2004-12-26

பாதிப்பும் பார்வையும்

கடலின் சீற்றம் எத்தனை பாதிப்புக்களை ஏற்படுத்திச் சென்றிருக்கிறது என்பதும் போன உயிர்கள் தவிர இருக்கும் உயிர்களின் அத்தியாவசியத் தேவைகள் என்னென்ன என்பதும் தான் இனி சிந்தித்தாக வேண்டியவை. உலகளாவிய நிவாரண உதவிகள் கிடைக்கத் துவங்கியுள்ள நிலையில் முழுமூச்சாய் பலரும் நிவாரணப்பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு உழைப்பதைப் பார்க்க முடிகிறது. தேவைகள் மிக அதிகமாக உள்ளதால் சிலபல குறைபாடுகள் தென்பட்டாலும் உதவும் உள்ளங்களின் தன்னலமற்ற செயல்பாடுகள் அவற்றை ஈடு செய்யக்கூடும்.

முதல்வர், பிரதமர், மற்றும் தொடர்புடைய அமைச்சர்கள் தவிர மற்றவர்கள் பார்வையிடுகிறோம், ஆறுதல் கூற வந்தோம் என வந்து போவது தேவையற்றது மட்டுமல்ல நிவாரணப் பணிகளுக்கு இடையூறாகவும், அதிகாரிகளுக்குத் தொல்லையாகவும் அமைகின்றன.

அரசியல் சார்புள்ள தொலைக்காட்சிகள் இந்தக் கோர நிகழ்விலும் அரசியல் செய்யத் தவறவில்லை. சன் டிவியில் காட்டப்பட்டதெல்லாம் பார்த்தால் தமிழகத்தில் திமுக ஆட்சி நடப்பது போலவும் அவர்களே நிவாரண பணிகளை செய்வதாகவும் தோன்றியது. ஜெயா டிவியிலோ எல்லாம் அம்மா உத்தரவுப்படி நடைபெறுவதாக வரிக்கொரு தரம் உளறல் கேட்டது. கடல் பொங்கியதும் அம்மா உத்தரவுப்படிதானோ என்னவோ?. கலெக்டர்கள் பிற அதிகாரிகள் எல்லாம் இருப்பதாகவே இவர்களுக்குத் தெரியாது போலும். கடைசியில் உறக்கம் விழிப்பது என்னவோ அவர்கள் தான். அவர்களெல்லாம் சும்மா இருப்பது போலவும் எல்லாம் அரசியல்வாதிகள் தான் செய்வதாகவும் ஒரு மாயையை இவர்கள் உருவாக்கி வருகிறார்கள்.
திரும்பத் திரும்ப சடலங்களைக் குளோசப்பில் காட்டியதில் பாதிப்புக்குள்ளாகாத இடங்களிலும் பல பெண்கள் மயங்கி விழுந்தார்கள்..

வாழ்வே மாயம்

முதல் அடியில் கடற்கரைக் குடிசைகள் நாசமாகிவிட கடலோரம் இருந்தவர்கள் மண்ணுக்குள் புதையுண்டு போயினர். மிச்சம் மீதி இருந்தவர்களை கடல் இழுத்துக் கொண்டு போனது. குடிசைகள் மட்டுமல்ல பெரிய புதிய வீடுகளும் நிறையவே சேதமடைந்து விட்டன. வாகனங்கள் தூக்கியடிக்கப்பட்டு பாதி மண்ணுக்குள் புதையுண்டு சிதைந்து கிடந்தன. சுற்றுலா வந்தவர்கள், விழாக்கால விடுமுறைக்கு வந்தவர்கள், விடுமுறையில் விசேசங்களை நடத்த எண்ணியிருந்தவர்கள் என சகலரும் பூமிக்குள் புதையுண்டு போயினர்.
சகதிகளுக்கிடையிலிருந்து சாரி சாரியாக சடலங்களை எடுக்கத் தொடங்கிய போதுதான் சூழ்நிலையின் பயங்கரம் பலருக்கும் உறைத்தது. கும்பகோண நெருப்பு தந்த சோகம் மறைவதற்குள் வெள்ளம் உலகைச் சூறையாடி மற்றொரு சோக வரலாற்றை அரங்கேற்றி விட்டது. தப்பி ஓடி ஆங்காங்கே தஞ்சமடைந்தவர்கள் வரிசையாகக் கொண்டு வரப்பட்ட சடலங்களிடையே தங்கள் உற்றவரைத் தேடிக் கதறி அழத் தொடங்கினர்.

நேற்றிருந்தவர்கள்..... இன்றில்லை

கடல் கொண்டது...

வெளியே எழுந்த கூக்குரல் கேட்டு வாசலுக்கு வந்த பெண்கள் "எல்லாம் ஓடுங்க...கடல் ஊருக்குள்ள வருது" என்றபடி மக்கள் கூட்டம் ஓடிக்கொண்டிருந்தது கண்டு பதறியபடி தங்கள் பிள்ளைகளைத் தேடத் தொடங்கினார்கள்.
தகவல் கூறியபடி எல்லோரையும் விரட்டிக் கொண்டிருந்த இளைஞர்கள் "நீங்க ஓடுங்க...பிள்ளைக பின்னால வந்துருவாக..வெள்ளம் வேகமா வருது" என்று தடுத்து விரட்டினார்கள். புலம்பியபடி பெண்கள் போட்டது போட்டபடி ஓடினார்கள். வழியில் வந்து கொண்டிருந்த வேன் டாக்சி ஆட்டோக்களில் அவர்களை ஏற்றி அனுப்பினார்கள். பதறியபடி கட்டளைகளுக்கு அடிபணிந்த பெண்கள் பத்திரமான இடங்களில் இறக்கி விடப்பட்ட போதுதான் தங்கள் பிள்ளைகள் சகோதரர்கள் கணவர் மாமனார் மாமியார் என்ன ஆனார்களோ என்று புலம்பத் தொடங்கினார்கள்.
முதற்கட்ட ஓட்டத்தில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசைக்கு அழைத்துச் செல்லப் பட்டதில் தடுமாறினாலும் பின்னர் மற்ற இடங்களைக் கண்டுபிடித்து தங்கள் உறவுகளைத் தேடிக்கொண்டிருந்தார்கள். சிலர் கண்டடைந்து ஆசுவாசப் பட்ட நேரத்தில் உயிர்களும் உடமைகளும் வீடுகளும் குப்பையாய் வீசி எறியப்பட்ட கடற்கரையிலிருந்து வரிசையாய் பிரேதங்கள் மீட்கப் பட்டு எடுத்து வரப்பட்டுக் கொண்டிருந்தன.....

ஆர்ப்பரிக்கும் கடல்

இன்று காலை பக்கத்து வீடொன்றில் வசிக்கும் மீனவப்பெண்மணி அவர்கள் வீட்டு போன் வேலை செய்யவில்லை என்பதால் எங்கள் வீட்டில் வந்து யாருக்கோ போன் செய்தார். பலமுறை அடித்தும் பயனில்லை. என் மனைவியும் அவர்கள் நம்பரை வாங்கி அடித்துப் பார்த்து எங்கேஜ்டாகவே இருப்பதாகக் கூறிய போது கடல் கொந்தளிப்புக் குறித்தும் கடற்கரையோரம் வசிக்கும் தன் தம்பி வீட்டுக்குப் போன் செய்ய முயற்சிப்பதாகவும் கூறினார். அப்போது நான் அது வழக்கமான கடல் கொந்தளிப்புத் தான் என்றிருந்து விட்டேன். சற்று நேரத்தில் அருகில் உள்ள இன்னொரு வீட்டில் போன் வேலை செய்யாததால் வெளிநாட்டில் உள்ள அவர்களின் தம்பி எங்கள் தொலைபேசியில் அழைத்தார். அவர்களின் உறவினர்களும் கடற்கரையோரம் வசிப்பதால் அங்கேயும் தொலைத்தொடர்புகள் சேதமாகிவிட்டதால் தொடர்பு கொள்ள இயலவில்லை என்றார்.
அதன்பிறகே சன்னில் பார்த்து அதிர்ந்தேன்.
சற்று நேரத்திற் கெல்லாம் மூட்டை முடிச்சுகளுடன் நண்டும் சின்டுமாக பக்கத்து ஊர்களில் வசிக்கும் மேற்படி உறவினர்கள் பக்கத்துவீடுகளில் வந்து நிரம்பிக் கொண்டிருந்தார்கள். அவ்வப்போது போன் பேச வந்த அவர்கள் சொன்ன கதைகள் சன்னில் கண்டதை விட கோரமானவை.....

2004-10-07

தமிழ் சிற்றிதழ்-1-சௌந்தரசுகன்

தஞ்சையைச் சேர்ந்த சுகன் சிறுவனில் இருந்து இளைஞனாய் ஆன வயதுகளில் துவக்கி பதினெட்டு ஆண்டுகளாய் இடைவிடாமல் வெளியிடும் தரமான இலக்கிய மாத இதழ். ஆரம்பத்தில் சுந்தரசுகனாய் இருந்தது சமீபத்தில் சௌந்தரசுகனாக மாறியிருக்கிறது. சுகனின் துணைவியார் சு.சௌந்தரவதனா தற்போது வெளியீட்டாளர். (மனைவிக்கு மரியாதை!)
அரை சதம் பக்கங்களுடன் மாதந்தோறும் வெளியாகும் இந்த இதழ் சாதாரண அச்சில் இருந்து கணியச்சுக்கு மாறிவிட்டாலும் தன் வடிவ தனித்துவத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது. தரமான இலக்கியப் படைப்புகள், தனித்துவமிக்க கவிதைகள், கனமான கட்டுரைகளுடன் வெளியாகிறது. மாதந்தோறும் சுமார் மூவாயிரம் ரூபாய் இழப்பிலும் விளம்பரங்களே வெளியிடாமல் வருகிறது.
ஜூன் மாத இதழ் மூன்று மடங்கு அதிகப் பக்கங்களுடன் ஆண்டுமலராகவும் எழுத்தாளர் தஞ்சை பிரகாஷ் மரணத்திற்குப் பிறகு ஆகஸ்ட் இதழ்கள் பிரகாஷ் நினைவு மலராகவும் வெளியிடப்படுகிறது. கூர் என்ற தலைப்புடன் வரும் விரிவான வாசகர்கடிதங்களும் இலக்கிய மதிப்புடையவை. கடித இலக்கியம் என்னும் பகுதியில் பல எழுத்தாளர்களும் இதழாளர்களும் தங்களுக்குள் எழுதிக்கொண்ட சுவாரசியமான கடிதங்கள் வெளியிடப்படுகிறது.
சுகன் ஓவியங்களையும் வெளியிடுகிறது. இளம் ஓவியப் படைப்பாளிகளின் படைப்புகள் சுகனின் அட்டையையும் படைப்புகளையும் அலங்கரிக்கின்றன. தமிழ்ப் படைப்பாளிகள், இதழாளர்கள் மட்டுமல்லாமல் பிறமொழிப் படைப்பாளிகளின் விரிவான நேர்காணல்கள் இடம்பெற்றுள்ளன. இலக்கியம் அல்லாத பிறதுறைப் படைப்பாளிகளையும் விரிவாக அறிமுகம் செய்துள்ளது. புகழ் பெற்ற பல கவிஞர்களின் ஆரம்பக் களமாகவும் இருந்துள்ளது. சுகனில் வெளிவரும் சிறுகதைகளும் ஆழமானவை.
எழுதுகோலால் எண்ணக்கண் திறப்போம் என்பது சுகனின் குறியீட்டு முழக்கம். சுகன் தலையங்கங்கள் கூர்மையானவை.209 வது இதழான அக்டோபர் 2004 இதழின் தலையங்கத்திலிருந்து...

"உலகமயமாக்கலின் மாயக்கரங்களில் சிக்கிக் கொண்டு...இந்தியா அவதிக்கு தலையைக் கொடுத்துக் கொண்டிருக்கும் காலமிது. நமது அரசியல்வாதிகள் கீதை குறித்த சர்ச்சையில் இருக்கிறார்கள். கீதை உலகபொதுமறையா? அது இந்தியாவுக்கு முதலில் பொதுமறையா? நமக்கான விடியலை ஒரு போதும் கீதையிலிருந்து நாம் பெற முடியாது. இரண்டு முதலாளிகளின் பங்காளி சண்டையில்,தனது தங்கையை கட்டிக் கொடுத்தபக்கம் நின்று பல சதிகள் செய்து தேர்ந்த அரசியல்வாதியாக செயல்பட்டு, பல அப்பாவிகளை கொன்ற பிணபூமியில் நின்று வெற்றியை தக்க வைத்துக் கொண்ட கண்ணனின் மொழிகள் ஒருபோதும் பாட்டாளிகளுக்கு வழிகாட்டாது.
இன்றைய போராட்டம்....கொழுத்த முதலாளித்துவ திமிரில் பிற நாடுகளை அடிமைப் படுத்தி, சுரண்டும் அமெரிக்கத்தனத்திற்கும், தன்னை எப்படி எல்லாம் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதை பற்றிய சுரணையே இல்லாத, தங்களை கொள்ளையடிக்கிறார்கள் என்பதை அறியாத அப்பாவியான பல்லாயிரம் கோடி ஏழைமக்களுக்கும் இடையில் நடக்கிற தந்திர யுத்தம். இங்கே கீதையின் வழிகாட்டல் என்னவாய் இருக்கும். எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது என்பதாகவா....?
உலகமயமாக்கல் அணுக்கதிர் வீச்சில் திருக்குறள் எல்லாம் கூட காணாமல் போய்விடும் போலிருக்கிறது. தாய்மொழியை அறியாதவன் கையில் திருக்குறள் இருந்து பயன் என்ன? அதன் ஆங்கில மொழிபெயர்ப்பு அவனுக்கு உணர்வுபூர்வமான ஊக்கத்தை ஒரு நாளும் கொடுக்காது.உலகமயமாக்கலின் முக்கிய இலக்கு மொழிகளை அழிப்பதும் , கலாச்சாரங்களை அழித்து, ஒற்றைக் கலாச்சாரத்தை எப்படியும் கொண்டுவந்து விட வேண்டும் என்பதுதான். அப்போதுதான் வியாபார வழி சுரண்டலாம். இடுப்பை அப்பட்டமாய் காட்டுகிறது என்றுதான் தான் தாவணி தவிர்க்கப்பட்டதற்கு காரணம் சொல்லப்பட்டது. இன்றைக்கு அதற்கு பதிலாக வந்த ஆடைகள்.....எதை எதை எந்த எந்த அளவில் ஆபாசமாய் காட்ட வேண்டுமோ அப்படி காட்டிக் கொண்டிருக்கின்றன. இது தான் உலகமயமாதலின் கில்லாடித்தனமான அணுகுமுறை...."

சுகன் இதழ் தொடர்புக்கு

சுகன்
அம்மாவீடு,
சி-46-2-ஆம் தெரு
நகராட்சிக் குடியிருப்பு,
தஞ்சாவூர்- 613007

ஆண்டுச் சந்நா ரூ: 120, தனி இதழ் ரூ.10.

2004-10-05

தமிழ் சிறுபத்திரிகைகள்

தமிழ் இதழியலில், வெளிவரும் கால இடைவெளி சார்ந்த வகைப்படுத்தலில் நாளிதழ்,வாரமிருமுறை,வார,மாத இதழ்கள் என்போம். தரம் சார்ந்த மதிப்பீடாக ஜனரஞ்சக இதழ்கள், இலக்கிய இதழ்கள் என்று வகைப்படுத்துவோம். இதுபோன்ற இன்னொரு வகைப்படுத்தலே சிற்றிதழ், பேரிதழ் என்பது. பொதுவாக வணிகரீதியான இதழ்களே ஜனரஞ்சக இதழ்களாகவும் பேரிதழ்கள் எனவும் குறிக்கப்பட, கொள்கை சார்ந்த இதழ்கள் இலக்கிய இதழ்களென்றும் சிற்றிதழ் என்றும் கூறப்படுகிறது. ஆனால் சிற்றிதழ்களில் ஜனரஞ்சக இதழ்களும், இலக்கிய இதழ்களும் உள்ளது போலவே பேரிதழ்களிலும் இவ்வகைகள் உண்டு.

கணையாழி, காலச்சுவடு,உயிர்மை முதலான இலக்கிய இதழ்கள் சில விமர்சகர்களால் சிற்றிதழ் வரிசையில் மதிப்பிடப் பட்டாலும் அவற்றுக்குச் சிற்றிதழ்த் தன்மை மிகக் குறைவே. அவை பேரிதழ்களைப் போலவே கடைகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றன. நிறுவன ஆதரவுகளைப் பெற்றுள்ளன. விளம்பர வருவாய்களைப் பெறுகின்றன. விற்பனை எண்ணிக்கையில் ஜனரஞ்சக இதழ்களைவிடக் குறைவாக இருந்தாலும் சிற்றிதழ்களை விட மிக அதிகப்பிரதிகள் வெளியிடப்படுபவை இவை. சிற்றிதழ்களின் சிரமங்களை இவ்விதழ்களும் ஆரம்பத்தில் சந்தித்திருந்தாலும் இன்றைய நிலையில் இவை சிற்றிதழ்களாகக் கருதப்பட முடியாது. தரமதிப்பீட்டில் இலக்கிய இதழ்களாக வகைப்படுத்தப் படுவதால் இவற்றை நடுத்தர இதழ்களாகக் கொள்ளலாம்.

அந்தவகையில் சிற்றிதழ்களாக தரமான இலக்கிய இதழ்கள் நிறைய உண்டு. அவற்றிலும் சில இதழ்கள் நூற்றுக்கு மேற்பட்ட பக்கங்களுடன் புத்தகக் கட்டமைப்புடன் ரூபாய் 25 க்குமேல் விலையிட்டு வருவதால் அவற்றையும் சரியான அர்த்தத்தில் சிற்றிதழாகக் கருத முடியாது. மதவெளியீடுகளை, நிறுவன வெளியீடுகளை, அரசியல் கட்சிகளின், சினிமா நடிக நடிகைகளின் புகழ்பாடும், விளம்பரங்களுக்காகவே வெளியாகும் சிறு இதழ்களையும் இந்தப் பட்டியலில் இருந்து விலக்கிவிடுவோம்.

வணிக நோக்கம் எதுவுமின்றி நிரந்தரமாய் விளம்பர ஆதரவுகளும் இல்லாமல் பண இழப்புகளை ஏற்றுக்கொண்டு பெரும்பாலும் தனியொருவர் அல்லது குடும்பமாக அல்லது நண்பர்கள் இணைந்து இலக்கிய வெளிப்பாட்டை இலட்சிய வெறியாகக் கொண்டு வெளியிடும் சிறு இதழ்கள் தான் சிற்றிதழ்களாகக் கருதப்பட வேண்டும்.

சிற்றிதழாளர்கள் பற்றி தினமலர் போன்ற ஜனரஞ்சக இதழ்கள் வெளியிடும் பிம்பங்கள் இன்று நிஜத்தில் இல்லை. சிற்றிதழ் நடத்துபவர்களும் அவற்றில் எழுதுபவர்களும் தங்களின் சமூகப் பொறுப்புணர்வை ஜனரஞ்சக இதழாளர்களை விட அதிகமாக எப்போதுமே உணர்ந்திருப்பவர்களே. குழு மனப்பான்மை சில இதழ்களுக்கிடையில் இருந்தாலும்கூட ஜனரஞ்சக இதழ்களுக்கிடையிலான முதுகில் குத்தும் மனப்பாங்கு அவற்றில் இல்லை. முகம் நோக்கி எதையும் கூறும் துணிச்சல் சிற்றிதழாளர்களுக்கு உண்டு. படைப்புகளில் பாசாங்குகள் இருப்பதில்லை. கருத்துக்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப் படுவதில்லை. அரசியல் நிர்ப்பந்தங்களுக்குப் பணிவதுமில்லை. எதைப்பற்றியும் பேச சிற்றிதழ்ப் படைப்பாளிக்கு உரிமையுண்டு. படைப்பாளியின் சுய கட்டுப்பாட்டின் மீதான நம்பிக்கையில் அவை சிதைக்கப்படாமல் வெளியிடப் படுகின்றன. இவையே சமூகத்தின் வெளிப்பூச்சற்ற நிஜமுகங்களாக வெளிப்படுகின்றன.

இன்றைய நேற்றைய கவிஞர்களில், படைப்பாளிகளில் பலரும் சிற்றிதழ் அரங்கில் அறிமுகமாகி வளர்ந்தவர்களே. இன்றும் தமிழில் நூற்றுக்கணக்கான சிற்றிதழ்கள் வெளிவருகின்றன. ஒவ்வொரு மாதமும் புதிய சிற்றிதழ்கள் துவங்கப்படுகின்றன. அச்சிடப்படும் பிரதிகள் குறைவாயினும் நிறைவான வாசிப்பு அனுபவங்களைத் தருகிற இவ்விதழ்களில் தொடர்ச்சியாக வெளிவரும் இதழ்கள் குறைவே.

இவற்றில் தரமான, தொடர்ச்சியுடைய தற்போது வெளிவந்து கொண்டிருக்கும் சிற்றிதழ்களை இணைய வாசகர்களுக்காக அறிமுகம் செய்யவிருக்கிறேன். முதலில் தஞ்சையில் இருந்து பதினெட்டாண்டுகளாக வெளிவரும் சௌந்தரசுகன்...(உங்களில் சுகனைப் படித்திருப்பவர்கள் கையைத் தூக்குங்கள்... ஸாரி...மௌசை!)

2004-10-02

'அழகியும்' 'அழகனும்'

விஷ்வ துளசி என்ற படம் வெளியாவதற்கு முன்னாலேயே பத்திரிகைகளில் எல்லாம் நல்ல படம் என்பதான கருத்து பரப்பப் பட்டுவிட்டது. சினிமா வாசனையே இல்லாத ஒரு பெண்மணி இயக்கியிருக்கிறார் என்பதும் 'அழகியும்' 'அழகனும்' நடிக்கும் படமென்பதாலும் விளம்பரத்துக்குப் பஞ்சமில்லை. ஆனால் அதற்காக தமிழ் சினிமாவே பார்த்ததில்லை என்று பேட்டி கொடுப்பது கொஞ்சம் அதிகப்படியாகத் தோன்றுகிறது. தமிழ் சினிமாவே பார்க்காதவர் தமிழ் சினிமா எதற்காக எடுக்க வேண்டும்? மற்றவர்கள் அதைப் பார்க்க வேண்டும் என்று எதிர் பார்க்கலாமா? இது போன்ற மேல்தட்டு சினிமாக்காரர்களுக்கு அந்தக்கவலையும் இல்லை. ஏதாவது விருது வாங்குவது மட்டுமே கூட அவர்களுக்குப் போதும். எதற்கெல்லாமோ போராடும் சினிமாக்காரர்களும் இதைக்குறித்து அலட்டிக் கொள்ளவில்லை. இணைய நண்பர்கள் இது குறித்து என்ன நினைக்கிறீர்கள்? (இந்தக் கேள்விக்குக் காரணமுண்டு. தமிழ்ப் புத்தகங்களே படிக்காதவர்கள் தானே தமிழின் சிறந்த எழுத்தாளர்கள்!)

2004-10-01

செய்தியிலிருந்து

இன்றைய தினமணியில் வைரமுத்து கவிதைகளின் இந்தி மொழியாக்க நூல்வெளியீடு பற்றிய செய்தியிலிருந்து-

.....இந்த விழாவில் பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் ஜி கே வாசன் "காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியின் வழிகாட்டுதலின் பேரில், திமுக தலைவர் கருணாநிதி போன்ற மூத்த தலைவர்களின் ஆதரவுடன், மன்மோகன்சிங் தலைமையிலான அரசு தமிழைச் செம்மொழியாக அறிவித்துள்ளது."....

.....மத்தியகப்பல் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் டி ஆர் பாலு பேசுகையில் "வைரமுத்துக்குக் கிடைத்த இந்த வெற்றி கருணாநிதிக்குக் கிடைத்த வெற்றி" என்றார்.....

தமிழறிஞர்களின் நீண்ட காலக் கோரிக்கையை ஏற்று, தமிழகக் கூட்டணிக் கட்சிகளின் வற்புறுத்தலை அடுத்து காங்கிரஸ் கூட்டணி அரசு தமிழைச் செம்மொழியாக அறிவித்துள்ள உண்மை அரசியல்வாதியின் வாய்மொழியில்
எப்படி வருகிறது பாருங்கள்!

அதுசரி.... வைரமுத்து இந்தியில் கவிதைத்தொகுப்பு வெளியிட்டது எப்படி கருணாநிதியின் வெற்றியாகும்? விளக்குவாரா பாலு? (நாக்கு வழிப்பதுண்டா மகாமந்திரி)

2004-09-30

மீடியாவும் தமிழக அரசியலும்

*
கலைஞரின் குடும்ப அரசியலை எதிர்த்ததால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டு, பின்னர் தனிக்கட்சி துவங்கி, ஆண்டுகள் கடந்து கட்டங்கள் பல கடந்து இன்று கலைஞருடன் வைகோ இணங்கிவிட்ட போதிலும் கலைஞரின் குடும்பத்தினர் மனதில் வைகோ மீதான வருத்தம் நீங்கியதாகத் தெரியவில்லை. சன் டிவியில் வைகோ தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவது இதைத்தான் காட்டுகிறது.

*
சுமார் இருபதாண்டுகளுக்கு முன் பிலிப்பைன்சின் வெரித்தாஸ் வானொலியில் "செய்திகள் அளிப்பது எம் ஏ எஸ் ரபி" என்று இனிய குரலில் அழகிய தமிழில் ஒலித்த குரல் பின்னாளில் தமிழக சாட்டிலைட் தொலைக்காட்சிகளில் முகம் காட்டத்தொடங்கியது. கம்பீரமான குரலில் நேர்மையான பேட்டிகளையும் அரசியல் விமர்சனங்களையும் வழங்கிப்புகழ் பெற்ற ரபி பெர்னாடின் மீடியா வாழ்வை ஜெயலலிதாவைப் பேட்டி காண்பதற்கு முன், அதற்குப்பின் என இரண்டாகப் பிரிக்கலாம். அந்தப் பேட்டிக்குப் பிறகு அவரது பாரபட்சமற்ற கம்பீரமான அரசியல் விமர்சனங்களைப் பார்க்கவே முடியவில்லை. தற்போதோ கேட்கவே வேண்டாம்...ஜெயா தொலைக்காட்சியில் ஐக்கியமாகிவிட்ட பிறகு நிகழ்ச்சிகளில் அவரது தடுமாற்றங்களை வெளிப்படையாகவே காணமுடிகிறது.மூச்சுத்திணறல்களுக்கு நடுவே ஏன் ரபி?

*
நேருக்குநேர் பார்த்தால் எதிராளியின் பலத்தில் பாதியை எடுத்துக்கொள்ளும் வரம் பெற்றவனாக ராமாயணத்தில் வாலியைச் சொல்வார்கள். நிகழ்காலத்தில் அது ஜெயலலிதாவுக்கும் பொருந்தும் போலிருக்கிறது. ஜெயைச் சந்தித்தவர்கள் எல்லாம் அவரது புகழ்பாடிகளாகியுள்ளனர். மூத்தவர்கள் கூட காலில் விழுமளவிற்கு என்ன வரம் அது?

*
மாலன் ஒன்றும் இதற்காகச் சந்தோஷப்பட வேண்டாம். சன்னில் மாலனுக்குமே சில பேட்டிகளில் தடுமாற்றம் வந்ததைக் கவனித்திருக்கிறேன். பேட்டி காணப்படுபவர் எஜமானர்களை விமர்சிக்கும்போது!..அடுத்த கேள்வி தடுமாற்றமாக அல்லது மழுப்பலாக வரும். இலக்கியம் செய்வதைவிட அரசியல் செய்வது எளிதாக இருக்கலாம். ஆனால் அரசியல்வாதிகளுக்கு அரணாக இருப்பது...

*
(இன்னும் வரும்) வரணுமா?

2004-09-28

மாறாத புலிக்கிலி...

இன்றைக்கு ரொம்ப முக்கியமான தீவிர(வாத)மான காரியம் குறித்து....

அறிவியல் இன்று கால தூர இடைவெளிகளை அகற்றி விட்டது. இணையம் உலகை ஒரு கணினிக்குள் அடக்க முயல்கிறது. தமிழகத் தமிழர்களும் ஈழத்தமிழர்களும் பிற அயலகத் தமிழர்களும் இணைந்த செயல்பாடுகள் பெருகி வருகின்றன. தமிழுக்காகப் பாடுபடுவதில் எல்லோரும் ஒன்றுபட்டு உழைக்கிறார்கள். இவற்றுக்கு அப்பாற்பட்டு ஒரேயொரு வேறுபாடு காணமுடிகிறது.

ஈழத்தமிழர்களின் வலைத்தளங்களில் எல்லாம் ஈழப்பிரச்சினை குறித்த தகவல்களும் கட்டுரைகளும் நிரம்பிக் கிடக்கின்றன. தாயக மீட்புக்காகப் போராடும் பொடியன்களைப் பற்றியும் பெருமிதமாகவே பேசுகின்றன அவை. தமிழகத் தமிழர்களோ அதுபற்றிப் பேசவும் தயங்கும் நிலை.

இதற்குக் காரணம் புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரை விடுதலைப்புலிகள் தங்கள் தாயக மீட்புக்காகப் போராடும் தியாக சீலர்கள். தங்கள் மண்ணை இழந்து வாழும் மக்களுக்கு மீட்புத்தரவல்ல மாவீரர்கள்.ஆனால் தமிழகத் தமிழர்களிடமோ தங்கள் நாட்டின் இளைய தலைவனைக் கொன்ற கொலையாளிகள் என்ற உணர்வு இன்னமும் இருக்கிறது.

வடநாடு தென்னாடு, இந்தி தமிழ் வேறுபாடுகளைக் கடந்து நேரு குடும்பத்தினர் மீது தமிழக மக்கள் கொண்ட பற்று அலாதியானது. எத்தனை ஆண்டுகள் கடந்த போதிலும் அவர்கள் அதை மறக்க இயலாது. இதனாலேயே எந்த தமிழக அரசியல் தலைவரும் ஈழப்பிரச்சினை குறித்து வெளிப்படையாகப் பேசுவதில்லை. கூடவே எந்தக் காங்கிரஸ் தலைவரும் அல்லது தொண்டரும் தங்கள் காங்கிரஸ் விசுவாசத்தின் அடையாளமாக புலிகளை வெறுப்பவர்களாகத்தான் இருந்தாக வேண்டிய நிலை.

தமிழக மக்கள் மனதில் தங்கள் சொந்தச் சகோதரர்களான ஈழத்தமிழர்களின் அனாதரவான நிலைகுறித்த வருத்தமும் ஆவேசமும் நிலைகொண்டிருந்த நேரத்தில்தான் ராஜீவ் படுகொலைச் சம்பவம் நிகழ்ந்தது. இது ஈழத்தமிழர்களின் நிலைகுறித்த துயரங்களைப் புறந்தள்ளிப் புலிகளின் மீதான வெறுப்பாகப் பரிணமித்தது.

தமிழக மக்களைப் பொறுத்தவரை ராஜீவா? புலிகளா? என்ற கேள்விக்கு உணர்வுப்பூர்வமான விடை: ராஜீவ்காந்தியே அவர்களின் அன்புக்குரியவர் என்பது. புலிகளின் மீதான அனுதாபங்களும் ஆதரவும் அகன்றுபோய் இந்தக் கொலையின் மூலம் தங்களின் நியாயமான போராட்டத்திற்கான நியாயமான ஆதரவைப்பெறும் தார்மீக உரிமையைக் கூட இழந்து விட்டார்கள்.

ஈழத்தமிழர் நலனுக்கு எதிராக ராஜீவ் செயல்பட்டதாக அவர்கள் உணர்ந்திருப்பின் அதற்குக் காரணம் சிங்கள அரசின் ராஜதந்திர நடவடிக்கைகளே தவிர ராஜீவுக்கு தமிழர்கள் மீது வெறுப்பாலல்ல. அவசரப்பட்டு பழிவாங்கப் புறப்பட்டதற்கு புலிகள் கொடுத்த விலை?

போராட்டவாழ்வில் சுமார் பத்தாண்டு பின்னடைவு...தமிழக மக்கள் மனதில் ஆறாத ரணம்...இன்னும் கூட அது கனன்று கொண்டுதான் இருக்கிறது.புலிகளை ஆதரிப்போர் தேசத்துரோகிகளாகக் கருதப்படும் நிலை தொடர்கிறது.

தங்கள் நாட்டை இழந்து அயல் நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ள ஈழத்தமிழர்களுக்கோ இது மன வேதனை அளிக்கும் விசயம். ஈழப் பிரச்சினைக்குத் தீர்வுகாண இந்தியாவின் உதவி தேவை என்று அவர்கள் கருதுகிறார்கள். புலிகளும் இன்று அதே உணர்வுடன்தான் இருக்கிறார்கள்.

'கடந்த காலங்களில் சில கொள்கை வகுப்பாளர்களால் ஏற்பட்ட சில நடவடிக்கைகள் காரணமாக உருவான சில கசப்பான நிகழ்வுகள்' என குமுதம் இதழில் புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் தமிழ்ச்செல்வம் ராஜீவ் படுகொலை குறித்துக் கூறியுள்ளதும், புலித்தலைவர் பிரபாகரன் தனது சர்வதேசப் பத்திரிகையாளர் சந்திப்பின்போது 'அது ஒரு துன்பியல் சம்பவம்' எனக் கூறியதும் போதுமானவையா என்பது கேள்விக்குறி. இதனிடையே இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள புலிகள் இயக்க வீடியோ பதிவுகள் சென்னை விமான நிலையத்தில் பிடிபட்டிருப்பதும் தங்களுக்கு ரகசிய நடவடிக்கைகள் எதுவும் இந்தியாவில் இல்லை என கூறி வந்த புலிகளுக்கு இன்னொரு பின்னடைவாகத்தான் கருத முடிகிறது.

உணர்வுப் பூர்வமான இந்த விசயத்தில் எந்தத் தட்டு தாழும்? எது உயரும்? என்று உறுதியாகக் கூறிவிட முடியாது.

2004-09-25

அப்படிப் போடு அரிவாளை!

அரிவாள் வீசினா ரவுடியிசம்
அறிவால் பேசினா கம்யூனிசம்

இந்த சினிமாக் காரங்க லொள்ளு தாங்க முடியலப்பா...

பாரதிராஜா குமுதம் பேட்டியொன்றில் தமிழ் சினிமாக்களுக்கு ஆங்கிலப்பெயர் வைப்பது பற்றி விளாசியிருந்தார்.

அதில் ஒருவரி

"கேரளத்தில் தயாரிக்கப் படும் மலையாளப் படங்களுக்கு இங்கு வைப்பது போல ஆங்கிலத்தில் பெயர் வைக்க முடியுமா?"

ராம்ஜிராவ் ஸ்பீக்கிங்
ஹிட்லர்
வியட்நாம் காலனி
காந்திநகர் செகன்ட் ஸ்ட்ரீட்
காட்பாதர்
காபூலிவாலா
ஜோக்கர்
சூப்பர்மேன்
சம்மர் இன் பெத்லஹேம்
குரோனிக் பேச்சுலர்
4 தி பீப்பிள்
ரெயின் ரெயின் கம் எகெயின்

-சமீப கால சூப்பர்ஹிட் மலையாளப் படங்களில் சிலவற்றின் பெயர்கள் இவை.

1980+ காலகட்ட நினைவுகளோடே வாழ்வதே இவரைப் போன்ற கலைஞர்களின் தற்காலத் தோல்விகளுக்குக் காரணம். அறிவை அப்டேட் செய்வது குறித்துச் சிந்திக்காமல் தங்கள் காலத்துச் சிந்தனைகளை புதிய மொந்தையில் பழைய கள்-ளாகத் தருவதால் தான் ரசிகர்களின் புறக்கணிப்பு நிகழ்கிறது. இவருக்கு மட்டுமல்ல அறிவால் பேசுபவருக்கும் இது பொருந்தும்.

பின்குறிப்பு-

மலையாளத்தில் வந்த படங்கள் பின்னர் தமிழில் தயாரிக்கப் பட்டபோது 'ராம்ஜிராவ் ஸ்பீக்கிங்' 'அரங்கேற்ற வேளை'-யாகவும், 'குரோனிக் பேச்சுலர்' 'எங்கள் அண்ணா'-வாகவும் அழகான தமிழ்ப் பெயரில்தான் வெளியாயின. தறபோது 'ஜோக்கர்' 'மீசை மாதவனாகத் தயாராகியுள்ளது.
'4 தி பீப்பிள்' பற்றி யாரும் கேட்பதற்குமுன் பதில் கூறிவிடுவது உத்தமம். அது தமிழில் ரீமேக் செய்யப்படவில்லை. நேரடியாக டப்பிங் செய்யப் பட்டுள்ளது....

இரண்டு கேள்விகள்...

1. ஆட்டோகிராப்-புக்கு அதைவிடப் பொருத்தமாக தமிழ்ப் பெயர் வைத்திருக்க முடியுமா?

2. நியூ படத்தின் தலைப்பை மட்டும் தமிழ்ப்படுத்தினால் போதுமா?

2004-09-24

அகராதி புடிச்சவன்

தமிழில் அகராதி புடிச்சவன் என்றொரு நாட்டுப்புறச் சொற்றொடர் உண்டு. அதிகம் பேசுகிறவர்களைத் தான் அப்படிக் கூறுவார்கள். அதிக சொற்களைத் தெரிந்து வைத்திருப்பதால் தானோ என்னவோ அகராதி படித்தவன் என்ற பொருளில் அகராதி புடிச்சவன் என்கிறார்களோ?..

எனக்கொரு நண்பர் இருந்தார். அவர் வணிகவியல் படித்தவர்.
இன்னொரு நண்பர். அவர் ஆங்கில இலக்கியம் படித்தவர். கல்லூரிப் பருவத்தில் பேச்சுப் போட்டிகளிலும் பட்டிமன்றங்களிலும் பங்கேற்று சரளமாகவும் அழகாகவும் பேச வல்லவராக இருந்தார். அதனால் அவரது பேச்சுக்கு நிறைய ரசிகர்கள்.(ரசிகைகளும்!)
வணிகவியல் படித்த நண்பருக்கு மட்டும் பயங்கர மனப்புழுக்கம். இவரும் பட்டிமன்றங்களிலும் மேடைப்பேச்சுகளிலும் பங்கேற்க ஆரம்பித்தார். கல்லடி படாத குறை! புலியைப் பார்த்து பூனை சூடு.....
வேறு வழியின்றி நண்பரின் புகழுக்கு என்ன காரணம் என்று ஆராய்ந்தார். இறுதியில் அவர் ஆங்கில இலக்கியம் படித்ததும் புகழ் பெற்ற ஆங்கிலப் பேராசிரியரிடம் பயின்றதுமே காரணம் (?) என்ற முடிவுக்கு வந்தார்.
உடனே முதுகலை ஆங்கில இலக்கியம் படிக்க அஞ்சல் வழிக்கல்வித் திட்டத்தில் சேர்ந்தார். குறிப்பிட்ட ஆங்கிலப் பேராசிரியரின் வீடு தேடிச்சென்று தனக்கு ஆங்கில இலக்கியத்தின் மீதுள்ள அபார பற்றைக் கூறி சந்தேகங்கள் கேட்டு வரலானார்.
சில தினங்களிலேயே பேராசிரியருக்கு விபரீதம் புரிந்தது. அவரது கல்லூரி விடுமுறை தினங்களெல்லாம் நண்பரின் முகத்தில் தான் விடிந்தது. ஆங்கிலப் பற்றுக்கான காரணமும் சீக்கிரமே புரிந்தது. பேராசிரியரின் குடும்பக்கடமைகள் பலவும் தடைப்பட பேராசிரியர் விழித்துக் கொண்டார். தான் வெளியூர் போவதாகவும், திரும்பி வர சில தினங்கள் ஆகும் என்பதால் இனி தொலைபேசியில் கேட்டுவிட்டு வந்தால் போதுமென்றும் கூறிவிட்டார்.பின்னர் தொலைபேசித் தொடர்புகளின் போது வெளியே புறப்பட்டுக் கொண்டிருப்பதாகவோ அவசர வேலையாக இருப்பதாகவோ கூறித் தவிர்க்க முற்பட்டார்.
விடாக்கொண்டரான நண்பரோ பேராசிரியர் எதிர்பாராத தருணங்களில் மீண்டும் அழையா விருந்தாளியாக நுழைந்து பேராசிரியரையே அசடு வழிய வைத்தார். கடைசியில் பேராசிரியர் நேரடியாகவே தன்னை விட்டுவிடும்படி கூறவேண்டியதாயிற்று. நண்பர் வேறுவழியின்றி வேறுவழி தேட ஆரம்பித்தார்.
என்னை வந்து ஆலோசனை கேட்டார். நிறைய வாசிக்கும்படி அறிவுரைத்தேன். உடனே நண்பர் நிறைய வார்த்தைகள் உள்ள புத்தகத்தைப் பரிந்துரைக்குமாறு கேட்டார். அகராதி (Dictionary) என சற்று நகைச்சுவை உணர்வுடன் பதிலுரைத்தேன். நண்பர் அதையே வேதவாக்காகப் பற்றிக்கொண்டார். அவரது கண்கள் எனது மேசையில் இருந்த OXFORD DICTIONARY, LIFCO MEGA DICTIONARY களின் மேல் சென்றது. அவசரமாக அவை எனக்குத் தினமும் அவசியப்படுவதைத் தெரிவித்தேன். நண்பர் ஒன்றும் பேசாமல் போய்விட்டார்.
விபரீதம் மறுநாள் காலையில் ஆரம்பித்தது. HINDU பேப்பருடன் நண்பர் காலையில் ஆஜரானார். அகராதிகளின் பக்கங்கள் அவரது நாவின் எச்சில் தொட்ட விரல்களால் உழுதுமறிக்கப்பட்டன. கையில் இருந்த குறிப்பேட்டின் பக்கங்கள் வேகமாக நிரம்ப ஆரம்பித்தன. கிட்டத்தட்ட மூன்றுமணி நேரம் -இது முதல் நாள் கணக்கு. தொடர்ந்து வந்த தினங்களில் இது அதிகபட்சமாக ஐந்து மணிநேரம் வரை நீடித்தது.
இந்து நாளிதழ் முழுவதும் வாசித்த பிறகு அகராதிகளில் இருந்து 100 புதிய வார்த்தைகளைத் தினமும் குறிப்பேட்டில் பொருளோடு எழுதுவார். அவரது அசுரத்தனமான ஈடுபாடு கண்டு எனது சிரமங்களில் பொறுமை காத்தேன். இந்த நாடகம் நான்கு மாதங்கள் தொடர்ந்தது.
அகராதிகள் குற்றுயிரும் குறையுயிரும் ஆனபிறகு புரட்டல் நின்றது. பதிலாக நண்பர் அதுவரை தான் கற்ற ஆங்கில வார்த்தைகள் பற்றி என்னுடன் விவாதிக்க ஆரம்பித்தார்....
--------------------------------------------------------------------------------------------