2005-05-31

சிடாக் சி.டி.

காத்துக்காத்து கண்கள் பூத்திருந்த தமிழ் மென்பொருள் கருவிகள் சிடி வந்தே விட்டது. சொன்ன வாக்கை நிறைவேற்றி விட்டார் அமைச்சர். நன்றி...

சரி இனி சிடி எப்படி என்று பார்ப்போம். முதலில் இருப்பது டாப்/டாம் எழுத்துருக்கள். (டாப் 22, டாம் 96) அவற்றோடு தமிழ் விசைப்பலகை இயக்கியும் இருக்கிறது. தமிழ்99 மற்றும் தட்டச்சு விசைப்பலகை முறைகளில் இயங்குகின்றன.

அடுத்தது யூனிகோடு எழுத்துருக்கள் (120). அவற்றோடும் தமிழ் விசைப்பலகை இயக்கியும் இருப்பதாகத் தெரிகிறது அல்லது தெரிவிக்கப் பட்டிருக்கிறது. ஒலியியல், தமிழ்99, தட்டச்சு முறைகளுக்கான லே-அவுட் குறிப்புகள் உள்ளன. ஆனால் என் கணினியில் அவை ஏதும் இயங்கக் காணவில்லை.

மூன்றாவதாக இருப்பது பாரதீய-ஓஓ எனப்படும் அலுவலகப் பயன்பாட்டுத் தொகுப்பு. புதியவர்களுக்கு திரை தமிழில் தெரிவது பயனுள்ளதுதான். ஏற்கனவே officeXP பழகி விட்டதால் அதிகம் என்னால் பயன்படுத்த முடியுமா என்று தெரியவில்லை.

தமிழ் உலாவியை நிறுவிய போது ஏற்கனவே நிறுவப்பட்டிருந்த பயர்பாக்ஸ் தமிழுக்கு மாறிவிட்டது. அதனால் கொலம்பா (கொலும்பா?) தமிழ் மின்னஞ்சல் செயலியை நிறுவவில்லை:-))

மின்-ஓலை எனப்படும் சொற்பிழை திருத்தி டாப் எழுத்துருவை உள்ளிட்டால் மட்டுமே இயங்கும். இதில் அஞ்சால் விசைப்பலகை முறையில் எழுத முடியும். இது யூனிகோடில் இல்லாததால் எனக்குப் பயன்படப் போவதில்லை.
தட்டச்சுப் பயிலவும் ஒரு செயலி உள்ளது.குழந்தைகளுக்காக 'பாப்பாப் பாட்டுப் பாடுவோம்' என்று தமிழ் நர்சரி ரைம் 10 பாட்டுகள் சினிமா மெட்டுகளில் இருக்கிறது.

அகராதி english-english-தமிழ் மற்றும் தமிழ்-தமிழ்-english இருப்பதாக தகவல் பலகை சொல்கிறது. ஆனால் english-english-தமிழ் மட்டுமே எனக்குத் தெரிகிறது. தேடல் பெட்டியில் தமிழ் வார்த்தை கொடுத்தும் தேட முடிந்தாலும்english-english-தமிழ் முறையில் தான் விடை கிடைக்கிறது. இது யூனிகோடில் இருப்பது ஆறுதல். முன்பின்னாக நகர்த்திப் பார்க்கும் வசதியில் நவீன தொழில் நுட்பங்கள் இன்னும் தேவை. ஒரு எழுத்து வரிசையில் 500 பக்கங்கள் இருந்தால் முதலிலிருந்தே வரிசையாகத்தான் நகர்த்த முடிகிறது. குறிப்பிட்ட பக்க எண் வரிசைக்குச் செல்ல முடியவில்லை.

நான் மிகவும் எதிர்பார்த்திருந்த பொன்விழி OCR ஒளிவழி எழுத்துப் பகுப்புணரியை என் கணினியில் நிறுவ முடியவில்லை. காரணம் கணினியின் பிரச்சினையா மென்பொருளின் பிரச்சினையா? குறுவட்டின் பிரச்சினையா? தெரியாது.

எழுத்துருக்கள் ஏராளமாக உள்ளன. இத்தனை தேவையா? என்ற எண்ணம் தோன்றினாலும் விதவிதமான எழுத்துருக்கள் அச்சு மற்றும் பத்திரிகை, விளம்பரத் துறைகளுக்கு பயன்படக் கூடும்.

மொத்தத்தில் தமிழ்அகராதி மட்டுமே எனக்கு ஓரளவுக்குப் பயன்படும் என்று தோன்றுகிறது. கணினியில் புதிதாகத் தமிழைப் புகுத்த இந்த மென்பொருள்கள் எந்த அளவுக்குப் பயன்படும் என்று ஆராய்வது கொஞ்சம் கடினமான காரியம்தான்.

இன்னும் கொஞ்சம் பொறுமையாக திட்டமிட்டு இந்த மென்பொருள்களை ஒருங்கிணைத்திருந்தால் சில குறைபாடுகளை அகற்றி முழுப்பயனுள்ள குறுவட்டை வெளியிட்டிருந்திருக்கலாம். அரசு இதற்காகச் செலவழிக்கும் பணத்திற்கு தகுந்த பலன் கிடைப்பது இப்போதைக்குச் சந்தேகமே.

2005-05-25

சுரதாவின் செயலிகள்!

நான் இணையத்தை வெறும் பார்வையாளனாக மட்டுமே மேய்ந்து கொண்டிருந்த நேரம். வலைப் பதிவுகளும் அப்போது எனக்கு அறிமுகமாகி இருக்க வில்லை.

தமிழ்த் தளங்களை தேடித்தேடி வாசிக்க முயன்ற எனக்கு அதில் உள்ள எழுத்துருக் குழப்பங்கள் புரிபட சிலகாலம் பிடித்தது. ஒவ்வொரு தளத்திற்கும் தனித்தனி எழுத்துருக்களை பதிவிறக்க வேண்டிய கட்டாயம். பதிவிறக்கிய எழுத்துருவை நிறுவி சிரமப்பட்டு தளத்தைப் பார்த்தால் அதில் குறிப்பிடத்தக்கதாக அல்லது பயனுள்ளதாக ஒன்றும் இருக்காது.

பிறகு அடுத்த தளம்...அதே பிரச்சினை...அதே பதிவிறக்கம், நிறுவல்...

ஒருமுறை தேடுபொறியில் tamil என்று தேடியபோது அகப்பட்டது தான் சுரதாவின் 'பொங்குதமிழ்'.

அது எனது பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வைத் தந்தது. முதல் பார்வையில் (வாசிக்க முடியாத) எந்தத் தளத்தையும் பொங்குதமிழில் உள்ளிட்டு வாசித்துவிட்டு தேவை என்றால் மட்டும் எழுத்துருவைப் பதிவிறக்குவது வழக்கமானது. இதற்காக பொங்குதமிழை கணினியில் சேமித்து, டெஸ்க்டாப்பில் அதன் சுட்டியையும் இட்டு வைத்தேன். (இப்போதும் வைத்திருக்கிறேன்.)

எந்தத் தெரியாத எழுத்துரு கொண்டு எழுதப்பட்ட ஆவணத்தையும், தளத்தையும் சரியாகத் தெரிய வைப்பது மட்டுமல்ல அந்த ஆவணத்தை யூனிகோடு எழுத்துருவில் மாற்றித் தருகிறது. இது பொங்குதமிழின் மிகச்சிறந்த பயன்பாடு.

தரப்படுத்தப்பட்ட எழுத்துருக்கள் அறிமுகமானபோது இணைய தளங்கள் பலதரப்பட்ட எழுத்துருக்களில் உருவாக்கப்பட்ட நிலை மாறி திஸ்கியிலும் டாப் எழுத்துரு முறையிலும் நிறையத் தளங்கள் உருவாகின.

அடுத்தக் கட்ட வளர்ச்சியான யூனிகோடு என்னும் உலகப் பொதுத்தர எழுத்துமுறை வந்த பிறகும் பழைய ஆவணங்களை என்ன செய்வது என்ற தயக்கத்தில் சிலர் யூனிகோடுக்கு மாற்றாமலிருந்தனர். சுரதா அதற்கும் தீர்வு கண்டார். அவரது அடங்காத்தமிழ் என்னும் செயலி திஸ்கி அல்லது டாப் முறையில் அமைந்த இணையப் பக்கங்களை நேரடியாக யூனிகோடு இணையப் பக்கமாக மாற்றித் தருகிறது.

இ-ராவணன் என்றொரு செயலியை சுரதா வெளியிட்டார். அது தமிழில் இணையப் பக்கங்களை உருவாக்கவும், பலவண்ண வடிவ மாற்றங்களுடன் கண்கவர் தோற்றமுள்ள தமிழ் ஆவணங்களை உருவாக்கவும், அவற்றை பல்வேறு வகை கோப்புகளாக சேமித்துக் கொள்ளவும் வகை செய்தது. மைக்ரோசாப்ட் வேர்ட் மற்றும் ஃப்ரண்ட் பேஜ் செயலிகளின் அடிப்படை செயல்பாடுகளை எளிமையாக செயல்படுத்தக் கூடியதாகவும் தமிழ் வெளிப்பாட்டிற்கு உகந்ததாகவும் அது இருந்தது.

புகழ்பெற்ற கூகுள் தேடுபொறியில் தமிழில் எழுதித் தேடும் கூகுள்-யாழ் என்னும் தேடுகருவியை உருவாக்கினார். தமிழ்த்தளங்களை தமிழிலேயே தேடிப்பெற இது பயன்மிக்கதாக இருந்தது. அதன் அடுத்த கட்டமாக முக்கியமான எல்லா தேடுபொறிகள் மூலமாகவும் தேடும் வசதியுள்ளதாக முழு வலையுலகிற்குமான தமிழ்த் தேடியந்திரமாக யாழ்தேவி தமிழ் தேடியந்திரத்தை உருவாக்கினார்.

அவரது புதுவை எழுதி ஆங்கிலத்தில் தட்டச்சு செய்வதை transliteration முறையில் தமிழில் மாற்றித் தரும் எளிய தமிழ் தட்டச்சுச் செயலி. ரோமன் ஒலியியல் தட்டச்சு முறையில் இதில் தமிழைத் தட்டச்சு செய்யலாம். பாமினி, டாப், திஸ்கி மற்றும் யூனிகோடு வகை எழுத்துருக்களை தட்டச்சு செய்வதற்கான தனித்தனி புதுவை எழுதிகளை உருவாக்கியுள்ளார்.

இவை தவிர யூனிகோடு-பாமினி, யூனிகோடு-திஸ்கி, யூனிகோடு-டாப், பாமினி-திஸ்கி, பாமினி-யூனிகோடு எழுத்துரு மாற்றத்திற்கான தனித்தனி செயலிகளையும் வெளியிட்டுள்ளார்.

இதன்பிறகு ஈழம் எழுதி என்ற ரோமன், பாமினி இருவகை தட்டச்சு முறைகளும் கொண்ட யூனிகோடு எழுதுகருவியை வெளியிட்டுள்ளார். இது தமிழ் வலைப் பதிவுகளுக்கான பின்னூட்டக் கருவியாகவும் பயன்படுத்தப் படுவது இதன் சிறப்பான பயன்பாடாகும்.

உலகத்துச் செய்திகளையெல்லாம் ஒன்றாகத் திரட்டி ஒரே முகப்பில் தரும் அவரது சுரதா.காம் இணையதளமும் இன்னொரு பயன்மிக்க தமிழ்ச்சுரங்கம்.

வலைப்பதிவுகளை சுரதா குடில் என்ற பெயரில் ஒருங்கிணைத்து வந்தார். அவை இப்போது புதிதாக யாழ்குடில் என்ற வலைவாசலில் மிளிர்கின்றன.

சுரதா என்ற தனிமனித சாதனைகள் இவை. இவற்றின் பின்னுள்ள உழைப்பும் தமிழார்வமும் போற்றப்பட வேண்டியவை.

அவரது முயற்சிகள் மற்றவர்களுக்கும் ஆர்வத்தை ஊட்டக்கூடியவை. அதன் சிறு துளியில் நானும் மூழ்கித் திளைக்கிறேன்.

நன்றி சுரதா...!

2005-05-20

520+ பதிவுகள்:-ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதவை

520+ பதிவுகள்:
-ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதவை
+ஒன்றுக்கொன்று தொடர்புடையவை!

தமிழ் வலைப்பதிவுகளில் என்னென்ன எழுதப்படுகின்றன?

தனித்தனியே குறிப்பிட்டுச் சொல்ல முடியாத அளவுக்கு வலைப்பதிவுகள் கலவையாக உள்ளன. வலைப்பதிவு அடிப்படையிலும் பதிவுகளை வகைப்படுத்துவது அசாத்தியம் என்று தோன்றுகிறது. ஒவ்வொரு வலைப்பதிவிலும் தனித்தனி பதிவுகள் பலதரப்பட்ட விஷயங்களை முன்வைப்பவையாக உள்ளன.

பொதுவாக ஆராய்ந்தால் இலக்கியத்துக்கு வலைப்பதிவுகளில் குறிப்பிடத் தகுந்த வரவேற்பு இல்லையென்றே கூறலாம். எனவே படைப்பாக்க வலைப்பதிவுகள் இங்கு குறைவு.

நிகழ்வுகளை மையமாக்கி தன் எண்ணங்களை பதிவாக்கி வரும் முறையிலேயே பெரும்பாலான பதிவுகள் எழுதப்பட்ட போதிலும் பத்ரியின் வலைப்பதிவு போல தொடர்ந்து எழுதும் பதிவுகளும் குறைவே.

தொழில்நுட்ப சங்கதிகள், வலையுலக நுட்பங்கள், புதிய தளங்களை அறிமுகப் படுத்தும் வலைப் பதிவுகள் ஓரளவுக்கு உள்ளன.

பிற இணையதளங்கள், பத்திரிகைகளில் வெளியான விஷயங்களை மறுபிரசுரம் செய்யும் வலைப்பதிவுகள் உண்டு.

மத சம்பந்தமான கருத்துக்களை பிரச்சாரம்போலச் செய்யும் வலைப்பதிவுகள் உண்டு.

பழந்தமிழ் இலக்கியம் குறித்த பதிவுகள் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் சில பொதுவான வலைப்பதிவுகளில் இவை அவ்வப்போது எட்டிப் பார்ப்பதுண்டு.

பகுத்தறிவு, ஆரியம்-திராவிடம், தலித்தியம் சில பதிவுகளில் உண்டு. பல பதிவுகளில் பின்னூட்டமாகவும் இவை அவ்வப்போது எட்டிப் பார்ப்பதுண்டு.
புகைப்படம், அறிவியல் போன்றவை உண்டு.

பெண்கள் ஓரளவுக்கு வலைப்பதிகிறார்கள் என்றபோதும் பெண்ணியம் பேசும் வலைப்பதிவுகள் இல்லையென்றே கூறலாம்.

சினிமா நிறையப் பதிவுகளில் காணக்கிடைக்கும் விஷயமாக இருக்கிறது. தமிழ் சினிமா குறித்து மட்டுமல்லாமல் உலக சினிமா குறித்தும் தமிழில் வலைப்பதிகிறார்கள்.

வலைப்பதிவுகளில் சுவாரசியமான விஷயமாக இருப்பதும் எழுதப்படுவதும் அனுபவ அடிப்படையில் எழுதப்படும் பதிவுகள் தான். சுய வாழ்க்கை அனுபவங்கள் அடிப்படையில் எழுதப்படும் நிகழ்வுகள் குறித்த பதிவுகள் எல்லோருக்கும் பிடித்த விஷயமாக இருக்கிறது.

சில சந்தர்ப்பங்களில் பதிவுகளின் தரம் குறித்த கேள்விகள் எழுந்த போதிலும் அது எழுதுபவரின் மனோதர்மத்தைப் பொறுத்தது. வலைப்பதிவுகள் என்ற சுதந்திரமான கருத்துக் களத்தில் யாரும் யாரையும் கட்டுப் படுத்தவும் முடியாது.

தமிழ்மணம் போன்ற கட்டமைப்புகள் வழியாகவரும் தமிழ் வலைப்பதிவுகளுக்கு பொதுவான சில விதிமுறைகளும், நெறிமுறைகளும் இருக்கலாம். ஆனாலும் எழுத்து என்பது எழுதுகிறவர்களின் பொறுப்புணர்வால் மட்டுமே தரப்படுத்தப் படமுடியும்.

குறிப்பாக வலைப்பதிவுகளின் பின்னூட்டங்கள் பல சமயங்களில் தடம் மாறிச் சென்று விடுகின்றன. அனானிமஸ்களின் பின்னூட்டங்கள் பல சமயங்களில் முகம் சுழிக்க வைக்கின்றன.

சில விஷயங்களில் கருத்துக் கூறும்போது விஷயத்தின் முக்கியத்துவம் எழுதியவர் யாரென்று தெரிவதால் அடிபட்டுப் போய்விட வாய்ப்புண்டு. இத்தருணங்களில் அனானிமஸ் ஆக எழுதுவதில் தவறில்லை.

ஆனால் முகமூடியைச் சாக்காகப் பயன்படுத்தி தற்றவர்களை வசைபாடுவது, தரங்கெட்டு விமர்சிப்பது, தனிப்பட திட்டுவது போன்றவை தவிர்க்கப்பட வேண்டும். எழுத்தை விட்டுவிட்டு எழுதியவரை வசைபாடும் போக்கு அநாகரிகமானது.

மற்றபடி தமிழ் வலைப்பதிவுகளின் நோக்கும் போக்கும்....

ம்! பரவாயில்லை...!

(ஆரம்பத்தில் சில பின்னுட்டங்களில் "பெயரிலி" என்று கண்டபோது அனானிமஸின் தமிழ்ப்படுத்தல் என்று தோன்றியது. பிறகுதான் அந்தப் பெயரில் ஒருவர் வலைப்பதிவதை அறிந்தேன். பின்னர் ஒருமுறை புதிய டெம்ப்லேட்டில் அனானிமஸ் என்பதைத் தமிழ்ப் படுத்த முயன்று சரியான சொல் தேடியபோதும் வலைப்பதிவுகளைப் பொறுத்தமட்டில் "பெயரிலி" என்பதே பொருத்தமானதாகத் தோன்றியது.ஆனால் பெயரிலி என்ற பெயரிலேயே ஒருவர் இருப்பதால் அனானிமஸ்ஸை பெயரிலியாகப் பெயர்ப்பதில் சிக்கல். பெயரிலி வேறு பெயர் சூட்டிக் கொண்டால் அனானிமஸ்ஸை பெயரிலி ஆக்கலாம்.

சரிதான்...அப்போது யாராவது பெயரிலி என்ற பெயரில் வேண்டாததை எழுதினால் இங்கே ரமணிக்கு டின்கட்ட அலைவார்கள். ஆகவே பெயரிலி கோபப்பட வேண்டாம். என் யோசனையை வாபஸ் செய்கிறேன்.)

2005-05-17

தட்டச்சும் தமிழும்

காசியின் பதிவில் விசைப்பலகைகள் குறித்த வாக்கெடுப்பில் குறைவானவர்களே பங்கேற்ற போதிலும் கிடைத்த முடிவுகளின் அடிப்படையில் ரோமன் முறையை அதிகம் பேர் பயன்படுத்தி வருவது தெரிகிறது.

அஞ்சால், பொனட்டிக், ஒலியியல் என்று பல்வேறு செயலிகளில் வெவ்வேறு பெயர்களில் குறிப்பிடப் பட்டாலும் அடிப்படையில் இது ஆங்கில எழுத்துருவின் உச்சரிப்பு அடிப்படையில் தட்டி தமிழில் பெறும் முறைதான்.

எந்தச் செயலியிலும் நேரடியாக தமிழில் எழுத பயன்படும் எ-கலப்பை அதிகமானவர்களால் பயன்படுத்தப் படுகிறது. அதன் முதன்மைப் பதிப்பில் இந்த அஞ்சால் முறைதான் பயன்படுத்தப் பட்டுள்ளது. (பாமினி மற்றும் தமிழ்99 முறைகள் தனித்தனியாக வெளியிடப்பட்டுள்ளன.)

எளிமையான தமிழ் கருவிகள் உருவாக்கும் சுரதாயாழ்வாணனின் தமிழ் எழுதியிலும் ரோமன் தட்டச்சு முறைதான் இருந்தது. (பின்னர் அவர் பாமினி இணைத்து வெளியிட்டார்) இது போன்ற காரணங்களால் ரோமன் முறையை அதிகம்பேர் பயன்படுத்த வாய்ப்பாக இருந்தது.

இணையத் தமிழுக்கு ஈழத்தமிழர்களின் பங்களிப்பு அதிகமாக இருக்கும் நிலையில் இலங்கையிலும் பிற தென்கிழக்காசிய நாடுகளிலும் புழக்கத்தில் இருந்த தமிழ் தட்டெழுத்து முறையான பாமினியும் பலரால் பயன்படுத்தப் பட்டது.

தமிழக தட்டச்சுப் பயிற்சிநிலையங்களில் கற்பிக்கப் பட்ட தட்டெழுத்து முறையையும் பலர் பயன்படுத்த விரும்பினர். ஆனால் அதற்கான செயலிகள் இல்லாததால் அதன் சதவீதம் குறைவாகவே உள்ளது. குறள் செயலியில் இம்முறை இருந்த போதிலும் அதை அறிந்து பயன்படுத்துவோர் குறைவுதான். பலரின் வேண்டுகோளை அடுத்து எ-கலப்பை தட்டச்சு முறையில் விரைவில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.

தமிழ்99 என்பது உலகக் கணித்தமிழ் மாநாட்டில் கணித்தமிழ் அறிஞர்களால் தமிழில் அதுகாறும் புழங்கி வந்த எல்லா விசைப் பலகை முறைகளையும் ஒப்பு நோக்கி விவாதித்து இறுதியாகத் தேர்வு செய்யப்பட்ட எளிமையான முறை. அதையே தமிழக அரசு அங்கீகரித்து வெளியிட்டது. இம்முறையும் ஓரளவு பயன்படுத்தப் படுகிறது.

மயிலை. நளினம், தமிழம் போன்ற சில புதிய, பழைய முறைகளும் குறைந்த அளவில் புழக்கத்தில் உள்ளன.

இன்று நிறையப்பேர் ரோமன் முறையைப் பயன்படுத்தினாலும் அவசரத்துக்கு உதவுமேயல்லாமல் அதை தமிழ் தட்டச்சு முறையாக நிரந்தரமாக ஏற்பதில் எல்லோருக்குமே தயக்கமிருக்கிறது.. பாமினியையும் குறிப்பிடத்தக்க அளவுக்கு பயன்படுத்தினாலும் அது தட்டச்சு முறை என்பதால் அதை முறையாகக் கற்றவர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும்.

காலப்போக்கில் தட்டச்சுப் பயிற்சி நிலையங்கள் இல்லாது போகும் நிலையில் பாமினி உட்பட எல்லா தட்டச்சு(ப்பொறி) சார்ந்த முறைகளும் பயனற்றுப் போகும்.

அப்போது நாம் என்ன செய்யப் போகிறோம். நமக்காக இல்லாவிட்டாலும் அடுத்த தலைமுறைக்கு கணித்தமிழ் எழுதுமுறையாக அனைவரும் ஏற்கக் கூடிய எளிய ஒருஎழுதுமுறை கண்டிப்பாக அங்கீகரிக்கப் படவேண்டும். அது தமிழ்99 ஆகத்தான் இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை. ஆனால் நான் கூறிவரும் காரணங்களால் பிற முறைகள் பயனற்றுப்போகும் நிலைகுறித்து யாரேனும் சிந்தித்திருக்கிறீர்களா? உங்கள் கருத்துக்களை எழுதுங்கள்.

வெறுமனே நாம் விரும்பும் முறைக்கு எதிரானவர்.இவர் என்று முத்திரை குத்தி ஒதுக்கி/ஒதுங்கி விடாமல் விவாதத்தில் பங்கெடுங்கள். ஊர்கூடி இழுக்க வேண்டிய தேர் இது.

தனிநபர்களை முன்வைத்தல்ல. சமூகத்தை முன்வைத்து, எதிர்கால தமிழ் தலைமுறையை முன்வைத்து கணித்தமிழுக்கு அவசியமான விவாதம் இது.

யூனிகோடில் பன்மொழி.

என் முந்தைய கட்டுரையொன்றில் கூறியபடி யூனிகோடுக்கான தமிழ் உள்ளீட்டைச் செய்தவர்கள்/ செய்யும் வாய்ப்பைப் பெற்றவர்கள் பெரும்பாலானவர்களால் பயன்படுத்தப்பட்டு வந்ததும் கணித்தமிழ் அறிஞர்களால் ஒப்புக்கொள்ளப் பட்டதுமான திஸ்கி அடிப்படையிலோ, உலகக் கணித்தமிழ் மாநாட்டில் அறிமுகம் செய்யப்பட்டு, தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழக அரசினால் அங்கீகரிக்கப்பட்ட டாப் முறையிலோ அமைக்காமல் வேறொரு முறையில் தமிழ் எழுத்துக்குறியீட்டு முறைகளை அமைத்து விட்டார்கள்.

மேற்கண்ட முறைகள் தமிழ் இலக்கண கணித முறைகளில் அமைக்கப் பட்டிருந்தன. இப்போதைய முறையில் சில அடிப்படை இணைவுப் பிழைகள் இருப்பதாக சில அறிஞர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். ஆயினும் இன்றைய தொழில்நுட்ப மேம்பாடுகளால் பிழைகளை நிவர்த்தி செய்து சரியான வெளிப்பாடுகளை யூனிகோடில் செயல்படுத்த முடிகிறது. தமிழிலேயே இணையத்தில் தேடவும் முடிகிறது. தனித்தனி எழுத்துருக்களின் தேவையின்றியே வலைத்தளங்களை வாசிக்க முடிகிறது.

இவையல்லாமல் யூனிகோடின் தனிச்சிறப்பாகக் கருதப்படுவது ஒரே எழுத்துருவில் பல மொழிகளின் எழுத்து வடிவங்களைப் பெற முடியும் என்பது. இது கணினி மொழியியலின் மிகப்பெரிய/மிகச்சிறந்த வசதியாகும்.

தமிழில் நாம் காணும் யூனிகோடு எழுத்துருக்கனில் TSCu_InaiMathi, TheneeUniTx ,Latha, aAvarangal, Arial Unicode MS போன்றவை அதிகம் பயன்படுத்தப் படுகின்றன.

திஸ்கி குறியீட்டில் அமைந்த எழுத்துருக்கள் பலவும் TSCu அடைமொழியுடன் யூனிகோடாக மாற்றப்பட்டுள்ளன. மைக்ரோசாப்ட் நிறுவனம் வின்டோஸ் இயங்குதளத்துடன் இணைத்து வழங்கியதால் 'லதா' எழுத்துரு அதிக பயன்பாட்டைப் பெற்றுள்ளது. உமர்த்தம்பியால் உருவாக்கப் பட்ட TheneeUniTx தமிழ் இணையதளங்களுக்குப் பொதுவான இயங்கு எழுத்துருவாகவும் பயன்படுவதால் இன்று பெரும்பாலான வலைப்திவுகளிலும் சில இணையத் தளங்களிலும் பயன்படுத்தப் படுகிறது. இணையத்தில் யூனிகோடில் கிடைத்த முதல் தனி எழுத்துருவான சின்னத்துரை சிறீவாஸின் aAvarangal இன்னமும் பலரால் பயன்படுத்தப் பட்டு வருகிறது.

Latha எழுத்துரு முழுவதும் தமிழ் குறியீட்டை மட்டுமே கொண்டது. பிற எழுத்துருக்கள் வழமை போல ஆங்கிலமும் தமிழும் இணைந்தவை.
பன்மொழிக் குறியீடுகளுக்கான வசதியை மேற்கொண்ட எழுத்துருக்களில் Arial Unicode MS மட்டுமே முழுமையாகக் கொண்டுள்ளது. இது மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அலுவலகப் பயன்பாட்டுத் தொகுப்பான MS Office தொகுப்புடன் வழங்கப் படுகிறது.

இதில் (ஒரே எழுத்துருவில்) தமிழ், ஆங்கிலம் மற்றும் Greek, Cyrillic, Armenian, Hebrew, Arabic, Devanagri, Gurmukhi, Gujarati, Kannada, Thai, Lao, Tibetan, Georgian, Korean, Japanese, Chinese ஆகிய மொழிகளும் சின்னங்கள், வணிக, கணிதக் குறியீடுகள் போன்றவையும் இடம் பெற்றுள்ளன. பெங்காலி, ஒரிய, தெலுங்கு, மலையாள மொழிகளில் சில குறியீடுகள் மட்டும் இடம் பெற்றுள்ளன. இந்த எழுத்துரு பன்மொழி ஒலிபெயர்ப்பு, மொழிபெயர்ப்புப் பணிகளுக்கு சிறப்பாகப் பயன்படக் கூடியது.

இவை தவிர மத்திய அரசின் சிடாக் நிறுவனம் புதிதாக வெளியிட்டுள்ள தமிழ் செயலிகள் அடஙகிய குறுவட்டில் நிறைய யூனிகோட் எழுத்துருக்கள் இருப்பதாக தெரிகிறது. அவற்றின் அமைப்பு பற்றிய விபரங்கள் தெரியவில்லை.

(அதுசரி... குறுவட்டுகள் இலவசமாக வெளியிடப்படுவதாகவும் தேவைப்படுவோருக்கு இலவசமாகவே அனுப்பி வைக்கப்படும் எனவும் ஒரு வாரத்தில் அவை வந்து சேரும் என்றும் வெளியீட்டு விழாவின்போது அறிவிக்கப்பட்டிருந்ததே. பதிவு செய்தவர்களில் யாருக்காவது அப்படி வந்து சேர்ந்ததாக தகவல் உண்டா? அல்லது வெறும் மேடைப்பேச்சுத்தானா?

* * *

இங்கே ஒரு பாட்டு கேட்டு போங்களேன்

2005-05-16

இடைத்தேர்தல்

இடைத்தேர்தலில் அதிமுக வென்றிருக்கிறது. திமுகவின் மெகா கூட்டணியை மீறி, சங்கராச்சாரியார் பக்தர்களின் கோபத்தை மீறி, பிஜேபியின் ரகசிய லாபியை மீறி, தனித்தே நின்ற அதிமுகவுக்குக் கிடைத்துள்ள இந்த வெற்றியைச் சாத்தியமாக்கியது எது?

திமுகவின் கூட்டணித் தலைவர்களெல்லாம் இதை அதிமுகவின் பணபலமும், கள்ள ஓட்டுக்களும், அதிகார துஷ்பிரயோகமும் தந்த அநியாய வெற்றி என்று வர்ணித்துள்ளனர்.

இந்தத் தேர்தலின் கதாநாயகரான ராவ் என்ற தேர்தல் பார்வையாளரின் பார்வையில் இரு தரப்புமே முடிந்தவரை அதிகார அநியாய அரசியலைத்தான் நடத்தியுள்ளன. அதை முடிந்தவரை அவரும் முறியடித்துத் தான் இந்தத் தேர்தலை நடத்தி முடித்துள்ளார்.

அவரை மீறிக்கொண்டு அதிமுகவினர் போட்ட கள்ள ஓட்டுக்கள் அதிகமாக இருந்திருக்க வாய்ப்பில்லை. சுய உதவிக் குழுக்களின் மூலமாக ஓட்டுக்கு இத்தனை ரூபாய் என்று நோட்டுக்கள் கைமாறியுள்ள போதிலும் விலைக்கு வாங்க முடியாத சிலவும் உண்டு.

அதிலொன்று ஜாதி,மத அபிமானம்.
இம்முறை அது சற்றே முரண்பட்ட திசையில் பயணித்திருக்கிறது.

சங்கரராமன் கொலைவழக்கில் கைது செய்யப்பட்ட சங்கராச்சாரியாருக்கு இருந்த அகில இந்திய செல்வாக்கின் அடிப்படையில் பார்த்தால் ஜெ மண்ணைக் கவ்வியிருக்க வேண்டும். ஆனால் தமிழகத்தில் அது நேர்மாறானது என்ற ஜெயலலிதாவின் கணிப்பு உண்மையாகியிருக்கிறது. கொல்லப்பட்ட சங்கரராமனின் மீதான ஆதரவு ஜெவின் வெற்றியாக வந்து விழுந்திருக்கிறது.

தமிழ்நாடு ஓட்டல் விவகாரம், ஜெயலலிதா-சங்கராச்சாரியார் மோதல் குறித்த தகவல்கள் எந்தளவு நம்பப் படுகிறதோ அதே அளவுக்கு சங்கரராமன் கொலையில் சங்கராச்சாரியார்களின் பங்களிப்பும் மடத்தில் பெண்தொடர்புகள் குறித்த கதைகளும் நம்பப் படுகின்றன. இரண்டும் ஒன்றுக்கொன்று முரண்பாடானவை அல்ல. முதல் விவகாரத்தின் விளைவுதான் சங்கராச்சாரியார்கள் கைது செய்யப்பட்டதும் குண்டர்சட்டம், கஞ்சா வழக்கு என வழக்குகள் போடப்படுவதுமான நிகழ்வுகளுக்கான அடிப்படை. ஆனால் அதற்கான வழியையும் காரணத்தையும் அளித்தது இரண்டாவதாகக் கூறப்பட்ட நிகழ்வுதான்.

ஊழல் வழக்குகளில் ஜெயலலிதாவின் பங்குகள் வெளிப்படையானவை. ஆனாலும் ஒவ்வொரு வழக்கும் நீர்த்துப் போய் ஜெயலலிதா வழக்குகளிலிருந்து விடுவிக்கப் பட்டதை நாம் கண்டுள்ளோம்.

சங்கராச்சாரியார் மீதான வழக்குகளும் அதே பாதையில் தான் பயணிக்கின்றன. ஒன்று ஊழல் வழக்கு. மற்றது கொலை வழக்கு. சட்டப்பூர்வமான நடவடிக்கைகளும் தீர்ப்புகளும் செல்வாக்குள்ளவர்களுக்கு ஒரு விதமாகவும் மற்றவர்களுக்கு மற்றொரு விதமாகவும் செயல்படுகிற காலமிது.

அதே சமயம் ஒவ்வொன்றையும் மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பென இன்று அரசியல்வாதிகள் முழங்குவதன் பொருள் அர்த்தப்படுத்துவது என்ன? தன் ஆட்சிக்காலத்தில் மெகா ஊழல்புரிந்து ஆடம்பரத்தில் ஊறித்திளைத்த ஜெயலலிதா அடுத்த தேர்தலில் மண்ணைக் கவ்வினார். அதற்கடுத்த தேர்தலில் தண்டனைக்காலம் முடிந்தது என மக்கள் மீண்டும் ஆட்சியதிகாரத்தைக் கொடுத்தனர்.

இன்று செல்வாக்கு மிக்க சங்கராச்சாரியார் கொலையே செய்தாலும் கைது செய்தது தவறு என மேடைபோட்டு முழங்கிய தேசியத்தலைவர்களுக்கும் அரசியல் காரணங்களுக்காக அந்தக் கைதைக் கண்டித்த திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கும் மக்கள் தங்கள் தீர்ப்பை வழங்கி விட்டனர்.

மக்களின் மனநிலை மாற்றங்களைக் கருத்தில் கொள்ளாமல் காரணங்கள் தேடி சாக்குப் போக்குக் கூறிக்கொண்டிராமல் ஆக வேண்டியதைப் பாருங்கைய்யா!

2005-05-11

தமிழ் விசைப்பலகைகள்

(நண்பர் காசியின் பதிவில் வாக்கெடுப்பு!)

1.
ஒரு இணையப் பக்கத்தையோ அறிக்கையையோ படிவத்தையோ கணினியில் வடிவமைக்கும்போது விதவிதமான எழுத்துருக்கள் கொண்டு வடிவமைத்தால் அதன் அமைப்பில் அழகு, கவர்ச்சி ஏற்படுகின்றன. அச்சுத்தொழிலுக்கும் இது மிகவும் அவசியமானது. இதற்காகவே விதவிதமான வடிவங்களில் கணினி எழுத்துருக்கள் ஆக்கப் படுகின்றன.

ஆங்கிலத்தில் எழுத்துருக்கள் என்றால் அவை வேறுபடுவது அதன் வெளித்தோற்ற வடிவங்களில்தான். ஆனால் தமிழில் வெவ்வேறு தமிழ் எழுத்துருக்கள் என்றவுடன் அதன் வடிவங்களில் மட்டுமல்லாமல் அதன் தகவமமைப்பிலும் வேறுபாடுகள் இருந்தன. ஆரம்பக்காலத்தில் அவரவர் தேவைக்கேற்ப வடிவமைக்கப்பட்ட தமிழ் எழுத்துருக்கள் ஓவ்வொன்றும் ஒவ்வொரு தகவமைப்பில் இருந்தன. இதனால் ஒரு தகவமைப்பில் உருவான எழுத்துருவில் ஆக்கப்பட்ட வலைப்பக்கங்களை மற்றொரு எழுத்துரு கொண்டு வாசிக்க இயலாததாக இருந்தது. இதனால் ஒவ்வொரு செயலியும் தனித்தனி எழுத்துருக்களைக் கொண்டிருந்தன. ஒன்று மற்றொன்றோடு இணைந்து இயங்க இயலவில்லை.

இந்நிலை மாற முயற்சியெடுத்து கணித்தமிழ் அறிஞர்களால் திஸ்கி அறிமுகப்படுத்தப்பட்டது. இது பரவலாக பல தளங்களிலும் செயலிகளிலும் பயன்பாட்டுக்கு வந்தது. இதன்பிறகு கணித்தமிழ் மாநாட்டில் தமிழக அரசால் தரப்படுத்தப்பட்ட டாம்/டாப் எழுத்துருக்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இவை தமிழகத்துக்கு வெளியே பெரிய வரவேற்புப் பெறவில்லை என்றாலும் இந்த எழுத்துருக்களைப் பயன்படுத்தி பல மென்பொருட்கள் உருவாக்கப்பட்டன.

இதற்கிடையில் உலகளாவிய பொதுமைப் படுத்தப்பட்ட எழுத்துருக்கள் பற்றிய கருத்தாக்கம் வலுப்பெற்றிருந்தது. ஒரே எழுத்துருவில் பல மொழிகளையும் கொண்ட இந்த யூனிகோடு எழுத்துருக்கள் பற்றி ஆரம்பத்தில் கணித்தமிழ் அறிஞர்கள் கவனம் செலுத்தவில்லை. இதனால் யூனிகோடில் தமிழை உள்ளீடு செய்யும் வாய்ப்புப் பெற்றவர்கள் அங்கீகரிக்கப்பட்டிருந்த திஸ்கியிலோ டாப் முறையிலோ அல்லாமல் வேறொரு முறையில் அமைத்து விட்டனர்.

தொழில்நுட்ப முன்னேற்றங்களால் தமிழ் எழுதுமுறைக்கு பாதகம் ஏதும் இல்லை என்றாலும் தமிழ் இலக்கண முறைப்படி சில பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டியுள்ளதாக கணித்தமிழ் அறிஞர்கள் சிலர் கருதுகின்றனர். எவ்வாறிருப்பினும் யூனிகோடு வருகையால் பல பிரச்சினைகளுக்குத் தீர்வு ஏற்பட்டுள்ளது.

வலைத்தளங்கள் பெரும்பாலும் யூனிகோடுக்கு மாறிக்கொண்டிருக்கின்றன. யூனிகோடு முறையில்தான் புதிய செயலிகள் ஆக்கப் படுகின்றன. வலைப்பதிவுகள் 100% யூனிகோடுக்கு மாறிவிட்டன. மின்னஞ்சல்குழுக்களும் யூனிகோடில் ஆரம்பிக்கப் பட்டுள்ளன. இனி யூனிகோடின் ராச்சியம்தான். எல்லோரும் யூனிகோடு பாவிப்பதால் கணித்தமிழின் எல்லா முன்னேற்றங்களும் எல்லா கணினி பாவனையாளர்களையும் சென்றடைய வாய்ப்புள்ளது.

2.
எழுத்துருக்கள், விசைப்பலகை முறைகள், தட்டச்சுச் செயலிகள் ஆகியவற்றின் இடையில் பலருக்கும் சில குழப்பங்கள் இருக்கின்றன. உதாரணமாக சுரதாவின் செயலியைப் பின்பற்றி தமிழ் எழுதுகருவி உருவாக்கியுள்ள ஒரு நண்பர் ரோமன் தட்டச்சு முறையை திஸ்கி என்று குறிப்பிட்டுள்ளார். திஸ்கி எழுத்துருக்களைப் பயன்படுத்துவோர்களில் பெரும்பாலானோர் ரோமன் தட்டச்சு முறையில் தட்டச்சுகின்றனர் என்பதைத் தவிர இரண்டுக்கும் எந்தத் தொடர்பும் இருப்பதாகத் தெரியவில்லை. அதாவது திஸ்கி என்பது எழுத்துரு அமைப்பு. ரோமன் என்பது தட்டச்சு முறை. அதுபோலவே யூனிகோடு என்று தட்டச்சு முறை கிடையாது. யூனிகோடு எழுத்துரு அமைப்பை பல்வேறு செயலிகளின் உதவியால் ரோமன், பாமினி, தட்டச்சு, தமிழ்99 போன்ற தட்டச்சு முறைகளில் எழுதலாம்.

திஸ்கி ஆதரவாளர்கள் டாம்/டாப் எழுத்துருக்கள் மீது வெறுப்புக் கொண்டிருப்பதை உணரமுடிகிறது. இதை புரிந்து கொள்ளவும் முடிகிறது. ஆனால் அதே வெறுப்பு தமிழ்99 விசைப்பலகை முறை மீதும் இருப்பது புரிந்து கொள்ள முடியாதது.

டாம்/டாப் எழுத்துருக்களும் தமிழ்99 விசைப்பலகையும் ஒரே சமயத்தில் வெளியிடப் பட்டவை; தமிழக அரசால் தரப்படுத்தப் பட்டவை என்பது தவிர இரண்டும் பயன்பாடுகளில் வெவ்வேறானவை.

யூனிகோடின் வருகைக்குப் பின் டாம்/டாப் எழுத்துருக்களின் தேவையே இல்லை. திஸ்கியும் கூட காலப்போக்கில் வழக்கொழிந்து விடும் என்றுதான் தோன்றுகிறது. அதே சமயம் யூனிகோடில் தமிழின் அமைப்பில் சில மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புண்டு.

3.
முரசு, எ-கலப்பை, குறள் செயலி என்பவை தமிழை கணினியில் எழுத உதவும் கருவிகள்.

முரசு ஒரு இணைய செயலி. பல உள்ளமைந்த எழுத்துருக்களைக் கொண்டது. வேறுபட்ட எழுத்துருக்களைக் கொண்ட பல இணைய தளங்களை இவற்றின் உதவியால் வாசிக்க முடியும். முரசு அஞ்சல் (Murasu Anjal 2000-second edition-version 9.5.2) உதவியால் Anjal keyboard, Tamil99 keyboard, TamilNet97 keyboard, Mylai keyboard, New Typewriter keyboard, Old Typewriter keyboard, Anjal Indic keyboard, Murasu-6 keyboard ஆகிய 8 தட்டச்சு முறைகள் மூலம் கணினியில் தட்டச்சு செய்ய முடியும். ஆனால் குறிப்பிட்ட சில text-editor களில் மட்டுமே இதன்மூலம் தட்டச்சு செய்ய முடியும்.

எ-கலப்பை என்பது முரசுவைப்போல முழுமையான செயலி அல்ல. அது விசைப்பலகைக்கான driver எனப்படும் இயக்கி. இதைப்பயன்படுத்தி எல்லா வகையான செயலிகளிலும் தமிழை உள்ளீடு செய்ய முடியும். இதன் மூலம் பல தட்டச்சு முறைகளில் தட்டச்ச முடியும் என்றாலும், தேவையான தட்டச்சு முறையில் அமைந்த e-kalappai driver-ஐ தனித்தனியாக பதிவிறக்கிக் கொள்ள வேண்டும். இப்போதைக்கு அஞ்சால், பாமினி, தமிழ்99 விசைப்பலகை முறைகள் உள்ளன. விரைவில் தட்டச்சு விசைப்பலகை முறையில் எ-கலப்பை வெளியிடப்படும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.

குறள் செயலியும் பல பயன்பாடுகள் இணைந்த செயலி. இதன் புதிய பதிப்பில் தமிழ் குரல் வழி வாசிப்பானும் இணைந்திருப்பது குறிப்பிடத் தக்கது. குறள் செயலி மூலம் ஒலியியல்(ரோமன்), தமிழ்99, புதிய தட்டச்சு, பழைய தட்டச்சு ஆகிய 4 முறைகளில் பிற செயலிகளில் தட்டச்ச முடியும்.

இவை தவிர வலைப்பதிவுகளில் அதிகமாகப் பயன்படும் ஒன்று சுரதாவின் செயலி. இதில் ரோமன் எனப்படும் ஒலியியல் முறையும் பழைய தட்டச்சு முறைகளில் ஒன்றான பாமினியும் தட்டச்ச பயன்படுத்தப் படுகின்றன.

4.
தட்டச்சும் கருவி எதுவாக இருப்பினும் தட்டச்ச நமக்கு வசதியான முறையைத் தேர்ந்து கொள்ள முடியும். அந்த முறை எது என்பதை அறிந்து தேர்வு செய்ய வேண்டும்.

தட்டச்சுக் கருவியில் தட்டச்சு செய்யப் பயின்றவர்களுக்கு வேகமாகத் தட்டச்ச முடியும். அவர்களுக்காக தட்டச்சு விசைப்பலகை அமைப்புத் தேவை. புதிதாகக் கற்றவர்களுக்கு புதிய தட்டச்சு முறையும் பழையவர்களுக்கு பழைய தட்டச்சு முறையோ பாமினியோ தேவை. பாமினி பரவலாகப் பயன்படுத்தப் படுகிறது. அதிகமாகப் பயன்படுத்தப் படும் எ-கலப்பையில் புதிய தட்டச்சு முறை இதுவரை வெளியிடப்படாததால் தட்டச்சுப் பயின்றவர்களும் வேறுமுறைகளைப் பயன்படுத்துகின்றனர்.

தட்டச்சுக் கற்காதவர்களுக்கு ஆங்கில உச்சரிப்பிலேயே தமிழில் எழுதும் ரோமன் முறை பயன்படுகிறது. (உதாரணம்: ammaa= அம்மா, thamizh= தமிழ்) இது அஞ்சல், பொனட்டிக், ஒலியியல் என்றெல்லாம் குறிப்பிடப் படுகிறது. இதையே அதிகம் பேர் (தட்டச்சுக் கற்றவர்களும்!) கணித்தமிழ் எழுதப் பயன்படுத்துகின்றனர்.

புதிதாகக் கணினியிலேயே தமிழை தட்டச்ச கற்பவர்களுக்கு தமிழ்99 முறை எளிமையானது. 'shift' பயன்படுத்தாமலேயே நேரடியாக எல்லா தமிழ் எழுத்துக்களையும் எழுத முடியும் என்பதே இதன் சிறப்பம்சம். ஸஷஜஹக்ஷஸ்ரீ ஆகிய எழுத்துக்களுக்காக மட்டுமே 'shift' பயன்படுத்த வேண்டும். இம்முறை எளிமையானதாக இருந்தாலும் பரவலான கவனிப்புப் பெறவில்லை. இதற்கு மேற்கூறிய ஒருவகை வெறுப்பும் காரணம்.

தட்டச்சு முறைகளிடையே உதாரணமாகச் சில வேறுபாடுகள்:

ரோமன்- asdfg=அச்ட்fக், ழ=zha (இசட்+எச்+எ=ழ)
தமிழ்99- asdfg=அஇஉஃஎ, ழ=/ ('பார்' குறியீடு=ழ)
பாமினி- asdfg=யளனகப, ழ=o (சிறிய 'ஓ'=ழ)
தட்டச்சு- asdfg=யளனகப, ழ=H (பெரிய 'எச்'=ழ)

பாமினி மற்றும் தட்டச்சு முறைகளில் பெரிய வேறுபாடுகள் இல்லையென்றாலும் ழ,ஹ மற்றும் இன்னும் சில எழுத்துக்கள் மாறுபட்டுள்ளன.

5.
பாமினி போன்ற பழைய தட்டச்சு முறைகள் ஒருகட்டத்தில் வழக்கொழிந்து விடும். அலுவலகங்கள் எல்லாம் கணினிமயமாக்கப் பட்டு வருவதால் இப்போதே தட்டச்சுப் பயிற்சி நிலையங்களும் வரிசையாக மூடப்பட்டு வருகின்றன. இதனால் புதிய தட்டச்சு முறையும் ஒரு குறிப்பிட்ட காலம் வரைதான் பயன்பாட்டில் இருக்கும்.

அதன்பிறகு தமிழுக்கென்று உள்ளீட்டு முறையாக எது மீதமிருக்கும்? நிரந்தரமாக ஆங்கில ஒலியியல் விசைப்பலகையை தமிழ் ஏற்றுக் கொள்ளுமா? அல்லது தமிழ்99 போன்ற எளிமையான தட்டச்சு முறை ஏற்கப்படுமா? அதுவுமல்லாது புதிதாக இன்னொன்றை எதிர்நோக்கி காத்திருப்பதா?