2005-12-10

இன்னுமொரு பாட்டு

இன்று தொலைக்காட்சியில் ஒரு பாடல் பார்க்க/கேட்க நேர்ந்தது.

மனசே மனசே மனசில் பாரம்
நண்பர் கூட்டம் பிரியும் நேரம்...

கல்லூரிப் பருவத்தின் இறுதிநாள் பிரிவுபசார நிகழ்வில் பாடப்படும் பாடலாக ஸ்ரீகாந்த் சினேகா + நடித்திருந்தார்கள். படம் பெயர் தெரியவில்லை. அதைப் பார்த்தவுடன் எங்கள் கல்விப்பருவங்கள் நினைவுக்கு வந்தன.

அப்போதெல்லாம் வகுப்புகள் நிறைவுறும் நாளில் பள்ளி, கல்லூரிகளில் பாடப்படும் பிரியாவிடைப் பாடல் இதுதான்

பாடித்திரிந்த பறவைகளே... (படம்: இரத்தத் திலகம்)

அந்தப் பாடலின் கருத்தும் உணர்வும் எப்போது கேட்டாலும் அந்த நாளை நினைக்க வைத்துவிடும். அது போன்ற நினைவுகளை மீட்டிய பாடல்களை பட்டியலிட பாடல் ரசிகர்களை அழைக்கிறேன்.

2005-12-06

பாட்டுக்கள் தேடி...

ஒவ்வொரு பூக்களுமே...(ஆட்டோகிராப்)

மாதிரி தமிழில் நல்ல தன்னம்பிக்கைப் பாடல்கள் எத்தனை தேறும் என்று யோசித்தால்

தோல்வி நிலையென நினைத்து....(ஊமை விழிகள்)

உன்னால் முடியும் தம்பி தம்பி உனக்குள் இருக்கும் உன்னை நம்பி...(உன்னால் முடியும் தம்பி)

இவ்வளவுதான் என் நினைவுக்கு எட்டியது...

இந்தப் பட்டியலை பாடல் ரசிகர்கள் பின்னூட்டத்தில் தொடரலாம்...

2005-11-25

தேர்தல் ஜோதிடம்?

கேரளாவில் திருவனந்தபுரம் பாராளுமன்ற இடைத்தேர்தல் கடந்த அக்டோபர் 18 அன்று நடை பெற்றது. இத்தேர்தல் முடிவுகளை வாக்கு எண்ணிக்கை உட்பட தான் முன்கூட்டியே கணிக்கப்போவதாக கேரளாவைச் சேர்ந்த பிரபல மாஜிக் நிபுணர் கோபிநாத் முதுகாட் அறிவித்திருந்தார்.

இந்நிகழ்ச்சியை நடத்தக்கூடாது என அரசியல்வாதிகளும் பிற மேஜிக் நிபுணர்களும் மிரட்டல் விடுத்ததைத் தொடர்ந்து பொது நிகழ்ச்சியாக நடத்துவதைத் தவிர்த்த கோபிநாத் மாநில அமைச்சர் ஒருவர் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் இந்நிகழ்ச்சியை நடத்தினார். இதன்படி தேர்தல் நடப்பதற்கு முந்தைய நாள் 11 பேர்கள் கையெழுத்திட்ட காகிதத்தில் போட்டியிடும் மூன்று முக்கிய வேட்பாளர்கள் பெறும் வாக்குகளின் எண்ணிக்கையை எழுதினார். இந்தக்காகிதத்தை ஒன்றன் பின் ஒன்றாக ஒன்பது பெட்டிகளில் அடைத்து ஒவ்வொரு பெட்டிக்கும் தனித்தனியாக பூட்டு போடப்பட்டது. பின்னர் அதை வங்கி லாக்கரில் வைத்து சீல் செய்யப்பட்டது.

வாக்கு எண்ணிக்கை துவங்கிய உடன் கோபிநாத் ஒரு இரும்புக் கூண்டுக்குள் தன்னை சிறைப்படுத்திக் கொண்டார். வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு அமைச்சர் மற்றும் வங்கி பொது மேலாளர் ஆகியோர் பொறுப்பில் லாக்கர் திறக்கப் பட்டு பெட்டி வெளியே எடுக்கப் பட்டது இவை அனைத்தும் வீடியோ பதிவு செய்யப்பட்டு வெளியே இருந்த மற்றவர்களுக்கு நேரடி ஒளிபரப்புச் செய்யப்பட்டது.

பின்னர் ஒன்பது பெட்டிகளும் ஒவ்வொன்றாகத் திறக்கப் பட்டு உள்ளே இருந்த கவர் கேரள சபாநாயகரிடம் ஒப்படைக்கப் பட்டது. அவ்ர் அதைத்திறந்து அதிகாரப்பூர்வ தேர்தல் முடிவுகளுடன் ஒப்பிட்டார். சரியாக மூன்று முக்கிய வேட்பாளர்களும் கோபிநாத் கணித்து எழுதிய வாக்கு எண்ணிக்கையே பெற்றிருந்தனர். முடிவுகள் ஒப்பிடப்பட்டு சரிபார்க்கப்பட்டதும் கோபிநாத் மகிழ்ச்சியுடன் தான் சிறைப்பட்டிருந்த கூண்டுக்குள்ளிருந்து வெளியே வந்தார். மாஜிக் உலகில் இது ஒரு முக்கிய சாதனையாக கருதப்படுகிறது.

கோபிநாத் மாஜிக் அகாடமி ஒன்றை நடத்தி வருகிறார் இதன் மூலம் நிறைய மாணவர்களுக்கு மாஜிக் தந்திரங்களை கற்றுக்கொடுத்து வருகிறார். இது தவிர தொலைக்காட்சியிலும் தொடர் நிகழ்ச்சிகள் நடத்தும் கோபிநாத் பல எளிய மாஜிக் தந்திரங்களை தொலைக்காட்சியில் வெளிப்படையாக கற்பிக்கிறார். இவை பிற மாஜிக் நிபுணர்களுக்கு பெரும் கடுப்பை ஏற்படுத்தி உள்ளது. இவரது மாணவர்கள் பார்வையாளர்களாக உள்ள அரங்குகளில் அவர்கள் செய்யும் தந்திரங்கள் தோற்றுப் போய்விடுவதும் இதற்குக்காரணம்.

கோபிநாத் ஏற்கனவே தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தி ILLUTION INDIA என்ற மேஜிக் கலைநிகழ்ச்சியை நடத்தி புகழ்பெற்றவர். மரபு ரீதியான மாஜிக் ரகசியங்களும் நவீன மாஜிக் தந்திரங்களும் கலந்த புதுமை நிறைந்தவை இவரது நிகழ்ச்சிகள். தவிர வெறும் துணுக்கு மாஜிக் நிகழ்ச்சிகளாக இல்லாமல் பொதுவான ஒரு கருத்தை வலியுறுத்தும் மாஜிக் கலைநிகழ்ச்சிகள் இவரது தனிச்சிறப்பு.

இணைப்புகள்

1. வாக்கு முன்னறிவிப்பு-செய்தி 2. கோபிநாத்தின் இணையதளம்.

2005-11-20

சிவகாசி பட்டாசு..._\|/_

விஜய் நடித்த சிவகாசி திரைப்படம் வக்கீல்களை இழிவு படுத்துவதாகக் கூறி வக்கீல்கள் கடுமையான எதிர்ப்புக்குரல் எழுப்பினர். படத்தைத் தடை செய்யக்கோரியும் காட்சிகளை நீக்கக் கோரியும் வழக்குகளும் போடப்பட்டன. சமீபத்தில் சினிமாக் காட்சிகளுக்கும் வசனங்களுக்கும் சினிமாக்காரர்களின் பேச்சுக்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து எதிர்க்கும் போக்கு வலுத்து வருகிறது.

இதே தமிழ் சினிமாவில் தமிழக கவர்னரை வில்லனாகச் சித்தரித்து படம் வந்திருக்கிறது. முதல் அமைச்சரை கொடூரமான வில்லனாக்கியும் இங்கு பல படங்கள் வந்துள்ளன. கலெக்டர்களை கொடுமைக் காரர்களாகவும் லஞ்ச ஊழல்வாதிகளாகவும் காட்டி பல படங்கள் எடுக்கப் பட்டுள்ளன.மாநிலத்திற்கு ஒரே கவர்னர், ஒரே முதல்வர்தான். முப்பதுக்குள் தான் கலெக்டர்கள். இவர்களில் யாரும் அவை தங்களை சித்தரிப்பதாகவோ இழிவு படுத்தி விட்டதாகவோ கருதி படத்தை தடை செய்ய முயல வில்லை. அவர்களெல்லாம் அதைப் பொருட்படுத்தாமல் இருக்க, ஆயிரக்கணக்கில் இருக்கும் வக்கீல்கள் தங்கள் தொழில் பெயரை பயன்படுத்தி கிண்டலடித்ததற்காக போராட்டம் நடத்துகிறார்கள்.

இதற்கு முன் வக்கீல்களை மோசமானவர்களாகச் சித்தரித்தும் பல படங்கள் வந்துள்ளன. அதே சமயம் ஒரு வக்கீல் வில்லனாக இருந்தால் அதே படத்தில் மற்றொரு நல்ல வக்கீலும் இருப்பார். அல்லது ஹீரோவே (நல்ல) வக்கீலாக இருப்பார். சிவகாசியில் நகைச்சுவைக் காட்சியாகவே நண்பர்கள் கிண்டலடிப்பதாக வருவதற்கே இவ்வளவு எதிர்ப்பும்.

உண்மையில் பல இளம் வ்க்கீல்கள் தங்கள் நண்பர்களால் இதைவிட கேவலமாக கிண்டலடிக்கப்படுவதை நானே நேரில் கண்டிருக்கிறேன். வழக்குகள் குறைவாக உள்ள, அல்லது ஆரம்ப நிலையில் உள்ள வக்கீல்கள் தினமும் கோர்ட்டுக்கு சும்மா வந்து போய்க் கொண்டிருப்பார்கள். ஏதாவது ஜாமீன் அல்லது வாய்தாவுக்கு மட்டுமே அவர்களுக்கு வாய்ப்புக் கிடைக்கும். டீக்காசு மட்டுமே கிடைக்கக் கூடும் என்பதால் இவர்களை நண்பர்கள் 'ஆமைவடை' என்று கிண்டலடிப்பார்கள். (தினசரி ஆமைவடையும் டீயும் சாப்பிட மட்டுமே கோர்ட்டுக்குப் போகிறவர்கள் என்று அர்த்தம்.) இதுபோல இன்னும் கேவலமான பல பிரயோகங்கள் வழக்கத்தில் உள்ளன. அதில் 10% கிண்டல் கூட படத்தில் இல்லாத போதும் இத்தகைய எதிர்ப்புக்கு காரணம் என்ன? (யதார்த்தம் வேண்டும் என்பவர்கள் கவனிக்க)

தமிழன் படத்தில் வக்கீலாக நடித்து பெருமைப் படுத்திய விஜய் இதில் நகைச்சுவையாகக் காட்டியதை பெரிதாக எடுத்துக் கொண்டிருக்க வேண்டாமே என்று என் வக்கீல் நண்பரிடம் கேட்டேன்.

"பிரச்சினையே அதுதான். தமிழன் படத்தில் அவன் நல்ல வக்கீலாக நடித்திருக்கலாம். ஆனால் அந்தப்படத்தில் மற்ற வக்கீல்களை எல்லாம் சட்டம் தெரியாத கேனப்பயல்களாகவும் பொதுமக்களுக்குத் தெரிந்த சட்டம் கூட வக்கீல்களுக்குத் தெரியாதது போலவும் கேவலப்படுத்தி இருந்தான். அந்தப்படத்தை நாங்கள் எதிர்த்திருந்தால் பொதுமக்களிடம் அடி வாங்கியிருப்போம். அதான் பேசாமல் இருந்தோம். இப்போ வசமா மாட்டிக்கிட்டான்யா!" என்றார்.

இது எப்படி இருக்கு?

தமிழ்ப்பதிவுகள் | தமிழ் | வலைப்பதிவு | tamilblog | tamil | tamilblogs |

2005-10-31

தீபங்கள் ஒளிர்கின்றன.

தீபங்கள் ஒளிர்கின்றன.

குண்டு வெடிப்புகள

ரயில் விபத்துகள்

பட்டாசு விபத்துகள்

வெள்ளம், புயல், சூறாவளிகள்

உடலை விட்டகற்றிய

சில உயிர்களின் இறுதி தீபங்களும்.

2005-10-22

சுந்தர ராமசாமி மறைவு: எழுத்தாளர்கள் அஞ்சலி

சுந்தர ராமசாமி உடல் தகனம்.

நாகர்கோவில்.அக்.21-

தமிழின் முதுபெரும் எழுத்தாளர் சுந்தர ராமசாமி கடந்த 15ம் தேதி அமெரிக்காவில் காலமானார். அவருடைய உடல் அமெரிக்காவிலிருந்து கொண்டு வரப்படுகிறது.

இறுதி மரியாதைக்காக இன்று (21ம் தேதி) வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நாகர்கோவில் 669, கேபி சாலை, சுந்தர விலாஸ் இல்லத்தில் வைக்கப் பட்டிருக்கும். 5 மணிக்கு உடல் செட்டிகுளம் பிள்ளையார் கோவில் அறக்கட்டளை மயானத்தில் தகனம் செய்யப்படும். மதச் சடங்குகள் எதுவும் இராது.

மாலை 6.30 மணிக்கு நெய்தல் சார்பில் ராமவர்மபுரம் பி.டி. பிள்ளை மண்டபத்தில் அஞ்சலி கூட்டம் நடை பெறும்.
***

Image hosted by TinyPic.com

நாகர்கோவில்.அக்.22-

தமிழகத்தின் முதுபெரும் எழுத்தாளர் சுந்தர ராமசாமியின் உடல் நாகர்கோவிலில் நேற்று தகனம் செய்யப்பட்டது. தமிழகம் மற்றும் கேரளாவை சேர்ந்த எழுத்தாளர்கள் பலர் அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

தமிழ் இலக்கிய உலகில் நாவல் மற்றும் சிறுகதை அடிப்படையில் ஒரு மாபெரும் மாற்றத்தை உருவாக்கிய எழுத்தாளராக சுந்தர ராமசாமி கருதப்படுகிறார். அவரது இரண்டாவது நாவலான ஜே.ஜே. சில குறிப்புகள் தமிழ் புதின வரலாற்றில் நவீன இலக்கிய தடத்தை பதித்தது. தமிழ் இலக்கிய உலகில் நீண்ட மைல்கல்லை கடந்து வந்துள்ள எழுத்தாளர் சுந்தர ராமசாமி கடந்த சில நாட்களாக நுரையீரல் பாதிப்பு காரணமாக அவதிப்பட்டு வந்தார். இதற்காக அமெரிக்காவில் சிகிட்சை பெற்று வந்த சுந்தராமசாமி கடந்த 15ம் தேதி காலமானார் அவரது உடல் அமெரிக்காவில் இருந்து நேற்று நாகர்கோவிலில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டுவரப்பட்டது.

தமிழ் மற்றும் மலையாள இலக்கிய உலகை சேர்ந்த எழுத்தாளர்களும், உறவினர்கள் பலரும் அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். காலை 10 மணி முதல் மாலை நான்கு மணி வரை அவரது உடலுக்கு இறுதி மாரியாதை செலுத்தப்பட்டது. எழுத்தாளர்கள் திலகவதி, பிரசன்னா ராமசாமி, பொன்னிலன், நாஞ்சில் நாடன், ஜெயமோகன், தேவேந்திர பூபதி, அப்பாஸ், சுகுமாரன், இளவேனில், சுகிர்தா ராணி, சல்மா, ரமேஷ், பிரமிள், வெங்கடாசலபதி, மோகன், நஞ்சுண்டான், கோணங்கி, உமாமகேஸ்வரி, தமிழ்செல்வன், கலாப்ரியா, மனுஷ்ய புத்திரன், விக்கிரமாதித்தன், ஓவியர் ஆதிமுலம், கேரள பல்கலைக்கழக தமிழ்துறை தலைவர் நாச்சிமுத்து, நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தமிழ்துறை தலைவர் பரமசிவன் ஆகியோர் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

மலையாள எழுத்தாளர்கள் புனத்தில் குஞ்ஞப்துல்லா, சக்கரியா, ஆற்றுர் ரவிவர்மா, மதுநாயர், தமிழ்நாடு கலைஇலக்கிய பெருமன்ற மாவட்ட தலைவர் ஸ்ரீகுமார், நெய்தல் கிருஷ்ணன், டாக்டர் நாச்சி முத்து, தமிழாலயம் பச்சைமால் ஆகியேரும் அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவரது உடல் நாகர்கோவிலில் உள்ள அவரது வீட்டில் இருந்து செட்டிக்குளம் பிள்ளையார் கோயில் அறக்கட்டளை மயானத்திற்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கு அவரது உடல் ஏற்கனவே அறிவித்தபடி மதசடங்குகள் எதுவுமின்றி தகனம் செய்யப்பட்டது.

தொடர்ந்து மாலை 6.30 மணிக்கு நெய்தல் அமைப்பு சார்பில் நகர்கோவில் பி.டி.பிள்ளை மண்டபத்தில் அவருக்கு நினைவு அஞ்சலி கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு தலைமை வகித்து பேராசிரியர் பத்மனாபன் பேசியதாவது:-

"சுந்தர ராமசாமியை எழுத்தாளர் என்பதைவிட நண்பர் என்னும் அடிப்படையில் அதிகமாக நான் அறிவேன். அவரது எழுத்துக்களை விட அவரது ஆளுமை மிகவும் எனக்கு பிடிக்கும். அவரது கவிதை,கட்டுரைகளை விட உரையாடல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். அவரது உரையாடல்கள் நிறைய பதிவு செய்யப்பட வில்லை. மாறுபட்ட கருத்துகள் இருந்தாலும், நட்பை பாதிக்காத வகையில் அவர் நடந்து கொள்வார். புதிய எழுத்தாளர்களுக்கான ஆதரவு, மனிதாபிமானம் ஆகியவை அவரை மனித நேயமுள்ள ஒரு மனிதராக படம்பிடித்துக் காட்டியது. ஒரு பெரிய பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் போல் மனதில் இடம்பிடித்த அவரது பிரிவு ஈடு செய்ய முடியாத இழப்பாகும்." இவ்வாறு அவர் பேசினார்.

தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் மாநில தலைவரும், எழுத்தாளருமான பொன்னீலன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியதாவது:-

"என்னோடு துவங்கி, புதிய எழுத்தாளர்களை அறிமுகப்படுத்துவதில் அதிக அக்கறையை அவர் காட்டி வந்தார். கவிஞனாக இருந்த என்னை நாவல் உலகத்திற்கு நுழைய செய்த பெருமை அவரையே சாரும். ஜீவாவின் தாக்கம், புதுமைப் பித்தனின் ஆளுமை, ரகுநாதனின் நட்பு ஆகியவை அவரை மிகவும் பாதித்திருந்ததை நான் அறிவேன்.

இடதுசாரிகளுடன் நெருக்கமாக இருந்த அவர் 1955ல் உலக அளவில் நடந்த மாறுதல் காரணமாக தன் எழுத்துக்களில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்திக்கொண்டார். தமிழ் இலக்கியத்தில் அவர் தடம் பதித்த முதல் நாவலான ஒரு புளிய மரத்தின் கதை இடதுசாரிகள் சிந்தனை கலந்தே எழுதப் பட்டுள்ளது. அவரை ஒரு மொழிபெயர்ப்பாளர் என்றும் சொல்லலாம். தகழியின் பல படைப்புகளை அவர் மலையாளத்தில் இருந்து மொழி பெயர்த்துள்ளார்.

தமிழ் இலக்கிய சூழலுக்கு பொருத்தமில்லாத குமரிமாவட்டத்தில் ஒரு இலக்கிய இதழை துவங்கி, இங்கிருந்து சென்னைவரை ஒரு தாக்கத்தை அவர் ஏற்படுத்தினார். அந்த இதழ் வியாபார தன்மையற்று இருந்தது மற்றுமொரு சாதனையாகும். சென்னையில் சென்று வாங்க வேண்டிய புத்தகங்களைக்கூட இங்கு வாங்கும் அளவிற்கு ஒரு பெரிய புத்தக நிறுவனத்தை அவர் துவங்கியதும் ஒரு சாதனை தான். எழுத்து உலகிற்கு அவருடைய இழப்பு மிகப்பெரிய பேரிழப்பாகும்." இவ்வாறு அவர் பேசினார்.

இரங்கல் கூட்டத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த எழுத்தாளர்கள், பேராசிரியர்கள், மறைந்த எழுத்தாளரின் குடும்பத்தினர், உறவினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

செய்தி:- தினமலர் நாகர்கோவில். (அக். 21, 22.)
***
தமிழ்ப்பதிவுகள்

2005-10-18

மாமதயானையும் மறக்க இயலாத நாளும்

Image hosted by TinyPic.com

நாகர்கோவில் அருகிலுள்ள வேளிமலையில் உள்ள முருகன் கோயில் பிரசித்தமானது. இதனை குமாரகோவில் என்று அழைப்பார்கள். இங்கிருந்து நவராத்திரி உற்சவத்துக்காக ஆண்டு தோறும் திருவனந்தபுரத்துக்கு சுவாமி ஊர்வலம் செல்லும். வெள்ளிவாகனம் என்னும் குதிரை சிலையுடன் குண்டனி அம்மையும் கோரச்சாமியும் ஊர்வலம் செல்வதாக பெரியவர்கள் கூறுவர். கோரச்சாமி என்பது குமாரசாமியின் மருவல்.
(இந்தப் புராணத்தை பின்னொரு சமயம் எழுதுகிறேன்.) ஊர்வலத்தில் நெற்றிப்பட்டம் சூட்டி அலங்கரிக்கப்பட்ட யானைகளும் செல்வது வழக்கம். இந்த ஆண்டு இவ்வூர்வலம் குமாரகோவிலில் இருந்து செப்டம்பர் 30 அன்று புறப்பட்டது.

*
செப்டம்பர் 30 அன்று பகல் திருவனந்தபுரத்தில் என் சகோதரர் திருமணம் முடிந்து மணமக்களுடன் வாகனங்களில் திரும்பிக் கொண்டிருந்தோம். தமிழக எல்லைக்குள் நுழைந்து மார்த்தாண்டத்தை கடந்து சென்றபோது வழியில் காவலர்கள் நின்று வாகனங்களை திருப்பிக் கொண்டு செல்லுமாறு எச்சரித்துக் கொண்டிருந்தனர். எந்த வாகனமும் அதைப் பொருட்படுத்தாமல் முன்னேற நாங்களும் அதைப் பின்பற்றினோம். சற்று தூரத்தில் சில காவலர்கள் வண்டியை நிறுத்தி விட்டு இறங்கி ஓடிவிடுங்கள் என்று கத்திக் கொண்டே ஓடிவந்தனர். நாங்கள் நிதானமாக வண்டியை நிறுத்தி என்னவென்று கேட்க காவலரோ பதட்டத்துடன் "ஊர்வல யானைக்கு மதம் பிடித்துவிட்டது. இந்தப் பக்கமாக ஓடிவந்து கொண்டிருக்கிறது. உடனே இறங்கி ஓடிவிடுங்கள்..." என்று கூவினார்.

அதைக்கேட்டதும் மணமக்கள் வாகன ஓட்டுநர் காரை நிறுத்தி இறங்கி சாலையோரமாக போய் நின்று கொண்டார். பின்னால் வந்து கொண்டிருந்த எங்கள் காரோட்டி காரை ஓரமாக செலுத்தி அங்கே நின்று கொண்டிருந்த பேருந்தின் மறுபுறம் கொண்டு போய் நிறுத்தினார். சில நிமிடங்களில் வேகமாக எதிர்ப்புறமிருந்து ஓடிவந்து கொண்டிருந்த யானையை காண முடிந்தது. அதன் பின்னாலேயே துப்பாக்கியால் குறிபார்த்தபடி வேனில் தொற்றிக்கொண்டு போலீசார். ஒருவர் வேகமாக சைக்கிளை ஓட்டியபடி வர பின்னாலிருந்தவர் கையில் ஒரு பெரிய வாழைக்குலை. சைக்கிள்வேகமாக முன்னேறி யானையைக்கடந்து சென்றது. பின்னாலிருந்தவர் வாழைக்குலையை யானையின் முன்பாக எறிந்தார். யானை திரும்பிக்கூடப் பார்க்காமல் வாழைக்குலையைக் கடந்து சென்றது. யானை கண் மறைந்ததும் நாங்கள் அந்த இடத்தை விட்டு கிளம்பினோம். கிட்டத்தட்ட ஒரு கிலோமீட்டர் வந்த பிறகே யானையை பின்னே விரட்டி வந்த மக்கள் கூட்டம் எதிர்வரக்கண்டோம். அப்போ யானை எவ்ளோ வேகமா போயிருக்கும்?

இன்னும் இரண்டு கிமீ தூரத்தில் ஊர்வலத்தில் வந்த மற்றொரு யானையும், சப்பறங்களும், பக்தர்களும் நிறுத்தி வைக்கப் பட்டிருந்தனர். அந்த இடத்தில் தான் யானைக்கு மதம் பிடித்திருக்கிறது. யானைக்கு மதம் பிடித்து ஓடினாலும் உண்மையில் அது யாரையும் துன்புறுத்தவில்லை. சாலையின் மத்தியக் கோட்டை ஒட்டியே பல கிலோமீட்டர் தூரம் ஓடி கடைசியில் ஒரு சிறிய கோவிலருகே படுத்துக் கொண்டதாக மறுநாள் பத்திரிகைகளில் பார்த்துத் தெரிந்து கொண்டோம்.

முதுமலைக் காடுகளில் காட்டு யானைக் கூட்டத்துக்கு நடுவே ஜீப்பில் சாகச சவாரி செய்தபோது கிட்டாத திரில்லை இங்கே அனுபவித்தோம். கையில் டிஜிட்டல் கேமராவை வைத்துக் கொண்டு நான் எடுக்க மறந்த ஷாட்டை கல்யாண போட்டோகிராபர் எடுத்துத் தந்தார்...