2004-12-26

கடல் கொண்டது...

வெளியே எழுந்த கூக்குரல் கேட்டு வாசலுக்கு வந்த பெண்கள் "எல்லாம் ஓடுங்க...கடல் ஊருக்குள்ள வருது" என்றபடி மக்கள் கூட்டம் ஓடிக்கொண்டிருந்தது கண்டு பதறியபடி தங்கள் பிள்ளைகளைத் தேடத் தொடங்கினார்கள்.
தகவல் கூறியபடி எல்லோரையும் விரட்டிக் கொண்டிருந்த இளைஞர்கள் "நீங்க ஓடுங்க...பிள்ளைக பின்னால வந்துருவாக..வெள்ளம் வேகமா வருது" என்று தடுத்து விரட்டினார்கள். புலம்பியபடி பெண்கள் போட்டது போட்டபடி ஓடினார்கள். வழியில் வந்து கொண்டிருந்த வேன் டாக்சி ஆட்டோக்களில் அவர்களை ஏற்றி அனுப்பினார்கள். பதறியபடி கட்டளைகளுக்கு அடிபணிந்த பெண்கள் பத்திரமான இடங்களில் இறக்கி விடப்பட்ட போதுதான் தங்கள் பிள்ளைகள் சகோதரர்கள் கணவர் மாமனார் மாமியார் என்ன ஆனார்களோ என்று புலம்பத் தொடங்கினார்கள்.
முதற்கட்ட ஓட்டத்தில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசைக்கு அழைத்துச் செல்லப் பட்டதில் தடுமாறினாலும் பின்னர் மற்ற இடங்களைக் கண்டுபிடித்து தங்கள் உறவுகளைத் தேடிக்கொண்டிருந்தார்கள். சிலர் கண்டடைந்து ஆசுவாசப் பட்ட நேரத்தில் உயிர்களும் உடமைகளும் வீடுகளும் குப்பையாய் வீசி எறியப்பட்ட கடற்கரையிலிருந்து வரிசையாய் பிரேதங்கள் மீட்கப் பட்டு எடுத்து வரப்பட்டுக் கொண்டிருந்தன.....

No comments: