2004-10-05

தமிழ் சிறுபத்திரிகைகள்

தமிழ் இதழியலில், வெளிவரும் கால இடைவெளி சார்ந்த வகைப்படுத்தலில் நாளிதழ்,வாரமிருமுறை,வார,மாத இதழ்கள் என்போம். தரம் சார்ந்த மதிப்பீடாக ஜனரஞ்சக இதழ்கள், இலக்கிய இதழ்கள் என்று வகைப்படுத்துவோம். இதுபோன்ற இன்னொரு வகைப்படுத்தலே சிற்றிதழ், பேரிதழ் என்பது. பொதுவாக வணிகரீதியான இதழ்களே ஜனரஞ்சக இதழ்களாகவும் பேரிதழ்கள் எனவும் குறிக்கப்பட, கொள்கை சார்ந்த இதழ்கள் இலக்கிய இதழ்களென்றும் சிற்றிதழ் என்றும் கூறப்படுகிறது. ஆனால் சிற்றிதழ்களில் ஜனரஞ்சக இதழ்களும், இலக்கிய இதழ்களும் உள்ளது போலவே பேரிதழ்களிலும் இவ்வகைகள் உண்டு.

கணையாழி, காலச்சுவடு,உயிர்மை முதலான இலக்கிய இதழ்கள் சில விமர்சகர்களால் சிற்றிதழ் வரிசையில் மதிப்பிடப் பட்டாலும் அவற்றுக்குச் சிற்றிதழ்த் தன்மை மிகக் குறைவே. அவை பேரிதழ்களைப் போலவே கடைகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றன. நிறுவன ஆதரவுகளைப் பெற்றுள்ளன. விளம்பர வருவாய்களைப் பெறுகின்றன. விற்பனை எண்ணிக்கையில் ஜனரஞ்சக இதழ்களைவிடக் குறைவாக இருந்தாலும் சிற்றிதழ்களை விட மிக அதிகப்பிரதிகள் வெளியிடப்படுபவை இவை. சிற்றிதழ்களின் சிரமங்களை இவ்விதழ்களும் ஆரம்பத்தில் சந்தித்திருந்தாலும் இன்றைய நிலையில் இவை சிற்றிதழ்களாகக் கருதப்பட முடியாது. தரமதிப்பீட்டில் இலக்கிய இதழ்களாக வகைப்படுத்தப் படுவதால் இவற்றை நடுத்தர இதழ்களாகக் கொள்ளலாம்.

அந்தவகையில் சிற்றிதழ்களாக தரமான இலக்கிய இதழ்கள் நிறைய உண்டு. அவற்றிலும் சில இதழ்கள் நூற்றுக்கு மேற்பட்ட பக்கங்களுடன் புத்தகக் கட்டமைப்புடன் ரூபாய் 25 க்குமேல் விலையிட்டு வருவதால் அவற்றையும் சரியான அர்த்தத்தில் சிற்றிதழாகக் கருத முடியாது. மதவெளியீடுகளை, நிறுவன வெளியீடுகளை, அரசியல் கட்சிகளின், சினிமா நடிக நடிகைகளின் புகழ்பாடும், விளம்பரங்களுக்காகவே வெளியாகும் சிறு இதழ்களையும் இந்தப் பட்டியலில் இருந்து விலக்கிவிடுவோம்.

வணிக நோக்கம் எதுவுமின்றி நிரந்தரமாய் விளம்பர ஆதரவுகளும் இல்லாமல் பண இழப்புகளை ஏற்றுக்கொண்டு பெரும்பாலும் தனியொருவர் அல்லது குடும்பமாக அல்லது நண்பர்கள் இணைந்து இலக்கிய வெளிப்பாட்டை இலட்சிய வெறியாகக் கொண்டு வெளியிடும் சிறு இதழ்கள் தான் சிற்றிதழ்களாகக் கருதப்பட வேண்டும்.

சிற்றிதழாளர்கள் பற்றி தினமலர் போன்ற ஜனரஞ்சக இதழ்கள் வெளியிடும் பிம்பங்கள் இன்று நிஜத்தில் இல்லை. சிற்றிதழ் நடத்துபவர்களும் அவற்றில் எழுதுபவர்களும் தங்களின் சமூகப் பொறுப்புணர்வை ஜனரஞ்சக இதழாளர்களை விட அதிகமாக எப்போதுமே உணர்ந்திருப்பவர்களே. குழு மனப்பான்மை சில இதழ்களுக்கிடையில் இருந்தாலும்கூட ஜனரஞ்சக இதழ்களுக்கிடையிலான முதுகில் குத்தும் மனப்பாங்கு அவற்றில் இல்லை. முகம் நோக்கி எதையும் கூறும் துணிச்சல் சிற்றிதழாளர்களுக்கு உண்டு. படைப்புகளில் பாசாங்குகள் இருப்பதில்லை. கருத்துக்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப் படுவதில்லை. அரசியல் நிர்ப்பந்தங்களுக்குப் பணிவதுமில்லை. எதைப்பற்றியும் பேச சிற்றிதழ்ப் படைப்பாளிக்கு உரிமையுண்டு. படைப்பாளியின் சுய கட்டுப்பாட்டின் மீதான நம்பிக்கையில் அவை சிதைக்கப்படாமல் வெளியிடப் படுகின்றன. இவையே சமூகத்தின் வெளிப்பூச்சற்ற நிஜமுகங்களாக வெளிப்படுகின்றன.

இன்றைய நேற்றைய கவிஞர்களில், படைப்பாளிகளில் பலரும் சிற்றிதழ் அரங்கில் அறிமுகமாகி வளர்ந்தவர்களே. இன்றும் தமிழில் நூற்றுக்கணக்கான சிற்றிதழ்கள் வெளிவருகின்றன. ஒவ்வொரு மாதமும் புதிய சிற்றிதழ்கள் துவங்கப்படுகின்றன. அச்சிடப்படும் பிரதிகள் குறைவாயினும் நிறைவான வாசிப்பு அனுபவங்களைத் தருகிற இவ்விதழ்களில் தொடர்ச்சியாக வெளிவரும் இதழ்கள் குறைவே.

இவற்றில் தரமான, தொடர்ச்சியுடைய தற்போது வெளிவந்து கொண்டிருக்கும் சிற்றிதழ்களை இணைய வாசகர்களுக்காக அறிமுகம் செய்யவிருக்கிறேன். முதலில் தஞ்சையில் இருந்து பதினெட்டாண்டுகளாக வெளிவரும் சௌந்தரசுகன்...(உங்களில் சுகனைப் படித்திருப்பவர்கள் கையைத் தூக்குங்கள்... ஸாரி...மௌசை!)

2 comments:

Badri Seshadri said...

இல்லை. படித்ததில்லை. ஆனால் பெயர் கேள்விப்பட்டிருக்கிறேன்.

சென்னையில் புக்லேண்ட்ஸில் கிட்டத்தட்ட எல்லா சிற்றிதழ்களும் கிடைக்கும். ஆனால் 'சௌந்தரசுகன்'ஐப் பார்த்த ஞாபகம் இல்லை.

Anonymous said...

¨¸¨Â à츢¢Õ츢§Èý-§Ã¡…¡Åºóò.