2005-10-31

தீபங்கள் ஒளிர்கின்றன.

தீபங்கள் ஒளிர்கின்றன.

குண்டு வெடிப்புகள

ரயில் விபத்துகள்

பட்டாசு விபத்துகள்

வெள்ளம், புயல், சூறாவளிகள்

உடலை விட்டகற்றிய

சில உயிர்களின் இறுதி தீபங்களும்.

2005-10-22

சுந்தர ராமசாமி மறைவு: எழுத்தாளர்கள் அஞ்சலி

சுந்தர ராமசாமி உடல் தகனம்.

நாகர்கோவில்.அக்.21-

தமிழின் முதுபெரும் எழுத்தாளர் சுந்தர ராமசாமி கடந்த 15ம் தேதி அமெரிக்காவில் காலமானார். அவருடைய உடல் அமெரிக்காவிலிருந்து கொண்டு வரப்படுகிறது.

இறுதி மரியாதைக்காக இன்று (21ம் தேதி) வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நாகர்கோவில் 669, கேபி சாலை, சுந்தர விலாஸ் இல்லத்தில் வைக்கப் பட்டிருக்கும். 5 மணிக்கு உடல் செட்டிகுளம் பிள்ளையார் கோவில் அறக்கட்டளை மயானத்தில் தகனம் செய்யப்படும். மதச் சடங்குகள் எதுவும் இராது.

மாலை 6.30 மணிக்கு நெய்தல் சார்பில் ராமவர்மபுரம் பி.டி. பிள்ளை மண்டபத்தில் அஞ்சலி கூட்டம் நடை பெறும்.
***

Image hosted by TinyPic.com

நாகர்கோவில்.அக்.22-

தமிழகத்தின் முதுபெரும் எழுத்தாளர் சுந்தர ராமசாமியின் உடல் நாகர்கோவிலில் நேற்று தகனம் செய்யப்பட்டது. தமிழகம் மற்றும் கேரளாவை சேர்ந்த எழுத்தாளர்கள் பலர் அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

தமிழ் இலக்கிய உலகில் நாவல் மற்றும் சிறுகதை அடிப்படையில் ஒரு மாபெரும் மாற்றத்தை உருவாக்கிய எழுத்தாளராக சுந்தர ராமசாமி கருதப்படுகிறார். அவரது இரண்டாவது நாவலான ஜே.ஜே. சில குறிப்புகள் தமிழ் புதின வரலாற்றில் நவீன இலக்கிய தடத்தை பதித்தது. தமிழ் இலக்கிய உலகில் நீண்ட மைல்கல்லை கடந்து வந்துள்ள எழுத்தாளர் சுந்தர ராமசாமி கடந்த சில நாட்களாக நுரையீரல் பாதிப்பு காரணமாக அவதிப்பட்டு வந்தார். இதற்காக அமெரிக்காவில் சிகிட்சை பெற்று வந்த சுந்தராமசாமி கடந்த 15ம் தேதி காலமானார் அவரது உடல் அமெரிக்காவில் இருந்து நேற்று நாகர்கோவிலில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டுவரப்பட்டது.

தமிழ் மற்றும் மலையாள இலக்கிய உலகை சேர்ந்த எழுத்தாளர்களும், உறவினர்கள் பலரும் அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். காலை 10 மணி முதல் மாலை நான்கு மணி வரை அவரது உடலுக்கு இறுதி மாரியாதை செலுத்தப்பட்டது. எழுத்தாளர்கள் திலகவதி, பிரசன்னா ராமசாமி, பொன்னிலன், நாஞ்சில் நாடன், ஜெயமோகன், தேவேந்திர பூபதி, அப்பாஸ், சுகுமாரன், இளவேனில், சுகிர்தா ராணி, சல்மா, ரமேஷ், பிரமிள், வெங்கடாசலபதி, மோகன், நஞ்சுண்டான், கோணங்கி, உமாமகேஸ்வரி, தமிழ்செல்வன், கலாப்ரியா, மனுஷ்ய புத்திரன், விக்கிரமாதித்தன், ஓவியர் ஆதிமுலம், கேரள பல்கலைக்கழக தமிழ்துறை தலைவர் நாச்சிமுத்து, நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தமிழ்துறை தலைவர் பரமசிவன் ஆகியோர் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

மலையாள எழுத்தாளர்கள் புனத்தில் குஞ்ஞப்துல்லா, சக்கரியா, ஆற்றுர் ரவிவர்மா, மதுநாயர், தமிழ்நாடு கலைஇலக்கிய பெருமன்ற மாவட்ட தலைவர் ஸ்ரீகுமார், நெய்தல் கிருஷ்ணன், டாக்டர் நாச்சி முத்து, தமிழாலயம் பச்சைமால் ஆகியேரும் அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவரது உடல் நாகர்கோவிலில் உள்ள அவரது வீட்டில் இருந்து செட்டிக்குளம் பிள்ளையார் கோயில் அறக்கட்டளை மயானத்திற்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கு அவரது உடல் ஏற்கனவே அறிவித்தபடி மதசடங்குகள் எதுவுமின்றி தகனம் செய்யப்பட்டது.

தொடர்ந்து மாலை 6.30 மணிக்கு நெய்தல் அமைப்பு சார்பில் நகர்கோவில் பி.டி.பிள்ளை மண்டபத்தில் அவருக்கு நினைவு அஞ்சலி கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு தலைமை வகித்து பேராசிரியர் பத்மனாபன் பேசியதாவது:-

"சுந்தர ராமசாமியை எழுத்தாளர் என்பதைவிட நண்பர் என்னும் அடிப்படையில் அதிகமாக நான் அறிவேன். அவரது எழுத்துக்களை விட அவரது ஆளுமை மிகவும் எனக்கு பிடிக்கும். அவரது கவிதை,கட்டுரைகளை விட உரையாடல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். அவரது உரையாடல்கள் நிறைய பதிவு செய்யப்பட வில்லை. மாறுபட்ட கருத்துகள் இருந்தாலும், நட்பை பாதிக்காத வகையில் அவர் நடந்து கொள்வார். புதிய எழுத்தாளர்களுக்கான ஆதரவு, மனிதாபிமானம் ஆகியவை அவரை மனித நேயமுள்ள ஒரு மனிதராக படம்பிடித்துக் காட்டியது. ஒரு பெரிய பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் போல் மனதில் இடம்பிடித்த அவரது பிரிவு ஈடு செய்ய முடியாத இழப்பாகும்." இவ்வாறு அவர் பேசினார்.

தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் மாநில தலைவரும், எழுத்தாளருமான பொன்னீலன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியதாவது:-

"என்னோடு துவங்கி, புதிய எழுத்தாளர்களை அறிமுகப்படுத்துவதில் அதிக அக்கறையை அவர் காட்டி வந்தார். கவிஞனாக இருந்த என்னை நாவல் உலகத்திற்கு நுழைய செய்த பெருமை அவரையே சாரும். ஜீவாவின் தாக்கம், புதுமைப் பித்தனின் ஆளுமை, ரகுநாதனின் நட்பு ஆகியவை அவரை மிகவும் பாதித்திருந்ததை நான் அறிவேன்.

இடதுசாரிகளுடன் நெருக்கமாக இருந்த அவர் 1955ல் உலக அளவில் நடந்த மாறுதல் காரணமாக தன் எழுத்துக்களில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்திக்கொண்டார். தமிழ் இலக்கியத்தில் அவர் தடம் பதித்த முதல் நாவலான ஒரு புளிய மரத்தின் கதை இடதுசாரிகள் சிந்தனை கலந்தே எழுதப் பட்டுள்ளது. அவரை ஒரு மொழிபெயர்ப்பாளர் என்றும் சொல்லலாம். தகழியின் பல படைப்புகளை அவர் மலையாளத்தில் இருந்து மொழி பெயர்த்துள்ளார்.

தமிழ் இலக்கிய சூழலுக்கு பொருத்தமில்லாத குமரிமாவட்டத்தில் ஒரு இலக்கிய இதழை துவங்கி, இங்கிருந்து சென்னைவரை ஒரு தாக்கத்தை அவர் ஏற்படுத்தினார். அந்த இதழ் வியாபார தன்மையற்று இருந்தது மற்றுமொரு சாதனையாகும். சென்னையில் சென்று வாங்க வேண்டிய புத்தகங்களைக்கூட இங்கு வாங்கும் அளவிற்கு ஒரு பெரிய புத்தக நிறுவனத்தை அவர் துவங்கியதும் ஒரு சாதனை தான். எழுத்து உலகிற்கு அவருடைய இழப்பு மிகப்பெரிய பேரிழப்பாகும்." இவ்வாறு அவர் பேசினார்.

இரங்கல் கூட்டத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த எழுத்தாளர்கள், பேராசிரியர்கள், மறைந்த எழுத்தாளரின் குடும்பத்தினர், உறவினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

செய்தி:- தினமலர் நாகர்கோவில். (அக். 21, 22.)
***
தமிழ்ப்பதிவுகள்

2005-10-18

மாமதயானையும் மறக்க இயலாத நாளும்

Image hosted by TinyPic.com

நாகர்கோவில் அருகிலுள்ள வேளிமலையில் உள்ள முருகன் கோயில் பிரசித்தமானது. இதனை குமாரகோவில் என்று அழைப்பார்கள். இங்கிருந்து நவராத்திரி உற்சவத்துக்காக ஆண்டு தோறும் திருவனந்தபுரத்துக்கு சுவாமி ஊர்வலம் செல்லும். வெள்ளிவாகனம் என்னும் குதிரை சிலையுடன் குண்டனி அம்மையும் கோரச்சாமியும் ஊர்வலம் செல்வதாக பெரியவர்கள் கூறுவர். கோரச்சாமி என்பது குமாரசாமியின் மருவல்.
(இந்தப் புராணத்தை பின்னொரு சமயம் எழுதுகிறேன்.) ஊர்வலத்தில் நெற்றிப்பட்டம் சூட்டி அலங்கரிக்கப்பட்ட யானைகளும் செல்வது வழக்கம். இந்த ஆண்டு இவ்வூர்வலம் குமாரகோவிலில் இருந்து செப்டம்பர் 30 அன்று புறப்பட்டது.

*
செப்டம்பர் 30 அன்று பகல் திருவனந்தபுரத்தில் என் சகோதரர் திருமணம் முடிந்து மணமக்களுடன் வாகனங்களில் திரும்பிக் கொண்டிருந்தோம். தமிழக எல்லைக்குள் நுழைந்து மார்த்தாண்டத்தை கடந்து சென்றபோது வழியில் காவலர்கள் நின்று வாகனங்களை திருப்பிக் கொண்டு செல்லுமாறு எச்சரித்துக் கொண்டிருந்தனர். எந்த வாகனமும் அதைப் பொருட்படுத்தாமல் முன்னேற நாங்களும் அதைப் பின்பற்றினோம். சற்று தூரத்தில் சில காவலர்கள் வண்டியை நிறுத்தி விட்டு இறங்கி ஓடிவிடுங்கள் என்று கத்திக் கொண்டே ஓடிவந்தனர். நாங்கள் நிதானமாக வண்டியை நிறுத்தி என்னவென்று கேட்க காவலரோ பதட்டத்துடன் "ஊர்வல யானைக்கு மதம் பிடித்துவிட்டது. இந்தப் பக்கமாக ஓடிவந்து கொண்டிருக்கிறது. உடனே இறங்கி ஓடிவிடுங்கள்..." என்று கூவினார்.

அதைக்கேட்டதும் மணமக்கள் வாகன ஓட்டுநர் காரை நிறுத்தி இறங்கி சாலையோரமாக போய் நின்று கொண்டார். பின்னால் வந்து கொண்டிருந்த எங்கள் காரோட்டி காரை ஓரமாக செலுத்தி அங்கே நின்று கொண்டிருந்த பேருந்தின் மறுபுறம் கொண்டு போய் நிறுத்தினார். சில நிமிடங்களில் வேகமாக எதிர்ப்புறமிருந்து ஓடிவந்து கொண்டிருந்த யானையை காண முடிந்தது. அதன் பின்னாலேயே துப்பாக்கியால் குறிபார்த்தபடி வேனில் தொற்றிக்கொண்டு போலீசார். ஒருவர் வேகமாக சைக்கிளை ஓட்டியபடி வர பின்னாலிருந்தவர் கையில் ஒரு பெரிய வாழைக்குலை. சைக்கிள்வேகமாக முன்னேறி யானையைக்கடந்து சென்றது. பின்னாலிருந்தவர் வாழைக்குலையை யானையின் முன்பாக எறிந்தார். யானை திரும்பிக்கூடப் பார்க்காமல் வாழைக்குலையைக் கடந்து சென்றது. யானை கண் மறைந்ததும் நாங்கள் அந்த இடத்தை விட்டு கிளம்பினோம். கிட்டத்தட்ட ஒரு கிலோமீட்டர் வந்த பிறகே யானையை பின்னே விரட்டி வந்த மக்கள் கூட்டம் எதிர்வரக்கண்டோம். அப்போ யானை எவ்ளோ வேகமா போயிருக்கும்?

இன்னும் இரண்டு கிமீ தூரத்தில் ஊர்வலத்தில் வந்த மற்றொரு யானையும், சப்பறங்களும், பக்தர்களும் நிறுத்தி வைக்கப் பட்டிருந்தனர். அந்த இடத்தில் தான் யானைக்கு மதம் பிடித்திருக்கிறது. யானைக்கு மதம் பிடித்து ஓடினாலும் உண்மையில் அது யாரையும் துன்புறுத்தவில்லை. சாலையின் மத்தியக் கோட்டை ஒட்டியே பல கிலோமீட்டர் தூரம் ஓடி கடைசியில் ஒரு சிறிய கோவிலருகே படுத்துக் கொண்டதாக மறுநாள் பத்திரிகைகளில் பார்த்துத் தெரிந்து கொண்டோம்.

முதுமலைக் காடுகளில் காட்டு யானைக் கூட்டத்துக்கு நடுவே ஜீப்பில் சாகச சவாரி செய்தபோது கிட்டாத திரில்லை இங்கே அனுபவித்தோம். கையில் டிஜிட்டல் கேமராவை வைத்துக் கொண்டு நான் எடுக்க மறந்த ஷாட்டை கல்யாண போட்டோகிராபர் எடுத்துத் தந்தார்...

2005-10-16

சுரா எனும் எழுத்துச்சுடர் அணைந்தது

Image hosted by TinyPic.com


ஒரு மாத இடைவெளிக்குப் பிறகு இன்று தான் மீண்டும் வலைப்பதிவுகளை வாசிக்க முடிந்தது. காலை ஆறரை மணிக்கு இணையத்தில் நுழைந்து தமிழ்மணத்தில் பதிவுகளின் தலைப்புகளை மேய்ந்த போது சுந்தரமூர்த்தி மற்றும் தங்கமணி எழுதிய பதிவுகளைப் பார்த்து அதிர்ச்சியாகி விட்டது. கூகுளில் செய்திகளைத் தேடியபோது மலையாள மனோரமா இணைய தளத்தில் மட்டுமே சுராவின் மரணச்செய்தி வெளியிடப் பட்டிருந்தது. பின்னும் தேடியபோது News Today, NewKerala.com, Webindia123 போன்ற தளங்களில் காண முடிந்தது. தமிழ் யூனிகோடில் இந்தச்செய்தியை அந்த நேரத்தில் எந்தத் தளத்திலும் காணமுடியவில்லை.

காலை செய்தித்தாள்கள் வந்த பிறகு பார்த்ததில் தினமணியில் மட்டும் முதல்பக்கத்தில் குறிப்பு கொடுத்து உள்ளே விரிவாக சுராவின் வாழ்க்கைக் குறிப்பு வெளியிட்டிருந்தார்கள். தினமலரில் உள்ளே செய்தி இருந்தது. தினத்ததந்தியில் இந்தச் செய்தியை காணவில்லையென்று நண்பர் சொன்னார்.

ஆனால் மலையாளப் பத்திரிகைகளில் முதல் பக்கத்திலேயே புகைப்படத்துடன் விரிவான முக்கியச்செய்தியாக சுராவின் இறப்பு பதிவு செய்யப்பட்டிருந்தது.

அவர் மலையாள இலக்கியங்கள் பலவற்றை மொழி பெயர்த்ததும், மலையாளத்தில் மொழி பெயர்க்கப்பட்ட அவரது படைப்புக்கு சாகித்ய அகாதமி விருதை மொழி பெயர்ப்பாளர் பெற்றதும் அவர்களுக்குப் பெருமைக்குரிய விஷயங்கள்.

தேசிய விருது பெறாத சிவாஜியைப்போல சாகித்ய அகாதமி விருது பெறாமலே இறந்துவிட்ட சுராவின் படைப்புகள் பலமுறை விவாதத்துக்குள்ளாகி இருக்கின்றன. கடைசியாக பிள்ளை கெடுத்தான்விளை வரை!

* * *
92ல் உதயதாரகையை வெளியிட்ட சமயம் நான் நாகர்கோயில் செல்ல வேண்டியிருந்தது. அப்போது சுராவை சந்தித்து இதழை கொடுக்க விரும்பி அவரது வீட்டுக்குச் சென்றேன். அவர் ஊரில் இல்லை என்பதை அறிந்து கடையில் அவர் மகன் கண்ணனைச் சந்தித்து இதழைக் கொடுத்தேன். இன்னொரு முறையும் நான் சென்ற வேளை அவர் அமெரிக்காவில் இருப்பதாக அறிந்தேன். இப்படியாக அவரைச் சந்திக்கும் வாய்ப்பு தவறிவிட்டது.

என் சக சிற்றிதழ் நண்பர்கள் அவரைச் சந்தித்துப் பேசிவிட்டு வருவதும் அடுத்த இதழிலேயே அவரை கடுமையாக விமர்சிப்பதும், அதே நண்பர்கள் மீண்டும் அவரைச் சந்திக்கும் போது அவரும் எதையும் மனதில் வைத்துக்கொள்ளாமல் பேசுவதும் இலக்கியமும் வாழ்க்கையும் குறித்த பல புரிதல்களை எனக்குத் தந்துள்ளன.

அவரது படைப்புகள் தந்த அனுபவங்கள் என்பது நான் புதிதாக எதுவும் சொல்ல அவசியமில்லை. ஒவ்வொரு வாசகனும் ஒவ்வொரு படைப்பாளியும் தவிர்க்க இயலாத படைப்புகள் அவருடையவை. அவரது விமர்சகர்களாலும் மதிக்கப்படும் நமது காலத்தின் படைப்பாளிக்கு அஞ்சலி.