2005-10-22

சுந்தர ராமசாமி மறைவு: எழுத்தாளர்கள் அஞ்சலி

சுந்தர ராமசாமி உடல் தகனம்.

நாகர்கோவில்.அக்.21-

தமிழின் முதுபெரும் எழுத்தாளர் சுந்தர ராமசாமி கடந்த 15ம் தேதி அமெரிக்காவில் காலமானார். அவருடைய உடல் அமெரிக்காவிலிருந்து கொண்டு வரப்படுகிறது.

இறுதி மரியாதைக்காக இன்று (21ம் தேதி) வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நாகர்கோவில் 669, கேபி சாலை, சுந்தர விலாஸ் இல்லத்தில் வைக்கப் பட்டிருக்கும். 5 மணிக்கு உடல் செட்டிகுளம் பிள்ளையார் கோவில் அறக்கட்டளை மயானத்தில் தகனம் செய்யப்படும். மதச் சடங்குகள் எதுவும் இராது.

மாலை 6.30 மணிக்கு நெய்தல் சார்பில் ராமவர்மபுரம் பி.டி. பிள்ளை மண்டபத்தில் அஞ்சலி கூட்டம் நடை பெறும்.
***

Image hosted by TinyPic.com

நாகர்கோவில்.அக்.22-

தமிழகத்தின் முதுபெரும் எழுத்தாளர் சுந்தர ராமசாமியின் உடல் நாகர்கோவிலில் நேற்று தகனம் செய்யப்பட்டது. தமிழகம் மற்றும் கேரளாவை சேர்ந்த எழுத்தாளர்கள் பலர் அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

தமிழ் இலக்கிய உலகில் நாவல் மற்றும் சிறுகதை அடிப்படையில் ஒரு மாபெரும் மாற்றத்தை உருவாக்கிய எழுத்தாளராக சுந்தர ராமசாமி கருதப்படுகிறார். அவரது இரண்டாவது நாவலான ஜே.ஜே. சில குறிப்புகள் தமிழ் புதின வரலாற்றில் நவீன இலக்கிய தடத்தை பதித்தது. தமிழ் இலக்கிய உலகில் நீண்ட மைல்கல்லை கடந்து வந்துள்ள எழுத்தாளர் சுந்தர ராமசாமி கடந்த சில நாட்களாக நுரையீரல் பாதிப்பு காரணமாக அவதிப்பட்டு வந்தார். இதற்காக அமெரிக்காவில் சிகிட்சை பெற்று வந்த சுந்தராமசாமி கடந்த 15ம் தேதி காலமானார் அவரது உடல் அமெரிக்காவில் இருந்து நேற்று நாகர்கோவிலில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டுவரப்பட்டது.

தமிழ் மற்றும் மலையாள இலக்கிய உலகை சேர்ந்த எழுத்தாளர்களும், உறவினர்கள் பலரும் அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். காலை 10 மணி முதல் மாலை நான்கு மணி வரை அவரது உடலுக்கு இறுதி மாரியாதை செலுத்தப்பட்டது. எழுத்தாளர்கள் திலகவதி, பிரசன்னா ராமசாமி, பொன்னிலன், நாஞ்சில் நாடன், ஜெயமோகன், தேவேந்திர பூபதி, அப்பாஸ், சுகுமாரன், இளவேனில், சுகிர்தா ராணி, சல்மா, ரமேஷ், பிரமிள், வெங்கடாசலபதி, மோகன், நஞ்சுண்டான், கோணங்கி, உமாமகேஸ்வரி, தமிழ்செல்வன், கலாப்ரியா, மனுஷ்ய புத்திரன், விக்கிரமாதித்தன், ஓவியர் ஆதிமுலம், கேரள பல்கலைக்கழக தமிழ்துறை தலைவர் நாச்சிமுத்து, நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தமிழ்துறை தலைவர் பரமசிவன் ஆகியோர் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

மலையாள எழுத்தாளர்கள் புனத்தில் குஞ்ஞப்துல்லா, சக்கரியா, ஆற்றுர் ரவிவர்மா, மதுநாயர், தமிழ்நாடு கலைஇலக்கிய பெருமன்ற மாவட்ட தலைவர் ஸ்ரீகுமார், நெய்தல் கிருஷ்ணன், டாக்டர் நாச்சி முத்து, தமிழாலயம் பச்சைமால் ஆகியேரும் அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவரது உடல் நாகர்கோவிலில் உள்ள அவரது வீட்டில் இருந்து செட்டிக்குளம் பிள்ளையார் கோயில் அறக்கட்டளை மயானத்திற்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கு அவரது உடல் ஏற்கனவே அறிவித்தபடி மதசடங்குகள் எதுவுமின்றி தகனம் செய்யப்பட்டது.

தொடர்ந்து மாலை 6.30 மணிக்கு நெய்தல் அமைப்பு சார்பில் நகர்கோவில் பி.டி.பிள்ளை மண்டபத்தில் அவருக்கு நினைவு அஞ்சலி கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு தலைமை வகித்து பேராசிரியர் பத்மனாபன் பேசியதாவது:-

"சுந்தர ராமசாமியை எழுத்தாளர் என்பதைவிட நண்பர் என்னும் அடிப்படையில் அதிகமாக நான் அறிவேன். அவரது எழுத்துக்களை விட அவரது ஆளுமை மிகவும் எனக்கு பிடிக்கும். அவரது கவிதை,கட்டுரைகளை விட உரையாடல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். அவரது உரையாடல்கள் நிறைய பதிவு செய்யப்பட வில்லை. மாறுபட்ட கருத்துகள் இருந்தாலும், நட்பை பாதிக்காத வகையில் அவர் நடந்து கொள்வார். புதிய எழுத்தாளர்களுக்கான ஆதரவு, மனிதாபிமானம் ஆகியவை அவரை மனித நேயமுள்ள ஒரு மனிதராக படம்பிடித்துக் காட்டியது. ஒரு பெரிய பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் போல் மனதில் இடம்பிடித்த அவரது பிரிவு ஈடு செய்ய முடியாத இழப்பாகும்." இவ்வாறு அவர் பேசினார்.

தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் மாநில தலைவரும், எழுத்தாளருமான பொன்னீலன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியதாவது:-

"என்னோடு துவங்கி, புதிய எழுத்தாளர்களை அறிமுகப்படுத்துவதில் அதிக அக்கறையை அவர் காட்டி வந்தார். கவிஞனாக இருந்த என்னை நாவல் உலகத்திற்கு நுழைய செய்த பெருமை அவரையே சாரும். ஜீவாவின் தாக்கம், புதுமைப் பித்தனின் ஆளுமை, ரகுநாதனின் நட்பு ஆகியவை அவரை மிகவும் பாதித்திருந்ததை நான் அறிவேன்.

இடதுசாரிகளுடன் நெருக்கமாக இருந்த அவர் 1955ல் உலக அளவில் நடந்த மாறுதல் காரணமாக தன் எழுத்துக்களில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்திக்கொண்டார். தமிழ் இலக்கியத்தில் அவர் தடம் பதித்த முதல் நாவலான ஒரு புளிய மரத்தின் கதை இடதுசாரிகள் சிந்தனை கலந்தே எழுதப் பட்டுள்ளது. அவரை ஒரு மொழிபெயர்ப்பாளர் என்றும் சொல்லலாம். தகழியின் பல படைப்புகளை அவர் மலையாளத்தில் இருந்து மொழி பெயர்த்துள்ளார்.

தமிழ் இலக்கிய சூழலுக்கு பொருத்தமில்லாத குமரிமாவட்டத்தில் ஒரு இலக்கிய இதழை துவங்கி, இங்கிருந்து சென்னைவரை ஒரு தாக்கத்தை அவர் ஏற்படுத்தினார். அந்த இதழ் வியாபார தன்மையற்று இருந்தது மற்றுமொரு சாதனையாகும். சென்னையில் சென்று வாங்க வேண்டிய புத்தகங்களைக்கூட இங்கு வாங்கும் அளவிற்கு ஒரு பெரிய புத்தக நிறுவனத்தை அவர் துவங்கியதும் ஒரு சாதனை தான். எழுத்து உலகிற்கு அவருடைய இழப்பு மிகப்பெரிய பேரிழப்பாகும்." இவ்வாறு அவர் பேசினார்.

இரங்கல் கூட்டத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த எழுத்தாளர்கள், பேராசிரியர்கள், மறைந்த எழுத்தாளரின் குடும்பத்தினர், உறவினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

செய்தி:- தினமலர் நாகர்கோவில். (அக். 21, 22.)
***
தமிழ்ப்பதிவுகள்

No comments: