யூனிகோடில் இந்தச்செய்தியை அந்த நேரத்தில் எந்தத் தளத்திலும் காணமுடியவில்லை.

காலை செய்தித்தாள்கள் வந்த பிறகு பார்த்ததில் தினமணியில் மட்டும் முதல்பக்கத்தில் குறிப்பு கொடுத்து உள்ளே விரிவாக சுராவின் வாழ்க்கைக் குறிப்பு வெளியிட்டிருந்தார்கள். தினமலரில் உள்ளே செய்தி இருந்தது. தினத்ததந்தியில் இந்தச் செய்தியை காணவில்லையென்று நண்பர் சொன்னார்.

ஆனால் மலையாளப் பத்திரிகைகளில் முதல் பக்கத்திலேயே புகைப்படத்துடன் விரிவான முக்கியச்செய்தியாக சுராவின் இறப்பு பதிவு செய்யப்பட்டிருந்தது.

அவர் மலையாள இலக்கியங்கள் பலவற்றை மொழி பெயர்த்ததும், மலையாளத்தில் மொழி பெயர்க்கப்பட்ட அவரது படைப்புக்கு சாகித்ய அகாதமி விருதை மொழி பெயர்ப்பாளர் பெற்றதும் அவர்களுக்குப் பெருமைக்குரிய விஷயங்கள்.

தேசிய விருது பெறாத சிவாஜியைப்போல சாகித்ய அகாதமி விருது பெறாமலே இறந்துவிட்ட சுராவின் படைப்புகள் பலமுறை விவாதத்துக்குள்ளாகி இருக்கின்றன. கடைசியாக பிள்ளை கெடுத்தான்விளை வரை!

* * *
92ல் உதயதாரகையை வெளியிட்ட சமயம் நான் நாகர்கோயில் செல்ல வேண்டியிருந்தது. அப்போது சுராவை சந்தித்து இதழை கொடுக்க விரும்பி அவரது வீட்டுக்குச் சென்றேன். அவர் ஊரில் இல்லை என்பதை அறிந்து கடையில் அவர் மகன் கண்ணனைச் சந்தித்து இதழைக் கொடுத்தேன். இன்னொரு முறையும் நான் சென்ற வேளை அவர் அமெரிக்காவில் இருப்பதாக அறிந்தேன். இப்படியாக அவரைச் சந்திக்கும் வாய்ப்பு தவறிவிட்டது.

என் சக சிற்றிதழ் நண்பர்கள் அவரைச் சந்தித்துப் பேசிவிட்டு வருவதும் அடுத்த இதழிலேயே அவரை கடுமையாக விமர்சிப்பதும், அதே நண்பர்கள் மீண்டும் அவரைச் சந்திக்கும் போது அவரும் எதையும் மனதில் வைத்துக்கொள்ளாமல் பேசுவதும் இலக்கியமும் வாழ்க்கையும் குறித்த பல புரிதல்களை எனக்குத் தந்துள்ளன.

அவரது படைப்புகள் தந்த அனுபவங்கள் என்பது நான் புதிதாக எதுவும் சொல்ல அவசியமில்லை. ஒவ்வொரு வாசகனும் ஒவ்வொரு படைப்பாளியும் தவிர்க்க இயலாத படைப்புகள் அவருடையவை. அவரது விமர்சகர்களாலும் மதிக்கப்படும் நமது காலத்தின் படைப்பாளிக்கு அஞ்சலி.

2005-08-15

ஒரு வேண்டுகோள்

இன்று இந்தியாவுக்கு விடுதலைத் திருநாள். 58 வருடங்களுக்கு முன் அன்னிய அடிமைத் தனத்திலிருந்து விடுதலை பெற்றதன் நினைவுநாள். இந்நாளில் இன்று அன்னிய நாடுகளின் சிறைச்சாலைகளில் அடைபட்டுக் கிடக்கும் இந்தியர்களைப்பற்றிய ஒரு வேண்டுகோளுடன் வந்திருக்கிறேன்.

பல்வேறு வெளிநாடுகளில் சிறைகளில் வாடும் இந்தியர்கள் பற்றிய தகவல்களை நாம் அவ்வப்போது பல செய்தி ஊடகங்களில் அறிய முடிகிறது. அது போலவே தங்கள் குடும்ப நலனுக்காக பிழைப்புத்தேடி அரபு நாடுகளுக்கு வரும் ஏழை இந்திய இளைஞர்கள் ஏஜென்டுகளால் ஏமாற்றப்படுவது, குறைந்த சம்பளம், அறிவிக்கப்பட்ட வேலைக்கு பதிலாக வேறு வேலை தரப்படுவது என பல விதங்களில் அலைக்கழிக்கப் படுகிறார்கள். இதையெல்லாம் மீறி வேலையில் அமர்ந்து ஓரளவு சம்பாதிக்கத் தொடங்குபவர்களுக்கும் பல சிக்கல்கள் காத்திருக்கின்றன.

வெளிநாட்டு வேலைக்காக வட்டிக்கு கடன் வாங்கி அனுப்பப் படும் அவர்கள் பல்வேறு குற்றங்களுக்காக அயல்நாட்டுச் சிறைகளில் அடைக்கப்படும் நிலையில் அந்தக்குடும்பங்கள் படும்பாடு சொல்லி மாளாது. சவுதி அரேபியா போன்ற நாடுகளின் சிறைகளில் வாடும் இந்தியர்கள் பற்றிய தகவல்கள் இந்திய தூதரகத்துக்கே கூட தெரிவிக்கப் படுவதில்லை என்னும் அதிர்ச்சிகரமான தகவல் இந்த அதிர்ச்சியை மேலும் அதிகமாக்குகிறது.

எனக்குத் தெரிந்த ஒரு நண்பர் சாலை விபத்து தொடர்பான வழக்கில் சிறையிலிருப்பது தொடர்பாக ஒரு பதிவு எழுதியிருந்தேன். அதைப்படித்த நண்பர் சாகரன் அவரது நண்பர் திரு வெற்றிவேல் மூலமாக இந்திய தூதரகத்துடன் தொடர்பு கொண்டு இதைக்குறித்து அவ்வப்போது தகவல் தெரிவித்து வந்தார்.

சமீபத்தில் அவ்வாறு கிடைத்த ஒரு தகவலை அவர் அனுப்பியிருந்தார். அதன்படி சவுதி அரேபியச்சிறைகளில் வாகன விபத்து வழக்குகளில் சிறையிலிருக்கும் இந்தியர்கள் ஆறு பேர் குறித்த தகவல்கள் அவர்களின் உறவினர்களின் முறையீடுகளால் இந்திய தூதரகத்தில் அறியப்பட்டிருக்கிறது. இன்னும் கூட பலர் இருக்கலாம் என்றாலும் இவர்கள் ஆறு பேர் குறித்த தகவல்கள் மட்டுமே இதுவரை கிடைக்கப் பட்டிருக்கிறது.

U.V.குமரன் (கேரளா)
மைனுதீன்
K.E. வாஷிங்டன் (மகாராஷ்ட்ரா)
காவும்புறத்து ஹம்சா (கேரளா)
முகமது அவுசத் (உத்தரப் பிரதேசம்)
அகஸ்டின் துரைசாமி (தமிழ்நாடு)

இவர்கள் BLOOD MONEY எனப்படும் நஷ்ட ஈட்டுத் தொகையை அபராதமாகச் செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்தாவிட்டால் தங்கள் எஞ்சிய வாழ்நாளை சவுதி அரேபிய சிறையில் கழிக்க வேண்டியதுதான்.

வெளிநாட்டு வேலைக்காக வாங்கிய கடன்களே தீர்ந்திராத நிலையில் இந்த அபராதத்தை இவர்கள் எப்படி செலுத்தப்போகிறார்கள்? அபராதம் கொஞ்சநஞ்சமல்ல. இந்திய பணமதிப்பில் பத்து லட்சம் ரூபாய் முதல் நாற்பத்தைந்து லட்சம் ரூபாய்வரை இவர்கள் செலுத்த வேண்டியிருக்கிறது.

இதற்காக வெளிநாடுவாழ் மலையாளிகள் கூட்டமைப்பு நன்கொடைகள் மூலம் நிதிதிரட்டி இவர்களை மீட்க முயற்சி எடுத்து வருகிறது. ரியாத் தமிழ்ச்சங்கமும் இம்முயற்சியில் இணைந்துள்ளது. ரியாத் இந்திய தூதரகம் இந்த முயற்சியை அங்கீகரித்து ஒத்துழைப்பு தருகிறது.

இத்தனை பெரிய தொகையை திரட்டுவதென்பது சாதாரண காரியமல்ல. ஆனாலும் சிறு துளி பெருவெள்ளம் என்பதால் ஒவ்வொருவர் தரும் சிறு தொகையும் இம்முயற்சிக்கு வளம் சேர்க்கும். இது ஆறு குடும்பங்களின் வாழ்வாதாரப் பிரச்சினை என்பதால் நம்மால் முடிந்த உதவியை செய்ய முயல்வோம். முடிந்தவர்கள் தங்களால் இயன்ற தொகையை இந்த முயற்சிக்கு பங்களிக்க வேண்டுகிறேன்.

நன்கொடைகள் அனுப்ப விவரம் & முகவரி:

The Embassy of India has agreed to receive funds from the Indian community and keep it in a separate account and register under the Community Welfare Wing. The donors making contributions must state specifically the name of the detainee for whom contributions are made.

Cheques and Drafts must be drawn in favor of “EMBASSY OF INDIA – INDIAN WORKERS WELFARE FUND” and posted to Embassy of India, P.O.Box No. 94387, Riyadh-11693, Saudi Arabia.

நன்கொடை அனுப்பும் வலைப்பதிவர்கள் sanuragc at yahoo.com மின்னஞ்சலுக்கு தகவலாக தெரிவித்தால் நன்று.

தொடர்புள்ள சுட்டி

ஓர் உதவிக்குறிப்பு
குறிப்பு:
திரு. அகஸ்டின் துரைசாமி விடுவிக்கப்பட சுமார் இருபது லட்சரூபாய் செலுத்த வேண்டியிருக்கும் எனத்தெரிகிறது. நன்கொடை அனுப்புவோர் யாருடைய விடுதலைக்காக என்பதைக் குறிப்பிட்டே அனுப்ப வேண்டும். இதன்மூலம் குறிப்பிட்ட ஒருவரை விடுவிப்பதற்கான தொகை சேர்ந்தவுடன் அவரது விடுதலைத்தொகை செலுத்தப்பட்டு அவர் விடுவிக்கப்பட முடியும்.

2005-08-07

திருவாசகம் உருக்குகிறதா?

இளையராஜாவின் திருவாசக ஒலிவட்டு வெளியானது முதல் அதற்கு பலதரப்பட்ட விமர்சனங்களும் வந்து விட்டன. இன்றும் வந்து கொண்டுள்ளன. தமிழின் பெருமை, அரிய முயற்சி என்ற வகையில் அதைக் குறை கூறக்கூடாது எனவும், அதன் அசல் ஒலிவட்டையே எல்லோரும் வாங்கி அதனை ஆதரிக்க வேண்டும் என்பதாகவும் தமிழ் வலைப்பதிவுகளிலும் பிறவற்றிலும் பல நண்பர்கள் எழுதிய கருத்துக்களை வாசிக்க முடிந்தது.

இதனால் நானும் அசல் வட்டு கிடைக்கும் வரை கேட்பதில்லை என்று காத்திருந்தேன். சென்னையில் ஒரு பிரபலமான கடையில் வாங்கிவரப்பட்ட திருவாசக ஒலிவட்டை கணினியில் போட்டுக் கேட்டபின் சிலவற்றை எழுத வேண்டுமென்று தோன்றியது.

இளையராஜாவின் முயற்சி பாராட்டத் தக்கது. சிம்பொனி இசைக்குள் திருவாசகத்தை கொண்டு வந்திருப்பது அதற்கு உலகளாவிய அங்கீகாரத்தை பெற்றுத்தரும் என்பதும் மகிழ்ச்சிக்குரியது. திண்ணையில் நாக இளங்கோவன் எழுதிய விமர்சனத்தில் இசைமுழக்கம் அதிகமாக இருப்பதான கருத்தை தெரிவித்துள்ளார். ஆனால் அதுவும் கூட சிம்பொனியின் தன்மையால் விளைந்ததுதானே தவிர வேறு வலிந்த பெருகோசை அல்ல. மற்றபடி இளங்கோவன் கூறியுள்ள பிழைகள் குறித்த கருத்துகள் ஆழமானவை. ஞாநி பாடலையோ இசையையோ அல்லாமல் திருவாசக இசை வெளியீட்டின் பின்னணி குறித்த தன் பார்வையை முன்வைத்துள்ளார். சாருநிவேதிதாவும் தன்பங்குக்கு தன்பாணியில் திருவாசக இசைக்கு அப்பாற்பட்டு இளையராஜாவை விமர்சனம் செய்திருக்கிறார். இவை போன்ற ஆழமான பின்னணி முன்னணிகளுக்குள் நுழையாமல் பாமர இசை ரசிகனாக இதைப் பார்ப்போம்.

நான் கேட்டவரையில் இசை வித்தியாசமான முயற்சி. புதிய அனுபவமாகவும் இருக்கிறது. பாடலின் உணர்வுகளுக்குள் நுழைந்து கேட்டால் உருக்கும் என்று சொல்லமுடியா விட்டாலும் இனிமையாகத் தான் இருக்கிறது.

குரல் தான் கொஞ்சம் உறுத்துகிறது. இளையராஜா தானே பாடியிருக்க வேண்டாம். ஹரிஹரன் அல்லது எஸ்பிபி பொருத்தமாக இருந்திருப்பார்கள். எப்போதோ எதிலோ திருவாசகத்திலிருந்து ஒரு துண்டு எஸ்பிபி பாடிக்கேட்டிருக்கிறேன். அதன் உருக்கம் இதில் குறைவுதான் என்னைப்பொறுத்தவரை.

இது உலகளாவிய இசை முயற்சி என கூறப்பட்டிருப்பதால் ஒலிவட்டின் தரமும் அப்படி இருந்திருக்க வேண்டும். ஆனால் கணினியில் போடும்போது ஒலிவட்டில் பாடல்களின் விபரமும் பாடகர்களின் விபரங்களும் கூட பதிவு செய்யப்படாமல் track1,track2 என பல்லிளிக்கிறது. அதனால் அது அசலா நகலா என்று சந்தேகமே வருகிறது. CD வாங்கிய நண்பர்கள் இதனை பரிசோதித்து உங்களுக்கு என்ன வருகிறது என்பதை தெரிவிக்கவும்.

இது குறித்த பத்ரியின் வலைப்பதிவு

2005-08-06

காதல் விரோதி

வழக்கம் போல நரேந்திரமோடி அரசு சத்தம் போடாமல் ஒரு சமூகப் புரட்சிக்கு மூடுவிழா நடத்தியிருக்கிறது. இன்றைய சமூகத்தில் சாதி ஒழிப்பை நடைமுறைப்படுத்தும் முக்கியமான ஒரு காரணிக்கு குஜராத்தில் சாவுமணி அடிக்கப் பட்டிருக்கிறது.

திருமணங்கள் பெற்றோர் சம்மதமின்றி பதிவு செய்யப்படக்கூடாது என்றொரு உத்தரவை திருமணப் பதிவாளர்களுக்கும் வழக்குகள் தொடர்பான ஆவணங்களாக பெற்றோர் சம்மதத்துடன் கூடிய திருமணங்களையே சட்டப்பூர்வமானதாக ஏற்க வேண்டும் என நீதிமன்றங்களுக்கும் குஜராத் அரசு அறிவுறுத்தி இருக்கிறது.

இந்திய சமூகத்தில் இன்றும் காதல் திருமணங்களை பெற்றோர் அங்கீகரிப்பதில் மிகப்பெரிய தயக்கம் இருக்கிறது. அதற்கான மிக முக்கியமான காரணி சாதி. காதல் சாதிமதம் பார்ப்பதில்லை. காதலர்களும் அவ்வாறே. ஆனால் திருமணத்தை அங்கீகரிக்க வேண்டிய பெற்றோர்கள் சாதி வேறுபாடு இருந்தால் கடுமையான எதிர்ப்பைக் காட்டுகிறார்கள். இந்தச் சூழ்நிலையில் காதலர்கள் திருமணம் செய்து கொள்ளவும் சட்டப்பூர்வமான பாதுகாப்பைப் பெறவும் பதிவுத் திருமணங்களையே நம்பியிருந்தார்கள். இந்நிலையில் குஜராத் அரசு கொண்டு வந்துள்ள இந்தப் புதிய உத்தரவு காதல் திருமணங்களை தடை செய்கிறது.

அதுமட்டுமல்லாமல் இந்திய அரசியல் சட்டப்படி திருமண வயதை அடைந்த ஒரு ஆணும் பெண்ணும் எந்தத் தடையுமின்றி திருமணம் செய்து கொள்வதற்கு இருந்த அடிப்படை உரிமையையே கேள்விக் குறியாக்குகிறது இந்த உத்தரவு. வயதுவந்த ஆணும் பெண்ணும் திருமண விஷயத்தில் என்றும் பெற்றோரை சார்ந்திருக்க வேண்டிய பழமைவாத கோட்பாடுகளுக்கு மீண்டும் இந்திய சமூகத்தை இட்டுச் செல்வதன் மூலம் கலப்புத் திருமணங்களை ஒழிப்பதும் அதன்மூலம் ஏற்படும் சாதிக்கலப்பு, சாதிமறுப்பு போன்றவற்றை தடுப்பதுமாகிய பிற்போக்குத் தனங்களை தொடர்ந்தும் நரேந்திர மோடியின் பிஜேபி அரசு மேற்கொண்டு வருகிறது.

இந்த அரசாணைக்கு சமூக ஆர்வலர்களிடமிருந்து பெரிய அளவில் எதிர்ப்பு எதுவும் கிளம்பாததற்கும் மோடி அரசின் தந்திரமான அணுகுமுறையே காரணம்.

பணத்துக்காக பெண்களை தந்திரமாக ஏமாற்றி திருமணம் செய்து கைவிடுவது, முன்னரே திருமணமான விஷயத்தை மறைத்து பெண்களை ஏமாற்றி பல திருமணங்கள் செய்வது போன்ற சமூக மோசடிகளிலிருந்து அப்பாவிப் பெண்கள் காப்பாற்றப்பட வேண்டும் என்று பல்வேறு தரப்பினரிடமிருந்து வந்த கோரிக்கை களாலேயே இந்த அரசாணை பிறப்பிக்கப் பட்டதாக அரசு செய்த தந்திரப் பிரச்சாரம் பெண்ணிய அமைப்புகளின் வாயை அடைத்து விட்டது. அரசு இதற்கு ஆதாரமாக காட்டியது இந்த அரசாணைக்கு வந்த பாராட்டுரைகள். அவை பெற்றோர்களிடமிருந்து வந்தவை என்பதை சொல்லவும் வேண்டுமா?

உண்மையில் ஏமாற்றித் திருமணம் செய்பவர்கள் பெரும்பாலும் சட்டப்பூர்வமான ஆதாரங்களை வைத்துக்கொண்டு திருமணம் செய்யமாட்டார்கள் என்பதும், உண்மையான காதலர்களே பதிவுத்திருமணங்களை அதிகம் நாடுபவர்கள் என்பதும் மறக்கப் பட்டு விட்டது. ஏமாற்றும் நோக்கமுடையவர்களில் மிகச்சிறு சதவீதத்தினரே பதிவுத்திருமணம் செய்பவர்கள். அவர்களை தண்டிப்பற்காக அல்லது கண்டறிவதற்காக இந்த உத்தரவு பிறப்பிக்கப் பட்டதாக சொல்லப் பட்டாலும் உண்மையில் இதனால் பாதிக்கப் படுவது முழுக்க முழுக்க கலப்புத்திருமணம் செய்யும் காதலர்களே என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

பெற்றோர்களால் செய்யப்பட்டு வந்த பால்ய விவாகங்களை நிறுத்த சமூகப்புரட்சிகள் பல தேவைப்பட்டன. குறிப்பிட்ட வயதுவந்தோர் திருமண உரிமை சட்டமாக்கப் பட்ட ஒன்று. இன்று இத்தகைய பிற்போக்குத்தனங்களால் நமது முன்னோர்கள் பாடுபட்டு உருவாக்கிய அடிப்படை மனித உரிமைகள் ஒவ்வொன்றாகப் பறிபோய்க் கொண்டிருக்கின்றன. அவற்றை மீட்டெடுக்க குரல் கொடுக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை.

2005-08-02

முனைவர் அ. சிவசூரியன்.

தஞ்சை கல்யாணசுந்தரம் மேனிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணிபுரியும் முனைவர் அ. சிவசூரியன் செய்திருக்கும் தமிழ்ப்பணி மகத்தானது.

1988 முதல் 2005 வரை 315 வாரங்கள் தொடர்ச்சியாக தனி திருக்குறள் வகுப்புகள் நடத்திய சிறப்பான சாதனை இவருடையது.

"திருக்குறள் 20 ஆம் நூற்றாண்டுப் புத்துரைகள்" என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றிருக்கும் இவர் திருக்குறளை மையப்படுத்தி எழுதியது 'ஒளி பிறந்தது' என்னும் சிறுவர்களுக்கான சிறுகதைத் தொகுதி.

தனது இல்லத்தில் திருக்குறள் நூலகம் அமைத்து குறள் உரைகள், திருக்குறள் பற்றிய ஆய்வு நூல்கள், திருக்குறள் மொழிபெயர்ப்புகள் என திருக்குறளோடு தொடர்புடைய நூல்களை சேகரித்து வைத்து குறளில் ஆய்வு செய்யும் மாணவர்களுக்கு உதவி வருகிறார்.

1988 முதல் நாள்தோறும் தனது வீட்டு வாயிலிலும் பள்ளியிலும் தினந்தோறும் ஒரு குறளை அதன் பொருளுடன் எழுதி வருகிறார். 1988 முதல் இவர் ஆரம்பித்து நடத்திவரும் திருக்குறள் விளக்கத் தொடர் வகுப்புகள் ஒரு சுற்று முடிய நான்கரை ஆண்டுகள் ஆகிறது. இதனை ஞாயிறு தோறும் இடைவிடாமல் இதுவரை நடத்தி வருவது மிகப் பெரிய சாதனை.

தொலைக்காட்சியின் 'மகா........பா...ர...த...ம்' குழந்தைகளை ஆக்கிரமித்திருந்த காலகட்டத்தில் அந்த நேரத்திலேயே குறள் வகுப்புகளை நடத்தி அதில் குழந்தைகளும் தொடர்ந்து ஆர்வத்துடன் கலந்து கோண்டது வியப்புக்குரிய செய்திதான்.

2001ல் கரந்தையில் இவர் தொடர்வகுப்பை ஆரம்பித்தபோது அதுவரை பெரும்பாலும் ஏழைக்குழந்தைகளே பங்கேற்றிருந்த திருக்குறள் வகுப்புகளுக்கு திடீரென ஓரளவு வசதியான குழந்தைகள் பலர் வந்து குவிந்துள்ளனர்.

திருக்குறள் முழுவதும் ஒப்பித்தால் ஆயுள் முழுக்க அரசு ஆயிரம் ரூபாய் தருகிறது என்ற அறிவிப்பால் தான் இந்தக்கூட்டம் வந்திருக்கிறது. 'இது திருக்குறள் மனப்பாட வகுப்பல்ல; திருக்குறள் விளக்கத் தொடர்வகுப்பு' என்று சொன்னதும் அந்தப் புதிய கூட்டம் காணாமல் போயிருக்கிறது.

இவரிடம் பயின்ற பிரதீபா என்ற மாணவி அரசின் ஆயிரம் ரூபாய் பரிசு பெற்றதாக வந்த செய்திதான் அந்தக் கூட்டம் இந்த வகுப்புகளை நாடி வந்த காரணம்.

பிரதீபா

உலகின் முதல் பெண் 'பதின்கவனக்கலைஞர்'(தசாவதானி). இவர் சிறு வயதில் முதலில் 100 திருக்குறள்களை ஒப்பித்து பரிசு பெற்றதில் ஊக்கம் பெற்று 1330 குறள்களையும் பயிற்சி செய்து ஒப்பித்து பரிசுக்ள் பெற்றிருக்கிறார். இவரது தந்தை கோபிசிங் தான் இவரது திறமைகளைக் கண்டறிந்து அவரை பயிற்றுவித்திருக்கிறார்.

பிரதீபா திருக்குறள் ஒப்பித்து பரிசுகள் பெற்ற செய்தியையும் அவர் தமது பள்ளியிலேயே பயிலும் மாணவி என்பதையும் அறிந்து முனைவர் சிவசூரியன் அவரை ஊக்கப் படுத்தியிருக்கிறார். பின்னர் பிரதீபா திருக்குறள் தொடர் வகுப்புகளுக்கும் சென்று உச்சரிப்புத் தெளிவும், குறள் விளக்க உரைகளையும் பயின்றிருக்கிறார்.

பிரதீபாவின் தாய்மொழி தமிழல்ல; 'இந்தி' என்பது இங்கு குறிப்பிடத்தக்க செய்தி.

பின்னர் கன்னியாகுமரியில் நடைபெற்ற திருவள்ளுவர் சிலைத்திறப்பு விழாவின்போது திருக்குறள் ஒப்பித்தலில் பிரதீபாவும் கலந்து கொண்டு ஆயுள் முழுக்க ஆயிரம் ரூபாய் பரிசைப் பெற்றார்.

பிரதீபா தற்போது கணிப்பொறியாளராக பெங்களூரில் பணிபுரிந்து வருகிறார். (?!)

தகவல்: நன்றி: சௌந்தரசுகன்.