2005-11-25

தேர்தல் ஜோதிடம்?

கேரளாவில் திருவனந்தபுரம் பாராளுமன்ற இடைத்தேர்தல் கடந்த அக்டோபர் 18 அன்று நடை பெற்றது. இத்தேர்தல் முடிவுகளை வாக்கு எண்ணிக்கை உட்பட தான் முன்கூட்டியே கணிக்கப்போவதாக கேரளாவைச் சேர்ந்த பிரபல மாஜிக் நிபுணர் கோபிநாத் முதுகாட் அறிவித்திருந்தார்.

இந்நிகழ்ச்சியை நடத்தக்கூடாது என அரசியல்வாதிகளும் பிற மேஜிக் நிபுணர்களும் மிரட்டல் விடுத்ததைத் தொடர்ந்து பொது நிகழ்ச்சியாக நடத்துவதைத் தவிர்த்த கோபிநாத் மாநில அமைச்சர் ஒருவர் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் இந்நிகழ்ச்சியை நடத்தினார். இதன்படி தேர்தல் நடப்பதற்கு முந்தைய நாள் 11 பேர்கள் கையெழுத்திட்ட காகிதத்தில் போட்டியிடும் மூன்று முக்கிய வேட்பாளர்கள் பெறும் வாக்குகளின் எண்ணிக்கையை எழுதினார். இந்தக்காகிதத்தை ஒன்றன் பின் ஒன்றாக ஒன்பது பெட்டிகளில் அடைத்து ஒவ்வொரு பெட்டிக்கும் தனித்தனியாக பூட்டு போடப்பட்டது. பின்னர் அதை வங்கி லாக்கரில் வைத்து சீல் செய்யப்பட்டது.

வாக்கு எண்ணிக்கை துவங்கிய உடன் கோபிநாத் ஒரு இரும்புக் கூண்டுக்குள் தன்னை சிறைப்படுத்திக் கொண்டார். வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு அமைச்சர் மற்றும் வங்கி பொது மேலாளர் ஆகியோர் பொறுப்பில் லாக்கர் திறக்கப் பட்டு பெட்டி வெளியே எடுக்கப் பட்டது இவை அனைத்தும் வீடியோ பதிவு செய்யப்பட்டு வெளியே இருந்த மற்றவர்களுக்கு நேரடி ஒளிபரப்புச் செய்யப்பட்டது.

பின்னர் ஒன்பது பெட்டிகளும் ஒவ்வொன்றாகத் திறக்கப் பட்டு உள்ளே இருந்த கவர் கேரள சபாநாயகரிடம் ஒப்படைக்கப் பட்டது. அவ்ர் அதைத்திறந்து அதிகாரப்பூர்வ தேர்தல் முடிவுகளுடன் ஒப்பிட்டார். சரியாக மூன்று முக்கிய வேட்பாளர்களும் கோபிநாத் கணித்து எழுதிய வாக்கு எண்ணிக்கையே பெற்றிருந்தனர். முடிவுகள் ஒப்பிடப்பட்டு சரிபார்க்கப்பட்டதும் கோபிநாத் மகிழ்ச்சியுடன் தான் சிறைப்பட்டிருந்த கூண்டுக்குள்ளிருந்து வெளியே வந்தார். மாஜிக் உலகில் இது ஒரு முக்கிய சாதனையாக கருதப்படுகிறது.

கோபிநாத் மாஜிக் அகாடமி ஒன்றை நடத்தி வருகிறார் இதன் மூலம் நிறைய மாணவர்களுக்கு மாஜிக் தந்திரங்களை கற்றுக்கொடுத்து வருகிறார். இது தவிர தொலைக்காட்சியிலும் தொடர் நிகழ்ச்சிகள் நடத்தும் கோபிநாத் பல எளிய மாஜிக் தந்திரங்களை தொலைக்காட்சியில் வெளிப்படையாக கற்பிக்கிறார். இவை பிற மாஜிக் நிபுணர்களுக்கு பெரும் கடுப்பை ஏற்படுத்தி உள்ளது. இவரது மாணவர்கள் பார்வையாளர்களாக உள்ள அரங்குகளில் அவர்கள் செய்யும் தந்திரங்கள் தோற்றுப் போய்விடுவதும் இதற்குக்காரணம்.

கோபிநாத் ஏற்கனவே தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தி ILLUTION INDIA என்ற மேஜிக் கலைநிகழ்ச்சியை நடத்தி புகழ்பெற்றவர். மரபு ரீதியான மாஜிக் ரகசியங்களும் நவீன மாஜிக் தந்திரங்களும் கலந்த புதுமை நிறைந்தவை இவரது நிகழ்ச்சிகள். தவிர வெறும் துணுக்கு மாஜிக் நிகழ்ச்சிகளாக இல்லாமல் பொதுவான ஒரு கருத்தை வலியுறுத்தும் மாஜிக் கலைநிகழ்ச்சிகள் இவரது தனிச்சிறப்பு.

இணைப்புகள்

1. வாக்கு முன்னறிவிப்பு-செய்தி 2. கோபிநாத்தின் இணையதளம்.

2005-11-20

சிவகாசி பட்டாசு..._\|/_

விஜய் நடித்த சிவகாசி திரைப்படம் வக்கீல்களை இழிவு படுத்துவதாகக் கூறி வக்கீல்கள் கடுமையான எதிர்ப்புக்குரல் எழுப்பினர். படத்தைத் தடை செய்யக்கோரியும் காட்சிகளை நீக்கக் கோரியும் வழக்குகளும் போடப்பட்டன. சமீபத்தில் சினிமாக் காட்சிகளுக்கும் வசனங்களுக்கும் சினிமாக்காரர்களின் பேச்சுக்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து எதிர்க்கும் போக்கு வலுத்து வருகிறது.

இதே தமிழ் சினிமாவில் தமிழக கவர்னரை வில்லனாகச் சித்தரித்து படம் வந்திருக்கிறது. முதல் அமைச்சரை கொடூரமான வில்லனாக்கியும் இங்கு பல படங்கள் வந்துள்ளன. கலெக்டர்களை கொடுமைக் காரர்களாகவும் லஞ்ச ஊழல்வாதிகளாகவும் காட்டி பல படங்கள் எடுக்கப் பட்டுள்ளன.மாநிலத்திற்கு ஒரே கவர்னர், ஒரே முதல்வர்தான். முப்பதுக்குள் தான் கலெக்டர்கள். இவர்களில் யாரும் அவை தங்களை சித்தரிப்பதாகவோ இழிவு படுத்தி விட்டதாகவோ கருதி படத்தை தடை செய்ய முயல வில்லை. அவர்களெல்லாம் அதைப் பொருட்படுத்தாமல் இருக்க, ஆயிரக்கணக்கில் இருக்கும் வக்கீல்கள் தங்கள் தொழில் பெயரை பயன்படுத்தி கிண்டலடித்ததற்காக போராட்டம் நடத்துகிறார்கள்.

இதற்கு முன் வக்கீல்களை மோசமானவர்களாகச் சித்தரித்தும் பல படங்கள் வந்துள்ளன. அதே சமயம் ஒரு வக்கீல் வில்லனாக இருந்தால் அதே படத்தில் மற்றொரு நல்ல வக்கீலும் இருப்பார். அல்லது ஹீரோவே (நல்ல) வக்கீலாக இருப்பார். சிவகாசியில் நகைச்சுவைக் காட்சியாகவே நண்பர்கள் கிண்டலடிப்பதாக வருவதற்கே இவ்வளவு எதிர்ப்பும்.

உண்மையில் பல இளம் வ்க்கீல்கள் தங்கள் நண்பர்களால் இதைவிட கேவலமாக கிண்டலடிக்கப்படுவதை நானே நேரில் கண்டிருக்கிறேன். வழக்குகள் குறைவாக உள்ள, அல்லது ஆரம்ப நிலையில் உள்ள வக்கீல்கள் தினமும் கோர்ட்டுக்கு சும்மா வந்து போய்க் கொண்டிருப்பார்கள். ஏதாவது ஜாமீன் அல்லது வாய்தாவுக்கு மட்டுமே அவர்களுக்கு வாய்ப்புக் கிடைக்கும். டீக்காசு மட்டுமே கிடைக்கக் கூடும் என்பதால் இவர்களை நண்பர்கள் 'ஆமைவடை' என்று கிண்டலடிப்பார்கள். (தினசரி ஆமைவடையும் டீயும் சாப்பிட மட்டுமே கோர்ட்டுக்குப் போகிறவர்கள் என்று அர்த்தம்.) இதுபோல இன்னும் கேவலமான பல பிரயோகங்கள் வழக்கத்தில் உள்ளன. அதில் 10% கிண்டல் கூட படத்தில் இல்லாத போதும் இத்தகைய எதிர்ப்புக்கு காரணம் என்ன? (யதார்த்தம் வேண்டும் என்பவர்கள் கவனிக்க)

தமிழன் படத்தில் வக்கீலாக நடித்து பெருமைப் படுத்திய விஜய் இதில் நகைச்சுவையாகக் காட்டியதை பெரிதாக எடுத்துக் கொண்டிருக்க வேண்டாமே என்று என் வக்கீல் நண்பரிடம் கேட்டேன்.

"பிரச்சினையே அதுதான். தமிழன் படத்தில் அவன் நல்ல வக்கீலாக நடித்திருக்கலாம். ஆனால் அந்தப்படத்தில் மற்ற வக்கீல்களை எல்லாம் சட்டம் தெரியாத கேனப்பயல்களாகவும் பொதுமக்களுக்குத் தெரிந்த சட்டம் கூட வக்கீல்களுக்குத் தெரியாதது போலவும் கேவலப்படுத்தி இருந்தான். அந்தப்படத்தை நாங்கள் எதிர்த்திருந்தால் பொதுமக்களிடம் அடி வாங்கியிருப்போம். அதான் பேசாமல் இருந்தோம். இப்போ வசமா மாட்டிக்கிட்டான்யா!" என்றார்.

இது எப்படி இருக்கு?

தமிழ்ப்பதிவுகள் | தமிழ் | வலைப்பதிவு | tamilblog | tamil | tamilblogs |