2004-12-26

ஆர்ப்பரிக்கும் கடல்

இன்று காலை பக்கத்து வீடொன்றில் வசிக்கும் மீனவப்பெண்மணி அவர்கள் வீட்டு போன் வேலை செய்யவில்லை என்பதால் எங்கள் வீட்டில் வந்து யாருக்கோ போன் செய்தார். பலமுறை அடித்தும் பயனில்லை. என் மனைவியும் அவர்கள் நம்பரை வாங்கி அடித்துப் பார்த்து எங்கேஜ்டாகவே இருப்பதாகக் கூறிய போது கடல் கொந்தளிப்புக் குறித்தும் கடற்கரையோரம் வசிக்கும் தன் தம்பி வீட்டுக்குப் போன் செய்ய முயற்சிப்பதாகவும் கூறினார். அப்போது நான் அது வழக்கமான கடல் கொந்தளிப்புத் தான் என்றிருந்து விட்டேன். சற்று நேரத்தில் அருகில் உள்ள இன்னொரு வீட்டில் போன் வேலை செய்யாததால் வெளிநாட்டில் உள்ள அவர்களின் தம்பி எங்கள் தொலைபேசியில் அழைத்தார். அவர்களின் உறவினர்களும் கடற்கரையோரம் வசிப்பதால் அங்கேயும் தொலைத்தொடர்புகள் சேதமாகிவிட்டதால் தொடர்பு கொள்ள இயலவில்லை என்றார்.
அதன்பிறகே சன்னில் பார்த்து அதிர்ந்தேன்.
சற்று நேரத்திற் கெல்லாம் மூட்டை முடிச்சுகளுடன் நண்டும் சின்டுமாக பக்கத்து ஊர்களில் வசிக்கும் மேற்படி உறவினர்கள் பக்கத்துவீடுகளில் வந்து நிரம்பிக் கொண்டிருந்தார்கள். அவ்வப்போது போன் பேச வந்த அவர்கள் சொன்ன கதைகள் சன்னில் கண்டதை விட கோரமானவை.....

No comments: