2005-08-02

முனைவர் அ. சிவசூரியன்.

தஞ்சை கல்யாணசுந்தரம் மேனிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணிபுரியும் முனைவர் அ. சிவசூரியன் செய்திருக்கும் தமிழ்ப்பணி மகத்தானது.

1988 முதல் 2005 வரை 315 வாரங்கள் தொடர்ச்சியாக தனி திருக்குறள் வகுப்புகள் நடத்திய சிறப்பான சாதனை இவருடையது.

"திருக்குறள் 20 ஆம் நூற்றாண்டுப் புத்துரைகள்" என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றிருக்கும் இவர் திருக்குறளை மையப்படுத்தி எழுதியது 'ஒளி பிறந்தது' என்னும் சிறுவர்களுக்கான சிறுகதைத் தொகுதி.

தனது இல்லத்தில் திருக்குறள் நூலகம் அமைத்து குறள் உரைகள், திருக்குறள் பற்றிய ஆய்வு நூல்கள், திருக்குறள் மொழிபெயர்ப்புகள் என திருக்குறளோடு தொடர்புடைய நூல்களை சேகரித்து வைத்து குறளில் ஆய்வு செய்யும் மாணவர்களுக்கு உதவி வருகிறார்.

1988 முதல் நாள்தோறும் தனது வீட்டு வாயிலிலும் பள்ளியிலும் தினந்தோறும் ஒரு குறளை அதன் பொருளுடன் எழுதி வருகிறார். 1988 முதல் இவர் ஆரம்பித்து நடத்திவரும் திருக்குறள் விளக்கத் தொடர் வகுப்புகள் ஒரு சுற்று முடிய நான்கரை ஆண்டுகள் ஆகிறது. இதனை ஞாயிறு தோறும் இடைவிடாமல் இதுவரை நடத்தி வருவது மிகப் பெரிய சாதனை.

தொலைக்காட்சியின் 'மகா........பா...ர...த...ம்' குழந்தைகளை ஆக்கிரமித்திருந்த காலகட்டத்தில் அந்த நேரத்திலேயே குறள் வகுப்புகளை நடத்தி அதில் குழந்தைகளும் தொடர்ந்து ஆர்வத்துடன் கலந்து கோண்டது வியப்புக்குரிய செய்திதான்.

2001ல் கரந்தையில் இவர் தொடர்வகுப்பை ஆரம்பித்தபோது அதுவரை பெரும்பாலும் ஏழைக்குழந்தைகளே பங்கேற்றிருந்த திருக்குறள் வகுப்புகளுக்கு திடீரென ஓரளவு வசதியான குழந்தைகள் பலர் வந்து குவிந்துள்ளனர்.

திருக்குறள் முழுவதும் ஒப்பித்தால் ஆயுள் முழுக்க அரசு ஆயிரம் ரூபாய் தருகிறது என்ற அறிவிப்பால் தான் இந்தக்கூட்டம் வந்திருக்கிறது. 'இது திருக்குறள் மனப்பாட வகுப்பல்ல; திருக்குறள் விளக்கத் தொடர்வகுப்பு' என்று சொன்னதும் அந்தப் புதிய கூட்டம் காணாமல் போயிருக்கிறது.

இவரிடம் பயின்ற பிரதீபா என்ற மாணவி அரசின் ஆயிரம் ரூபாய் பரிசு பெற்றதாக வந்த செய்திதான் அந்தக் கூட்டம் இந்த வகுப்புகளை நாடி வந்த காரணம்.

பிரதீபா

உலகின் முதல் பெண் 'பதின்கவனக்கலைஞர்'(தசாவதானி). இவர் சிறு வயதில் முதலில் 100 திருக்குறள்களை ஒப்பித்து பரிசு பெற்றதில் ஊக்கம் பெற்று 1330 குறள்களையும் பயிற்சி செய்து ஒப்பித்து பரிசுக்ள் பெற்றிருக்கிறார். இவரது தந்தை கோபிசிங் தான் இவரது திறமைகளைக் கண்டறிந்து அவரை பயிற்றுவித்திருக்கிறார்.

பிரதீபா திருக்குறள் ஒப்பித்து பரிசுகள் பெற்ற செய்தியையும் அவர் தமது பள்ளியிலேயே பயிலும் மாணவி என்பதையும் அறிந்து முனைவர் சிவசூரியன் அவரை ஊக்கப் படுத்தியிருக்கிறார். பின்னர் பிரதீபா திருக்குறள் தொடர் வகுப்புகளுக்கும் சென்று உச்சரிப்புத் தெளிவும், குறள் விளக்க உரைகளையும் பயின்றிருக்கிறார்.

பிரதீபாவின் தாய்மொழி தமிழல்ல; 'இந்தி' என்பது இங்கு குறிப்பிடத்தக்க செய்தி.

பின்னர் கன்னியாகுமரியில் நடைபெற்ற திருவள்ளுவர் சிலைத்திறப்பு விழாவின்போது திருக்குறள் ஒப்பித்தலில் பிரதீபாவும் கலந்து கொண்டு ஆயுள் முழுக்க ஆயிரம் ரூபாய் பரிசைப் பெற்றார்.

பிரதீபா தற்போது கணிப்பொறியாளராக பெங்களூரில் பணிபுரிந்து வருகிறார். (?!)

தகவல்: நன்றி: சௌந்தரசுகன்.

No comments: