2004-12-26

பாதிப்பும் பார்வையும்

கடலின் சீற்றம் எத்தனை பாதிப்புக்களை ஏற்படுத்திச் சென்றிருக்கிறது என்பதும் போன உயிர்கள் தவிர இருக்கும் உயிர்களின் அத்தியாவசியத் தேவைகள் என்னென்ன என்பதும் தான் இனி சிந்தித்தாக வேண்டியவை. உலகளாவிய நிவாரண உதவிகள் கிடைக்கத் துவங்கியுள்ள நிலையில் முழுமூச்சாய் பலரும் நிவாரணப்பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு உழைப்பதைப் பார்க்க முடிகிறது. தேவைகள் மிக அதிகமாக உள்ளதால் சிலபல குறைபாடுகள் தென்பட்டாலும் உதவும் உள்ளங்களின் தன்னலமற்ற செயல்பாடுகள் அவற்றை ஈடு செய்யக்கூடும்.

முதல்வர், பிரதமர், மற்றும் தொடர்புடைய அமைச்சர்கள் தவிர மற்றவர்கள் பார்வையிடுகிறோம், ஆறுதல் கூற வந்தோம் என வந்து போவது தேவையற்றது மட்டுமல்ல நிவாரணப் பணிகளுக்கு இடையூறாகவும், அதிகாரிகளுக்குத் தொல்லையாகவும் அமைகின்றன.

அரசியல் சார்புள்ள தொலைக்காட்சிகள் இந்தக் கோர நிகழ்விலும் அரசியல் செய்யத் தவறவில்லை. சன் டிவியில் காட்டப்பட்டதெல்லாம் பார்த்தால் தமிழகத்தில் திமுக ஆட்சி நடப்பது போலவும் அவர்களே நிவாரண பணிகளை செய்வதாகவும் தோன்றியது. ஜெயா டிவியிலோ எல்லாம் அம்மா உத்தரவுப்படி நடைபெறுவதாக வரிக்கொரு தரம் உளறல் கேட்டது. கடல் பொங்கியதும் அம்மா உத்தரவுப்படிதானோ என்னவோ?. கலெக்டர்கள் பிற அதிகாரிகள் எல்லாம் இருப்பதாகவே இவர்களுக்குத் தெரியாது போலும். கடைசியில் உறக்கம் விழிப்பது என்னவோ அவர்கள் தான். அவர்களெல்லாம் சும்மா இருப்பது போலவும் எல்லாம் அரசியல்வாதிகள் தான் செய்வதாகவும் ஒரு மாயையை இவர்கள் உருவாக்கி வருகிறார்கள்.
திரும்பத் திரும்ப சடலங்களைக் குளோசப்பில் காட்டியதில் பாதிப்புக்குள்ளாகாத இடங்களிலும் பல பெண்கள் மயங்கி விழுந்தார்கள்..

No comments: