2005-11-25

தேர்தல் ஜோதிடம்?

கேரளாவில் திருவனந்தபுரம் பாராளுமன்ற இடைத்தேர்தல் கடந்த அக்டோபர் 18 அன்று நடை பெற்றது. இத்தேர்தல் முடிவுகளை வாக்கு எண்ணிக்கை உட்பட தான் முன்கூட்டியே கணிக்கப்போவதாக கேரளாவைச் சேர்ந்த பிரபல மாஜிக் நிபுணர் கோபிநாத் முதுகாட் அறிவித்திருந்தார்.

இந்நிகழ்ச்சியை நடத்தக்கூடாது என அரசியல்வாதிகளும் பிற மேஜிக் நிபுணர்களும் மிரட்டல் விடுத்ததைத் தொடர்ந்து பொது நிகழ்ச்சியாக நடத்துவதைத் தவிர்த்த கோபிநாத் மாநில அமைச்சர் ஒருவர் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் இந்நிகழ்ச்சியை நடத்தினார். இதன்படி தேர்தல் நடப்பதற்கு முந்தைய நாள் 11 பேர்கள் கையெழுத்திட்ட காகிதத்தில் போட்டியிடும் மூன்று முக்கிய வேட்பாளர்கள் பெறும் வாக்குகளின் எண்ணிக்கையை எழுதினார். இந்தக்காகிதத்தை ஒன்றன் பின் ஒன்றாக ஒன்பது பெட்டிகளில் அடைத்து ஒவ்வொரு பெட்டிக்கும் தனித்தனியாக பூட்டு போடப்பட்டது. பின்னர் அதை வங்கி லாக்கரில் வைத்து சீல் செய்யப்பட்டது.

வாக்கு எண்ணிக்கை துவங்கிய உடன் கோபிநாத் ஒரு இரும்புக் கூண்டுக்குள் தன்னை சிறைப்படுத்திக் கொண்டார். வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு அமைச்சர் மற்றும் வங்கி பொது மேலாளர் ஆகியோர் பொறுப்பில் லாக்கர் திறக்கப் பட்டு பெட்டி வெளியே எடுக்கப் பட்டது இவை அனைத்தும் வீடியோ பதிவு செய்யப்பட்டு வெளியே இருந்த மற்றவர்களுக்கு நேரடி ஒளிபரப்புச் செய்யப்பட்டது.

பின்னர் ஒன்பது பெட்டிகளும் ஒவ்வொன்றாகத் திறக்கப் பட்டு உள்ளே இருந்த கவர் கேரள சபாநாயகரிடம் ஒப்படைக்கப் பட்டது. அவ்ர் அதைத்திறந்து அதிகாரப்பூர்வ தேர்தல் முடிவுகளுடன் ஒப்பிட்டார். சரியாக மூன்று முக்கிய வேட்பாளர்களும் கோபிநாத் கணித்து எழுதிய வாக்கு எண்ணிக்கையே பெற்றிருந்தனர். முடிவுகள் ஒப்பிடப்பட்டு சரிபார்க்கப்பட்டதும் கோபிநாத் மகிழ்ச்சியுடன் தான் சிறைப்பட்டிருந்த கூண்டுக்குள்ளிருந்து வெளியே வந்தார். மாஜிக் உலகில் இது ஒரு முக்கிய சாதனையாக கருதப்படுகிறது.

கோபிநாத் மாஜிக் அகாடமி ஒன்றை நடத்தி வருகிறார் இதன் மூலம் நிறைய மாணவர்களுக்கு மாஜிக் தந்திரங்களை கற்றுக்கொடுத்து வருகிறார். இது தவிர தொலைக்காட்சியிலும் தொடர் நிகழ்ச்சிகள் நடத்தும் கோபிநாத் பல எளிய மாஜிக் தந்திரங்களை தொலைக்காட்சியில் வெளிப்படையாக கற்பிக்கிறார். இவை பிற மாஜிக் நிபுணர்களுக்கு பெரும் கடுப்பை ஏற்படுத்தி உள்ளது. இவரது மாணவர்கள் பார்வையாளர்களாக உள்ள அரங்குகளில் அவர்கள் செய்யும் தந்திரங்கள் தோற்றுப் போய்விடுவதும் இதற்குக்காரணம்.

கோபிநாத் ஏற்கனவே தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தி ILLUTION INDIA என்ற மேஜிக் கலைநிகழ்ச்சியை நடத்தி புகழ்பெற்றவர். மரபு ரீதியான மாஜிக் ரகசியங்களும் நவீன மாஜிக் தந்திரங்களும் கலந்த புதுமை நிறைந்தவை இவரது நிகழ்ச்சிகள். தவிர வெறும் துணுக்கு மாஜிக் நிகழ்ச்சிகளாக இல்லாமல் பொதுவான ஒரு கருத்தை வலியுறுத்தும் மாஜிக் கலைநிகழ்ச்சிகள் இவரது தனிச்சிறப்பு.

இணைப்புகள்

1. வாக்கு முன்னறிவிப்பு-செய்தி 2. கோபிநாத்தின் இணையதளம்.

2 comments:

மணியன் said...

அப்போ ஜோதிடமெல்லாம் மாஜிக்கா ? அல்லது தேர்தலே ஒரு மாஜிக்கா ?

வலைஞன் said...

தேர்தல் கிட்டத்தட்ட மாஜிக் மாதிரி தான். மக்கள் அடுத்து என்ன செய்வார்கள் என்று எதிர்பார்க்க முடியாது அல்லவா? மக்கள் (வாக்காளர்கள்) செய்யும் மாயாஜாலமே தேர்தல்.