2004-10-07

தமிழ் சிற்றிதழ்-1-சௌந்தரசுகன்

தஞ்சையைச் சேர்ந்த சுகன் சிறுவனில் இருந்து இளைஞனாய் ஆன வயதுகளில் துவக்கி பதினெட்டு ஆண்டுகளாய் இடைவிடாமல் வெளியிடும் தரமான இலக்கிய மாத இதழ். ஆரம்பத்தில் சுந்தரசுகனாய் இருந்தது சமீபத்தில் சௌந்தரசுகனாக மாறியிருக்கிறது. சுகனின் துணைவியார் சு.சௌந்தரவதனா தற்போது வெளியீட்டாளர். (மனைவிக்கு மரியாதை!)
அரை சதம் பக்கங்களுடன் மாதந்தோறும் வெளியாகும் இந்த இதழ் சாதாரண அச்சில் இருந்து கணியச்சுக்கு மாறிவிட்டாலும் தன் வடிவ தனித்துவத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது. தரமான இலக்கியப் படைப்புகள், தனித்துவமிக்க கவிதைகள், கனமான கட்டுரைகளுடன் வெளியாகிறது. மாதந்தோறும் சுமார் மூவாயிரம் ரூபாய் இழப்பிலும் விளம்பரங்களே வெளியிடாமல் வருகிறது.
ஜூன் மாத இதழ் மூன்று மடங்கு அதிகப் பக்கங்களுடன் ஆண்டுமலராகவும் எழுத்தாளர் தஞ்சை பிரகாஷ் மரணத்திற்குப் பிறகு ஆகஸ்ட் இதழ்கள் பிரகாஷ் நினைவு மலராகவும் வெளியிடப்படுகிறது. கூர் என்ற தலைப்புடன் வரும் விரிவான வாசகர்கடிதங்களும் இலக்கிய மதிப்புடையவை. கடித இலக்கியம் என்னும் பகுதியில் பல எழுத்தாளர்களும் இதழாளர்களும் தங்களுக்குள் எழுதிக்கொண்ட சுவாரசியமான கடிதங்கள் வெளியிடப்படுகிறது.
சுகன் ஓவியங்களையும் வெளியிடுகிறது. இளம் ஓவியப் படைப்பாளிகளின் படைப்புகள் சுகனின் அட்டையையும் படைப்புகளையும் அலங்கரிக்கின்றன. தமிழ்ப் படைப்பாளிகள், இதழாளர்கள் மட்டுமல்லாமல் பிறமொழிப் படைப்பாளிகளின் விரிவான நேர்காணல்கள் இடம்பெற்றுள்ளன. இலக்கியம் அல்லாத பிறதுறைப் படைப்பாளிகளையும் விரிவாக அறிமுகம் செய்துள்ளது. புகழ் பெற்ற பல கவிஞர்களின் ஆரம்பக் களமாகவும் இருந்துள்ளது. சுகனில் வெளிவரும் சிறுகதைகளும் ஆழமானவை.
எழுதுகோலால் எண்ணக்கண் திறப்போம் என்பது சுகனின் குறியீட்டு முழக்கம். சுகன் தலையங்கங்கள் கூர்மையானவை.209 வது இதழான அக்டோபர் 2004 இதழின் தலையங்கத்திலிருந்து...

"உலகமயமாக்கலின் மாயக்கரங்களில் சிக்கிக் கொண்டு...இந்தியா அவதிக்கு தலையைக் கொடுத்துக் கொண்டிருக்கும் காலமிது. நமது அரசியல்வாதிகள் கீதை குறித்த சர்ச்சையில் இருக்கிறார்கள். கீதை உலகபொதுமறையா? அது இந்தியாவுக்கு முதலில் பொதுமறையா? நமக்கான விடியலை ஒரு போதும் கீதையிலிருந்து நாம் பெற முடியாது. இரண்டு முதலாளிகளின் பங்காளி சண்டையில்,தனது தங்கையை கட்டிக் கொடுத்தபக்கம் நின்று பல சதிகள் செய்து தேர்ந்த அரசியல்வாதியாக செயல்பட்டு, பல அப்பாவிகளை கொன்ற பிணபூமியில் நின்று வெற்றியை தக்க வைத்துக் கொண்ட கண்ணனின் மொழிகள் ஒருபோதும் பாட்டாளிகளுக்கு வழிகாட்டாது.
இன்றைய போராட்டம்....கொழுத்த முதலாளித்துவ திமிரில் பிற நாடுகளை அடிமைப் படுத்தி, சுரண்டும் அமெரிக்கத்தனத்திற்கும், தன்னை எப்படி எல்லாம் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதை பற்றிய சுரணையே இல்லாத, தங்களை கொள்ளையடிக்கிறார்கள் என்பதை அறியாத அப்பாவியான பல்லாயிரம் கோடி ஏழைமக்களுக்கும் இடையில் நடக்கிற தந்திர யுத்தம். இங்கே கீதையின் வழிகாட்டல் என்னவாய் இருக்கும். எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது என்பதாகவா....?
உலகமயமாக்கல் அணுக்கதிர் வீச்சில் திருக்குறள் எல்லாம் கூட காணாமல் போய்விடும் போலிருக்கிறது. தாய்மொழியை அறியாதவன் கையில் திருக்குறள் இருந்து பயன் என்ன? அதன் ஆங்கில மொழிபெயர்ப்பு அவனுக்கு உணர்வுபூர்வமான ஊக்கத்தை ஒரு நாளும் கொடுக்காது.உலகமயமாக்கலின் முக்கிய இலக்கு மொழிகளை அழிப்பதும் , கலாச்சாரங்களை அழித்து, ஒற்றைக் கலாச்சாரத்தை எப்படியும் கொண்டுவந்து விட வேண்டும் என்பதுதான். அப்போதுதான் வியாபார வழி சுரண்டலாம். இடுப்பை அப்பட்டமாய் காட்டுகிறது என்றுதான் தான் தாவணி தவிர்க்கப்பட்டதற்கு காரணம் சொல்லப்பட்டது. இன்றைக்கு அதற்கு பதிலாக வந்த ஆடைகள்.....எதை எதை எந்த எந்த அளவில் ஆபாசமாய் காட்ட வேண்டுமோ அப்படி காட்டிக் கொண்டிருக்கின்றன. இது தான் உலகமயமாதலின் கில்லாடித்தனமான அணுகுமுறை...."

சுகன் இதழ் தொடர்புக்கு

சுகன்
அம்மாவீடு,
சி-46-2-ஆம் தெரு
நகராட்சிக் குடியிருப்பு,
தஞ்சாவூர்- 613007

ஆண்டுச் சந்நா ரூ: 120, தனி இதழ் ரூ.10.

No comments: