2005-03-30

மதி...தொடர்ச்சி

மதி கந்தசாமி பேட்டியின் தொடர்ச்சி.....

இணையத்தில் உங்கள் பஙகளிப்புகள்?

என் இணைய பங்களிப்பு மிகவும் சிறியது. என்னைத் தவிர நிறைய செய்தவர்கள் பலர் இருக்கிறார்கள்.

தமிழ்.நெட் பாலா பிள்ளையில் தொடங்கி தமிழ்மணம் காசி வரை இருக்கிறார்கள்.
கூடவே பெயரிலி ரமணீதரன் போன்றவர்களும் இருக்கிறார்கள்.

எனக்கு தமிழில் பெரிய வாசிப்பனுபவம் என்றெல்லாம் இல்லை. ஆனால், தினமும் தமிழை வாசிக்கும் பழக்கம் இருந்தது. நான் மிகவும் சிறிய வயதிலேயே நான்கைந்து என்று அனுமானிக்கிறேன். ராஜாஜியின் சக்கரவர்த்தித் திருமகன், கந்தபுராணம் என்று படிக்க ஆரம்பித்துவிட்டேனாம். அந்த நாட்களில் எங்கள் வீட்டில் வாங்கிய கலைமகள் போன்ற மலர்களையெல்லாம் ஒன்றும் விடாமல் படிப்பேனாம். அதைத் தொடர்ந்திருந்தால் நல்ல புத்தகங்கள் படித்திருக்கலாம் என்பது என் அங்கலாய்ப்பு. சரி அதை விடுங்கள். தினமணி தினசரியையாவது படித்துக்கொண்டிருந்த எனக்கு தமிழே படிக்க கேட்க பேச முடியாத சூழலில் வாழும் வாய்ப்பு வந்தது. ஓரிரு தமிழ்ப்புத்தகங்களோடு புறப்பட்ட எனக்கு நிலமையின் தீவிரம் பிறகுதான் புரிந்தது.

நல்ல வேளையாக இணையத் தொடர்பு கிடைத்து தினமணி, விகடன், குமுதம், இந்தியா.இன்ஃபோ. திண்ணை.காம் அறிமுகமாகியது.

2001இல் விகடன்.காமில் சாரு நிவேதிதாவின் கோணல் பக்கங்களுக்கு அவர் கேட்டிருந்த பாடல் வரிகளை அனுப்பியிருந்தேன். தொடர்ந்து என்னை யார் என்னவென்று கேட்டதற்கு, தமிழ் பற்றி ஒரு புலம்பு புலம்பியிருந்தேன்.
அதற்குப் பிறகு சில வாரங்களில் மரத்தடி ரமேஷ் அப்பாதுரை ஒரு கோப்பு தயார் செய்திருந்தார். அதைப் பெறுவதற்காக ரமேஷ் அப்பாதுரை தந்த யாகூ குழுமத்தில் சேர்ந்தேன். அங்கே அறிமுகமான நண்பர்கள் பலர். ஒரு சிலர் எங்களுக்குள் பேசிக்கொள்வதற்காகத் தொடங்கிய குழுமந்தான் மரத்தடி.

குட்டிச்சுவர், மொட்டைமாடி, நாலு முக்கு, மரத்தடி என்று கையில் பல பேர்களுடன் எங்களிடம் (நான், ப்ரியா, கேவியார்) கேட்டவர் குமரேசன். எங்களோடு பிரபு, சுந்தர் என்று கொஞ்சம் கொஞ்சமாக நண்பர்களும் சேர்ந்துகொண்டார்கள்(ஆதிமரத்தடியில் பார்க்கலாம்). பிரசன்னாவும் வந்து சேர சபை களை கட்டியது. ஆனந்த் ராகவ் போன்றவர்கள் எங்களுக்குப் படைப்பு ரீதியான ஊக்கம் தந்தார்கள்.
'பெயரிலி' ரமணிதரன் எழுத்துரு ரீதியான வழிகாட்டுதல் கொடுத்தார் - அதுவரைக்கும் இணைமதியில் எழுதி படக்கோப்புகளாக அனுப்பிக்கொண்டிருந்தோம்.

ஒரு முறை சுஜாதாவுடன் அம்பல அரட்டையில் கதைத்துக்கொண்டிருந்தபோது ராயர்காப்பிகிளப் பற்றிச் சொன்னார். பில் கேட்ஸ் குறித்து எல்லே ராம் ஒரு கானா பாடியிருப்பதாகச் சொன்னார். ஒரு வழியாக சிங்கைநாதன்(செந்தில்நாதன் என்று சிங்கை வலைப்பதிவர் கூட்டங்களுக்குச் செல்பவர்) கண்டுபிடித்து ஒரு பட்டாளமாக அங்கே போய் இறங்கினோம். பாங்காக் சீனிவாசன் மரத்தடி பற்றிச் சொல்ல என்ன ஏது என்ற கேள்வி வந்தது. அப்போது மரத்தடி பற்றிச் சொன்னோம்.
நான்கைந்துபேரோடு தொடங்கிய குழுமம் படிப்படியாக வளர்ச்சி பெற்றது. காலத்தின் சுழலில் பெற்ற பெண்ணை இன்னொருவர் வீட்டுக்கு அனுப்பி வைப்போம் இல்லையா. அதுமாதிரி தனிக்குடித்தனம் வந்துவிட்டேன்.

மரத்தடிபற்றி நிறையச் சொல்லலாம். அங்கே சந்தித்த நண்பர்கள் ஏராளம். கற்ற பாடங்கள் இலக்கிய ரீதியாகவும் ஏராளம். ஏகப்பட்ட மனிதர்களைக் கண்டேன். விஷய ஞானம் உள்ள அமைதியானவர்களை ஊக்குவித்து ரசித்த இடம். பல பாடங்களையும் கற்றேன்.

மரத்தடியில் பலரின் படைப்பாற்றலுக்கு நான் ரசிகை. 'ஏட்டி' என்ற கவிதையோடு வந்த பிரசன்னா, அருமையான கட்டுரைகளுக்கு பிரபு, நிர்மலா, துளசி, கேவியார், விஜயாலயன். கவிதைகளுக்கு பிரசன்னா, நிர்மலா. கதைகளுக்கு பிரசன்னா, ஆசீஃப் மீரான். இன்னும் பலர் இருக்கிறார்கள்.

எல்லாரையும் விட என்னை வியப்பில் ஆழ்த்திய நபர் ஒருவர் இருக்கிறார். அம்பல அரட்டையில் வலைப்பதிவுகள் குழுமங்கள் பற்றிப் பேசி அரட்டையடித்துக்கொண்டிருந்தோம். ஒவ்வொன்றையும் என்னென்ன என்று ஒருவர் கேட்டபடி இருந்தார். பொதுவாக, யாருடனும் பேசிவிடும் நான், மின்னஞ்சல்முகவரி கேட்டால் யோசிப்பேன். என் மின்னஞ்சல் முகவரியைக் கொடுத்தால்தனக்குக் கொஞ்சம் விவரம் வேண் டும் என்று கேட்டார்.

கொஞ்சம் தயங்கிப்பின் கொடுத்தேன். அம்பல அரட்டைக்குப் போவதென்றால் இரவு ஒன்றரைக்கு அல்லது இரண்டரைக்குப் போக வேண்டும். ஏப்ரல்-ஒக்டோபரில் இரவு இரண்டரைக்குத் தொடங்கி மூன்றரைக்கு முடியும். நான் மின்னஞ்சல் கொடுத்துக் கொஞ்ச நேரத்தில் அவர் மரத்தடியில் சேர்ந்தார். குழுமத்தில் சேர்பவர்களுக்குத் தேவையான மடல்களை அனுப்புவோம். முரசு அஞ்சல் பற்றி சந்தேக மடல் ஒன்றை அனுப்பியிருந்தார். இதற்கு முன் அவர் கணினியில் தமிழில் தட்டச்சியதில்லை அவருக்குத் தேவையான சுட்டிகளைக் கொடுத்துவிட்டுப் போய்விட்டேன்.

அடுத்த நாள் சாவகாசமாக வந்தால், மரத்தடியில் ஒரே களேபரம். யாருடா ஒரு புது ஆள் வந்து இப்படியெல்லாம் கலாட்டா செய்கிறது என்று எல்லாரும் பார்த்தார்கள்.அவர் அசரவேயில்லை. முகமூடியோ என்று பயந்தார்கள்/பயந்தோம். ஐபி நம்பர் எல்லாம் பார்த்தோம். குழுமத்தில் கேள்வி கேட்டோம். தொலைபேசி எண் கொடுத்து தான் இன்னார்தான் என்று சொன்னார்.

அவர் வந்து சேர்ந்தது ஆகஸ்ட் மாதக் கடைசியில். அப்போது ஆண்டு விழாக்கொண்டாட்டம் நடந்துகொண்டிருந்தது.

குழும உறுப்பினர்களுடன், முக்கியமாக பிரசன்னாவுடன் பயங்கர வாக்குவாதம். பலரும் இன்னாராக இருக்குமோ இன்னாராக இருக்குமோ என்றபடி இருந்தார்கள். சென்னையில் இருந்து சாக்ரமெண்டோ வரை இதுதான் பேச்சு. ஹாங்காங்கில் இருப்பதால் இவரோ அவரோ என்றபடி மக்கள்.

இப்படி அவரைச் சந்தேகித்த மக்கள் அனைவரும் மூக்கில் கை வைக்கும்படி, ஒரு சொல் எழுதினால் பேசினால் சத்தம்போடாமல் கேட்கும்படி செய்தார் அவர். மரத்தடியில் இருக்கும் உறுப்பினர்களுக்கு சிற்சில வேலைகளைப் பகிர்ந்துகொடுப்பது வழக்கம். குழுமம் அவர்களுடதும் என்ற பிணைப்பு வரும் என்பதனால். சுட்டிகள் பகுதியைக் கொஞ்சம் சீரமைக்க முடியுமா என்று கேட்டேன். என்ன செய்வது என்று விலாவாரியாகச் சொன்னால் செய்கிறேன் என்றார். கொஞ்சம் சிரமப் பட்டு சொன்னதும் கப்பென்று பிடித்துக்கொண்டார். அப்போது அவரிடம் மரத்தடி.காம் பற்றிச் சொல்லி, அதிலும் பங்குபெறுமாறு கேட்டேன். மறுபடியும் சொல்லிக்கொடுத்தால் செய்கிறேன் என்றார்.

எக்ஸ்பியின் யூனிகோடு பற்றி பரி வகுப்பெடுக்க, இணையத்தளத்தில் என்னென்ன செய்வது என்று நான் சொல்லிக்கொடுக்க அதையும் சில நாட்களில் பிடித்துக்கொண்டார். கொஞ்சம் கொஞ்சமாக மாற்றங்களைச் செய்தார். சில மாதங்களுக்குப் பிறகு போட்டி சமயத்தில் இணையத் தளம் முழுவதும் அழிந்துபோக இரவுபகல் விழித்து எல்லாவற்றையும் தொடக்கத்தில் இருந்து உருவாக்கினார்.

ஒற்றை வரியில் சொல்கிறேன். ஆனால், அப்போதிருந்த பிரச்சினைகளில் எல்லோருக்கும் ஆதரவான வார்த்தைகள் சொன்னபடி, நான் இருக்கேன் என்றபடி நங்கூரமாக இருந்தவர். அடாத மழையிலும் விடாது கப்பல் விட்டவர். முடியாது என்ற சொல் அவரது அகராதியில் இல்லை என்பது இப்போது எல்லோருக்கும் தெரியும். அபாரமான ஞானம், உழைப்பு, திறமை கொண்டவர். மரத்தடி இணையத்தளம் அவரது குழந்தை.

இலக்கியமெல்லாம் படித்ததில்லை என்று சொல்லும் அவரின் மடல்களுக்கும், கட்டுரைகளுக்கும் கவிதைகளுக்கும் கதைகளுக்கும் இங்கு பல விசிறிகள்.

வலைப்பதிவுகளிலும் அவ்வப்போது பின்னூட்டமிடும் அவரை வலைப்பதிவொன்றைத் தொடங்குமாறு நச்சரித்து வருகிறேன். பார்ப்போம்.

ஒரு சில விஷயங்களில் வேறுகருத்துகள் இருந்தாலும் ஜெயஸ்ரீயின் எழுத்துக்கு நான் விசிறி. எங்கேயாவது, எப்படியாவது அவர் எழுத வேண்டும் என்பது என்னுடைய விருப்பம்.

பொதுவாக ஆண்/பெண் என்று பிரித்துப் பார்க்கப் பிடிக்காது எனக்கு. ஆனால், ஜெயஸ்ரீயைப் போல ஆணித்தரமான கருத்துகளைக் கொண்ட பெண்களை தமிழில் நான் சந்தித்ததில்லை. எழுத்துலகில் ஓரிருவர் இருக்கலாம். ஆனால், அவர்களுக்கு இருக்கும் இலக்கிய படிப்பு இவரிடம் இல்லையென்பது இன்னமும் வியப்பளிப்பது. ஜெயஸ்ரீயைப் பற்றி நிறைய எழுதலாம். மரத்தடி இணையத்தளத்தில் அவர் எழுதியிருப்பதைத் தாண்டி
http://maraththadi.com/AuthorArticle.asp?lngAuthorId=54,
மரத்தடி குழுமத்தில் போனவருடம் அவர் எழுதியிருப்பதையும்
http://groups.yahoo.com/group/Maraththadi/messagesearch?query=jsri

மரபிலக்கியம் குழுமத்தில் ஹரியண்ணாவுடன் நிகழ்த்திய வாதங்களையும் படியுங்கள்.
http://groups.yahoo.com/group/Marabilakkiyam/messagesearch/589?query=jsri

இப்படிப்பட்ட திறமையுள்ளவருக்கு மரத்தடியில் இத்தனை வேலைகளைக் கொடுத்துவிட்டோமே என்று வருந்திய நாட்கள் பல! வலைப்பதிவொன்றை எப்போது திறப்பார் என்று பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

ரொம்ப ஜெயஸ்ரீ புராணம் பாடிட்டேனில்ல? மக்கள் அடிக்க வர்ரதுக்கு முன்னாடி ரூட்டை மாத்துறேன். ஜெயஸ்ரீ ஒரு ஆறுமாசமாவது இணையப் பக்கம் வரமாட்டார் என்ற தைரியத்தில் எழுதியதுதான் மேலே இருப்பது!

இணையத்தில் பலருடைய எழுத்துகளுக்கு நான் விசிறி. 'பெயரிலி' ரமணிதரன்[ரமணியின் ஒரு வரியில் ஓராயிரம் கதை பேசும் எழுத்துக்கு விசிறி நான். முதல் விசிறி! யாரும் வந்தால் அடிதடி இருக்குது சொல்லிட்டன் ஐசே - சிங்கப்பூராரே கேக்குதோ?...] ஹரிகிருஷ்ணன்[அருமையான கட்டுரைகள்.
கட்டுரைகளைப் படித்து அழ வைத்தவர் இவர் ஒருவர்தான். தம்மக்கள் கட்டுரையைப் படியுங்கள் http://harimozhi.com/Article.asp?id=224], இரா.முருகன்(அருமையான observation. படிக்கும்போது நாம் அங்கேயே இருப்பதைப்போல உணருவோம். இங்கிலாந்தில் இருந்தபோது பிரதி சனியும் வரும் கட்டுரைகள் டாப் டக்கர்! மலையாள உலகினை தமிழிணையத்தில் பகிர்ந்துகொள்பவர்
http://groups.yahoo.com/group/rayarkaapiklub],
டாக்டர்ஜெயபாரதி[எத்தனையோ விஷயங்கள் தெரியும் இவருக்கு. தமிழர் பற்றிய பல விஷயங்களை இவரிடம் தெரிந்துகொள்ளலாம். அகத்தியம் என்ற ஒரு பொக்கிஷம் நம்மில் பலருக்கும்[வலைப்பதிவர்] அறிமுகமில்லாதது வருந்தத் தக்கது
http://groups.yahoo.com/group/agathiyar/ ] ,
இராம.கி. ஐயா[கல்வெட்டு பற்றி இவர் எழுதிய மடல்தான் நான் படித்த முதல் மடல், தமிழ் பற்றி ஆழ்ந்த அக்கறை கொண்டவர். அருமையான பல மடல்களுக்குச் சொந்தக் காரர்] யாகூ குழுமங்களில் நான் சந்தித்தவர்களில் ஒரு சிலரைக் குறிப்பிட்டிருக்கிறேன்.

ஆங்கிலத்தில் வலைப்பதிவு செய்யலாம் என்று bloggerஇல் சும்மா விளையாடிக்கொண்டிருந்த காலத்தில் மாலனிடம் இருந்து ஒரு மடல் வந்தது. புதிதாக ஒரு விஷயம் வந்தால் அதை நோண்டிப்பார்க்கும் கெட்ட பழக்கம் எனக்கிருக்கிறது. தமிழிலும் வலைபதியலாம் என்று சொல்கிறாரே என்று முயன்றதில் கொஞ்சப் போராட்டத்துக்குப் பிறகு வலைப்பதிவில் தமிழ் வசப்பட்டது. தமிழருக்கே உரிய குணத்தால் தொழில்நுட்ப ரீதியாக வளர்கிறோமோ இல்லையோ பெயர் பற்றி விவாதிக்க ஆரம்பித்தோம். வலைப்பூ என்ற அழகியல் சார்ந்த பெயரை ஓரிருவர் முன்னிறுத்தினாலும் வலைப்பதிவு என்ற பெயரே நிலைத்து நிற்கிறது. வெங்கட்டோ, ரமணிதரனோ பரிந்துரைத்ததாக ஞாபகம்.

அப்போது எனக்குத் தெரிந்து வலைப்பதிவுகள் வைத்திருந்தது மாலன், பத்ரி, ரமணிதரன், அருணா, நா.கண்ணன் ஆகிய சிலர்.

மரத்தடி குழுமத்தின் வளர்ச்சியைக் கண்டிருந்த எனக்கு, வலைப்பதிவுலகமும் வள்ரும் என்ற நினைப்பு இருந்தது. இந்தியர்களுக்கான வலைப்பதிவு பட்டியல் ஒன்றை அனிதா போரா என்பவரது வலைப்பதிவில் பார்த்தேன். தமிழுக்கும் இப்படியொன்றைச் செய்தால் என்ன என்று முயன்றதுதான்
Tamil Blogs(http://tamilblogs.blogspot.com).

தமிழில் முதன்முதலில் வலைப்பதிவைத் தொடக்கியவர் நவநீதகிருஷ்ணன்.
[http://www.navan.name/blog/index.php?m=200301#post-18
வலைப்பதிவுலகில் பல அருமையான பதிவாளர்களையும் நண்பர்களையும் சந்தித்தேன். பரி, காசி வினோபா என்று நல்லதொரு கூட்டம் சேர்ந்தது.

தமிழ் வலைப்பதிவுகளில் வரும் நல்ல விஷயங்களை ஒருவர் ஒவ்வொருவாரமாக வந்து அலசினால் என்ன என்று ஒருநாள் தோன்றியது.
http://valaippoo.blogspot.com/2003_07_27_valaippoo_archive.html
ஏதோ ஒரு ஆர்வத்தில் தொடங்கினேனே ஒழிய, அதில் கவனம் செலுத்தவில்லை. எப்போதாவது எதையாது குறித்தேன். இது சரிவராது என்று நினைத்து, மூன்று வலைப்பதிவர்களிடம் கேட்போம். அவர்கள் சரி சொன்னால் செய்வோம், இல்லையென்றால் இழுத்துமூடுவோம் என்று முடிவுசெய்து சந்திரவதனா, பரி, மீனாக்ஸ் மூவரிடமும் கேட்டேன். மூன்று பேரும் மிகவும் சந்தோஷத்துடன்
ஒப்புக்கொண்டார்கள்.
பலருக்கு மலரும் நினைவுகள் வரும்.[வினோபா, அந்த நாய்க்குட்டி துரத்தினதில ஓடின நீங்கள் இப்பதான் திரும்பியிருக்கிறீங்க போல ;) ].

காசி தீபாவளி நாயகராக கலக்கியிருப்பார்.

வலைப்பதிவுகளுக்குத் திரும்புவோம்.

தொடர்ந்து சுந்தரவடிவேல் தனது அழகிய பதிவுகளில் கவர்ந்தார். கடல், பனி, பழமொழி, நாட்டுப்பாடல்கள் என்று பல விஷயங்களை எழுதியவர் ஒரு கவிதையில் எல்லோரையும் உலுக்கிப்போட்டார்.[எந்தக் கவிதை என்று சொல்லுங்கள். குழுமங்களிலும் அந்தக் கவிதையைப் பகிர்ந்துகொண்டார்கள்.] தங்கமணி, பாலாஜி-பாரி என்று பலர் அந்த சமயத்தில் எழுத வந்தார்கள். வாசகர்களையும் கவர்ந்தார்கள்.

ஒரு காலத்தில் தமிழ் வலைப்பதிவுகள் பட்டியல், வலைப்பூ மற்றும் மரத்தடி என்று பலசோலிகள் நேரத்தை விழுங்கியதால் காசியிடம் உதவி என்று போனேன். பல மாதக்கணக்காக இழைத்து உருவாக்கிய தமிழ்மணம் பற்றி நான் சொல்லத் தேவையில்லை.'கலக்கல்' காசி அவர்.

நான் முழுக்க முழுக்க இணையத்தின் குழந்தை. மரத்தடியில் ஏதாவது கதை பேசிக்கொண்டிருந்தபோது நான் இலங்கையைச் சேர்ந்தவள் என்பதை அறிந்துகொண்ட நண்பர்கள் ஊரைப்பற்றியும் ஊர் நினைவுகளையும் பகிர்ந்துகொள்ளச் சொல்லித் தூண்டினார்கள். பொங்கல் தினக் கொண்டாட்டங்களைப் பற்றியும் பனை மரத்தைப் பற்றியும் எழுதினேன். அன்றைக்குப் பிடித்த வியாதி. இதற்கு வைத்தியமுமில்லை, வியாதியும் தீராது என்று தோன்றுகிறது. என் வலைப்பதிவில் என் கட்டுப்பாட்டுக்குள் நான் விரும்பியதை மட்டுறுத்துனர் என்ற கட்டுக்குள் இல்லாமல் சுதந்திரமாக எழுதப் பயன்படுத்திக்கொண்டேன்.
இப்போதும் ஏதாவது விஷயங்கள் எழுதத் தூண்டினால் எழுதுகிறேன். திரைபடங்களைப்பற்றியும் முதலில் மரத்தடியிலேயே எழுதினேன். ஓரிருவரியில் எழுத, நண்பர்கள் விரிவாக எழுதச் சொன்னார்கள். நான் மதிக்கும் நண்பர்களும் ஊக்குவித்தார்கள், அதனால் சில திரைப்படங்களைப்பற்றி எழுதினேன்.

தோழியர் கூட்டுவலைப்பதிவு:

தமிழிணையத்தில் எழுதும் பெண்கள் எத்தனைபேர் என்று எண்ணிப்பார்த்தால் ஒரு சதவிகிதம் கூட இருக்க மாட்டார்கள். குழுமங்களில் மிகவும் குறைந்த எண்ணிக்கையிலேயே இருக்கிறார்கள். பத்துவிரலில் எண்ணிவிடலாம். மரத்தடியில் ஏனைய குழுமங்களைவிட அதிகமாக இருக்கிறார்கள். வலைப்பதிவுகள் குழுமங்களைவிடச் சுதந்திரமான, பாதுகாப்பான விஷயமாக எனக்குத் தெரிந்தது. குழுமங்களில் எழுதினால் மின்னஞ்சல் முகவரிக்கு வரும் தனியஞ்சல்களுக்கு அஞ்சிப் பெண்கள் பெரிதாக எழுதுவதில்லை. எனக்குத் தெரிந்த பெண்களை ஒரு கூட்டு வலைப்பதிவு தொடங்கிக் கூப்பிட்டால் என்ன என்று தோன்றியது. எனக்குத் தெரிந்த, நான் மதிக்கும் பெண்களை அழைத்தேன். சிலர் ஆர்வத்தோடு ஒப்புக்கொண்டார்கள். ஆண்களைவிட பெண்கள் சினேகமாகப் பழகுவார்கள் புரிந்துணர்வு மிக்கவர்கள் என்பது என்னுடைய கணிப்பு. நாடுவாரியான பிரிவு இல்லாமல் நட்பாகப் பழகுவார்கள் என்று நான் நினைத்தது பொய்க்கவில்லை.

weblogs.us JDஇடம் கூட்டு வலைப்பதிவிற்கு இடம் கேட்டேன். அவரும் மிகவும் சந்தோஷத்துடன் உற்சாகப் படுத்தி இடம் கொடுத்தார். நான் கேட்ட சலுகைகளையும் கொடுத்தார். ஆனால், அவரது புதிய செர்வரில் யூனிகோடு இருக்கவில்லை(அப்போது). அவரிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டு, அப்போதுதான் யாழ்.நெட்டில் மூவபிள் டைப் வசதி செய்துகொடுத்த சுரதாவிடம் இடம் கேட்டேன். அவரும் நான் கேட்டு வாய்மூட முதல் 'ஓம். தாராளமாக.' என்றார். இன்றைக்கு வரைக்கும் நான் கேட்கும் விஷயங்களைச் செய்து தருகிறார்.

தோழியர் கூட்டுவலைப்பதிவு உருவாக முக்கியமான காரணம் ஐயர். ஒரு நாள் பேசிக்கொண்டிருந்தபோது, இப்படியொரு எண்ணம் இருக்கிறது என்று சொன்னேன். அவர் ஸ்விட்சர்லாந்து, ஆஸ்திரேலியா, ஜேர்மனி, இலங்கை என்று பல பெண் படைப்பாளிகளை அறிமுகப் படுத்தினார். பெண் படைப்பாளிகளின் படைப்புகளையும் பகிர்ந்துகொண்டு உற்சாக மூட்டினார். தினமும் வந்து என்ன எழுதியிருக்கிற்து என்று படித்து தொலைபேசுவார். அவரது ஊக்குவிப்பும் உற்சாகமும் தோழியர் வலைப்பதிவிற்கு மிகவும் முக்கியமானவை.

புத்தகவாசிப்பு: மிகச் சமீபத்தில் தொடங்கிய கூட்டு வலைப்பதிவு. ஒப்ராவின் புக் கிளப் போல தமிழிலும் ஒன்றைத் தொடங்கினால் என்ன என்று தோன்றியது.
நண்பர்களில் ஊக்குவிப்பு உற்சாகத்தோடு தொடங்கியிருக்கிறோம். கேட்டதும், மிகவும் நல்ல விசயம் என்று சொல்லி முதல் நூலை விவாதித்து வழிநடத்த ஒப்புக்கொண்ட இரா.முருகனுக்கும், அடுத்தடுத்து என்னென்ன வாசிக்கலாம் என்று கேட்டபோது எடுத்துக்கொடுத்திருக்கும் நண்பர்களுக்கும், அடுத்த புத்தக விவாதிப்பை வழி நடத்திச் செல்ல ஒத்துக்கொண்டிருக்கும் ரமணிக்கும் நன்றி. புத்தகவாசம் ஒரு கூட்டு வலைப்பதிவு. எண்ணம் என்னுடையதாக இருக்கலாம். ஆனால், அது முழுக்க முழுக்க வாசகர்கள், வலைப்பதிவாள்ர்கள் & வழிநடத்துபவர்களுக்குச் சொந்தமானவை.


மூன்று வருடங்களுக்கு முன்பு தமிழிணையத்தில் கால் வைத்த நான், இப்போது இங்கே இருக்கிறேன். வாழ்வில் எதுவும் நிலையில்லை என்பது யதார்த்தம். நான் முதலில் இருந்த மரத்தடியில் இப்போது இல்லை. அப்படி, நாளை நான் என் வலைப்பதிவை மூடிக்கொண்டு போகலாம். ஆனால், தமிழ் என் வாழ்வில் ஒரு அங்கமாக எப்போதும் இருக்கும்.

தமிழை வருங்கால சந்ததியினருக்கு ஒரு சுவாரசியமான விஷயமாகக் காட்டி அவர்களையும் தமிழில் ஈடுபடச் செய்வதே என் விருப்பம்.

http://mathykandasamy.blogspot.com
http://mathyk.blogspot.com

to

http://tamil.weblogs.us
http://movietalk.yarl.net

to

http://mathy.kandasamy.net/musings

http://mathy.kandasamy.net/movietalk

25 comments:

Kasi Arumugam said...

அது எப்படி இத்தனை விஷயங்களை ரெண்டே பதிவில் அடக்கினீங்க மதி!!

நல்ல மனமுதிர்ச்சியுடன் அருமையான விவரிப்பு. வாழ்க!

வசந்தன்(Vasanthan) said...

மதியக்கா!
ஒரு புத்தகம் விரிவா எழுதலாம் போல கிடக்கு.

வசந்தன்(Vasanthan) said...

நான் மதியக்கா
ஆபிரிக்காவில

இருந்தெல்லோ எழுதிறா எண்டு நினைச்சுக் கொண்டு இருந்தனான்.

Thangamani said...

அடேங்கப்பா! மதி செய்தது, அதை இப்படி சுருக்கமாகச் சொல்லியது இரண்டும் வியக்கவைக்கிறது!

மிக்க நன்றி!

meenamuthu said...

மிகவும் நெகிழவைத்த கட்டுரை.
பெருமையாக பிரமிப்பாக இருக்கிறது மதி!

அன்பான
மீனா

துளசி கோபால் said...

//என் இணைய பங்களிப்பு மிகவும் சிறியது. //

அன்பு மதி,

'அடக்கம் அமரருள் உய்க்கும்' என்பதற்கேற்ப செஞ்ச காரியத்தையெல்லாம் துளியூண்டு கோடி காமிச்சுட்டு அடக்கமா இருக்கீங்க!!!!

நல்லா இருங்க!!!1

என்றும் அன்புடன்,
துளசி.

Narain Rajagopalan said...

ஒரே ஒரு வார்த்தை Brilliant

ROSAVASANTH said...

மதி மிக மிக அழுத்தமாய் மனதில் பதியும் வகையில் சொல்லியுளார்-குறிப்பாய் ஈழ அனுபவங்களை! தமிழ் இணைய விஷயங்களை படித்த போது எல்லாவற்றிற்கும் நான் ரொம்ப ரொம்ப லேட் எனபது புரிந்தது.

மதியின் இந்த பதிவை சாத்தியமாக்கிய அனுராகிற்கு பாராட்டுக்கள்!

ஈழநாதன்(Eelanathan) said...

அம்மாடியோவ் இத்தனை அனுபவங்களா.நான் பெயரிலியின் விசிறி ஆனது உங்களால்தானே அதனால் இரண்டாவது பட்டம் கிடைத்தால்கூடப் பரவாயில்லை.முடிந்தால் கடந்த மாத பூவரசு இதழ் வாங்கிப்படியுங்கள் ஏதோ என்னால் முடிந்த அளவு உங்களைப் பற்றி புளுகி எழுதியிருக்கிறேன்.

suratha yarlvanan said...

இந்த பதிவை சாத்தியமாக்கிய அனுராகிற்கு பாராட்டுக்கள்!

எம்.கே.குமார் said...

இணைய உலகில் மதியின் பணி மகத்தானது! இணைய வலைப்பூ உலகம் அவருக்கும் காசிக்கும் என்றும் கடமைப்பட்டிருக்கும்!

சும்மா கெட்ந்த பசங்கள்க்கெல்லாம் இந்த பிளோக் ஆர்ம்பிச்சு குட்த்துன்னு நீ பாட்டுக்கு போய்ட்டெ! இப்போ பாருமா செரங்கு புட்ச்சவன் மாத்ரி சொறிஞ்சுக்குனே இருக்கென்! தாங்க்ஸ்மா!

எம்.கே.குமார்

SnackDragon said...

அவரச பின்னூட்டம்.

மதிக்கு வாழ்த்துக்கள் [இங்கெ, பழைய வாழ்த்துக்கே இன்னும் ஃபீஸ் வந்து சேரவில்லை என்பது நினைவுக்கு வருகிறது]. அதைத்தொடர்ந்து காசிக்கும் வாழ்த்துக்கள். (பரி, ஏனையோருக்கும் இதில் கொசுறு வாழ்த்து உண்டு, எனக்கும்தான் அஸ்கு புஸ்கு)

//தமிழ் இணைய விஷயங்களை படித்த போது எல்லாவற்றிற்கும் நான் ரொம்ப ரொம்ப லேட் எனபது புரிந்தது. //
கொடுமையே!! ஒன்றரை வருடங்களுக்கும் மேலே வலைப்பதிவு வைக்கவேண்டி பதிவுகளிலே அனாதையையும் உங்களையும் தொங்கியது இதுக்குத்தான். தூங்கி பெயரிலியாய் பதிவு வைத்துக்கொண்டிருந்ததை நினைத்து அடையாளம் தெரியாம்ல் வாசித்தது பற்றி முட்டிக்கொள்ள்த்தோன்றுகிறது. டீ ஜே இன்னும் நத்தைச் சுத்தம் . அந்த விதத்திலே ரவியைக் கொஞ்சம் பாராட்டலாம். விசிதாவும் லேட்டுதான்.


மூர்த்தி கொஞ்சம் ஒழுஙாக பேட்டியை வாசிக்கக்கூடாதா? எழுத்துரு + ரமணி என்று பேச்சு அடிபடுகிறதே. பெயரிலி என்றாலே இப்படி நீங்கள் பினாத்துவது ஏன் என்று புரியவில்லை :-) ஏதுவும் எதிர்வினை எழுத நேரமிருக்காது.

SnackDragon said...

//அவரின் ஒருவரியில் உங்களுக்கு ஓராயிரம் கதை பேசுகிறது. அவர் ஓராயிரம் கதை சொன்னாலும் எனக்கு ஒரு வரிகூடப் புரிவதில்லை!!!//
இது ஓ கே

//உங்களை அவரின் விசிறி என்று எனக்கு முன்னமே தெரியும். உங்களின் வலைப்பூ இணைப்பில் அவரின் வலைப்பூவும்.. //எனக்கெதிராக அவர் பேசியபோது உங்களின் ஆதரவுப் பேச்சும் நானறிவேன். //அப்போதே தெரியும் நீங்களும் அவரும் ஒன்றுக்குள் ஒன்றென்பதை!!!//

இணையத்திலே நல்ல புரிதல். என் பதிவிலே திண்ணைக்கு லிங்கு இருந்தது என்று சொன்னால் திண்ணைக்கு கோபம் வந்து கேஸ் போட்டாலும் போடுவார்கள்.. ஆள விடுங்க சாமீ

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

அனுராக்,

நன்றி! நான் அவசரமாக கிறுக்கிக் கொடுத்ததை ஒரு வழிக்குக் கொண்டுவந்திருக்கிறீர்கள்.

படித்த மற்ற நண்பர்களுக்கும் நன்றி.

ஆப்ரிக்கா பற்றி கேட்ட வசந்தனிடம் ஒரு கேள்வி: அந்தச் சுட்டியில் இருக்கும் மூன்று வலைப்பதிவுகளுக்கும் என்ன ஒற்றுமை? ஒற்றுமை கண்டு பிடித்துவிட்டீர்களென்றால் அவை மூன்றும் ஏன் ஆப்பிரிக்காவில் இருக்கிறது என்று சொல்லுங்கள் பார்ப்போம். ;)
[மற்றவர்களும் சொல்லலாம்]


-மதி¢

இராதாகிருஷ்ணன் said...

படித்து முடித்ததும் மனதில் வந்த முதல் வார்த்தை 'அடேங்கப்பா!'. நிறைய அனுபவத்தைச் சாரமாக நன்றாகச் சொல்லியுள்ளீர்கள் மதி; பிரமிப்பாக உள்ளது.
அனுராக்கிற்கு நன்றி!

இராதாகிருஷ்ணன் said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Chandravathanaa said...

இப்படியொரு பேட்டி எடுக்க வேண்டுமென்ற அனுராக்கின் யுக்திக்குப் பாராட்டுக்கள்

SnackDragon said...

//அப்படிப் போடுங்க.. இதான் பாயிண்டு. என்னை யார் என்றே தெரியாமல்.. யாரோ ஒரு புதியவன்.. இணையத்துக்கு நன்கு பரிச்சயம் இல்லாதவன் என நினைத்து மதியும், காசியும், பரியும், ரமணியும் ஒன்று சேர்ந்து மிரட்டினர். மரத்தடியில் எனது பதிவுகள் அழிக்கப் பட்டன. ராயரில் என் பதிவுகள் காணாமல் போயின.. விளம்பரப் பதிவுகள் எல்லாம் ஜாமென்று உட்கார்ந்திருந்தன. இதையெல்லாம் கேள்வி கேட்ட நான் பொல்லாதவன் ஆகிப்போனேன். காரணம் என்ன? நல்ல புரிதல் இல்லை! இவர்கள் பார்வையில் ஏற்கெனவே நன்கு அறிமுகம் ஆகி இருக்க வேண்டும். ஏற்கெனவே ஜிஞ்சாவை ஓங்கித் தட்டி இருக்க வேண்டும். அப்போதுதான் வாழ்த்துவார்கள். எழுத விடுவார்கள்! புரிதல் இல்லாத காரணத்தாலேயே எனது பதிவுகளுக்கு அதிலும் வலைப்பூவின் ஆசிரியராக இருந்தபோது ஆன்மீகப் பதிவுக்கு வந்து பெண்தெய்வத்தைப் புணர்ந்தேன் என்ற இணைப்பை இட்டார் பரி! இவர்களின் பார்வையில் பரி, பெயரிலி என எல்லோரும் நல்லவர்கள். பெயரிலியை வாழ்த்த இங்கே மதி. மதி கிணற்றில் குதி என்றால் குதிக்க இளையவர் ஈழநாதன்!!!//

அன்பின் மூர்த்தி,
இதற்கு பதில் சொல்வது ஒரு சுழலுக்குள் இட்டுச்செல்லும். மனங்களைப் புண்படுத்தும் அபாயம் உள்ளது. ஆனாலும் , மதி, பரி,பெயரிலி,காசி பற்றி நீங்கள் எழுதியுள்ளது அவதூறாக பிறர் வாசிக்க வாய்ப்பிருப்பதாலும், எனக்கே இது அவதூறு போல் படுவதாலும் இந்த பதில்.

உங்களை இணையத்திலே வாசித்த அளவுக்கும் சற்று கூடுதலாக, மதி, பரி,காசி,பெயரிலியை வாசித்திருக்கிறேன். உங்களைப்பற்றிய புரிதலிலே, உங்கள் கருத்துக்களோடு என்னால் முற்றாய் ஒத்திப்போக முடிவதில்லை. இன்னும் விரிவான சிந்தனைக்கு நீங்கள் போவதில்லை என்ற அளவிலே தான் புரிந்து கொண்டுள்ளேன். (நான் சொல்வது தவறாகவும் இருக்கலாம். அது இங்கே அவசியமும் இல்லை. )

ஒரு உதாரணமாய் பின் வரும் என் கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள்.
---------------------------------------------------------------
இதுதான் அதற்கு எடுத்துக்காட்டு.

1.// பெயரிலியை வாழ்த்த இங்கே மதி. மதி கிணற்றில் குதி என்றால் குதிக்க இளையவர் ஈழநாதன்!!!// ஏன் இப்படி முன்முடிவுகளுக்கு சென்று விடுக்றீர்கள்?
அடுத்து என்னையும் இந்த லிஸ்டில் சேர்க்க மாட்டீகள் என்று என்ன நிச்சயம்.
மரத்தடியில் நீக்கப்படுவது போல் இணையத்தில் உங்களுக்கு மட்டும் நடக்கும் சமாச்சாரமல்ல. இணைத்திலே கணிசமான அளவிற்கு நான் உள்பட அனுபவத்திருக்கிறேன்.

2.காசி பரி எல்லாம் மிரட்டினார்கள் என்று சொன்னால் எனக்கு சிரிப்புதான் வருகிறது. மூர்த்தியின் இந்த ஸ்டடெமென்டை நான் எதிர்ப்பதுடன் மற்ற நண்பர்கள் பொருட்படுத்த வேண்டியதில்லை என்று கேட்டுக் கேட்டுக்கொள்கிறேன்.

3.//ஏற்கெனவே ஜிஞ்சாவை ஓங்கித் தட்டி இருக்க வேண்டும். அப்போதுதான் வாழ்த்துவார்கள். எழுத விடுவார்கள்! புரிதல் இல்லாத காரணத்தாலேயே எனது பதிவுகளுக்கு அதிலும் வலைப்பூவின் ஆசிரியராக இருந்தபோது ஆன்மீகப் பதிவுக்கு வந்து பெண்தெய்வத்தைப் புணர்ந்தேன் என்ற இணைப்பை இட்டார் பரி! //

இது பற்றி வாசிக்கவில்லை என்ற அளவில் கருத்து சொல்ல முடியாது. ஆனால் உங்கள் தொனி தவறாகவே படுகிறது. . யாரை யார் ஓங்கி தட்டுவது இணையத்தில்? . மற்றவர் உங்களைப்பற்றி இப்படிச் சொன்னால் பொறுத்துக்க்கொள்வீர்களா? பாருங்கள் நீங்கள் எழுதுவதை நீங்களே பொறுத்துக்கொள்ள்முடியாது.
///ஏற்கெனவே இந்த மூர்த்தியை அப்போதே ஓங்கித் தட்டி இருக்க வேண்டும். / என்று எழுதினால் வலிக்கிறதுதானே?

4. மூர்த்தி உங்களுக்கு வேண்டுகோளாய், நட்பை நாடுங்கள் என்று சொல்வதைத் தவிர வேறு எதுவும் சொல்லத்தெரியவில்லை.
ஏற்கனவே முடிந்த ஒன்றை வளர்க்க விருப்பமில்லை. அவசியப்பட்டல் ஒழிய இதற்கு இங்கு பதில் எழுதமாட்டேன்.

வலைஞன் said...

மூர்த்தி,
நட்பு, ரசிப்பு என்பவை அவரவர் தனிப்பட்ட விசயம். மேலும் இங்கே தமிழ் இணையத்துக்கு மதியின் உழைப்புகள் பற்றித்தான் பேச்சு. அதில் உங்களுக்கு என்ன மாறுபாடு? தவிர உங்கள் தனிப்பட்ட பிரச்சினைகள் பற்றிப்பேச இதுவா இடம்? மேலும் உங்கள் பிரச்சினைகள் பற்றி நானும் அறிவேன். அன்றைய பிரச்சினை அன்றோடு முடிந்து போனவை. மதிக்கு உங்களிடம் அது குறித்து தனிப்பட்டு எந்தவித பகையோ வெறுப்போ இல்லையென்றே தெரிகிறது. ஆனால் நீங்கள் தேவையற்ற நேரத்தில் தேவையற்ற பிரச்சினையைக் கிளறுவது சரியா? உங்களின் சில வார்த்தைகள் அளவுக்கு மீறினவையாக எனக்குப் படுகிறது.

எங்கள் சிறுபத்திரிகைச் சூழலில் தனிமனிதத் தாக்குதலும் தேவையற்ற விமர்சனங்களும் சகஜம். அது பல நேரங்களில் தனித்தனி குழுக்களை உருவாக்கவே பயன்பட்டிருக்கிறது. அந்தக் குழுச் சண்டைகளில் வெறுப்புற்று இணையத்துக்கு வந்தால் இங்கேயுமா? வேண்டாம் விட்டுவிடுங்கள்.
வெறுப்புகளை விரல் நுனிக்கு கொண்டு வராதீர்கள். முடிந்தவை முடிந்தவையாகவே இருக்கட்டும். மூர்த்தி மட்டுமல்ல வேறு யாரும் இந்த விஷயத்தில் இனி பின்னூட்டமிட வேண்டாம்.

நான் இதைப் பார்ப்பதற்கு சற்று தாமதமாகிவிட்டது.

-/பெயரிலி. said...

இந்தப்பதிவின் வாசகர்களுக்கு,,
மூர்த்தியின் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கின்றார். அவருடைய புரிதலினைப் பற்றி அவர் கூறும் குறிப்பிட்ட வலைப்பூவிலிருந்து கவனித்து வருகின்றவர்களுக்குப் புரியக்கூடும். அவரின் இந்தப்பதிவின் பின்னூட்டம் குறித்து நான் ஒரேயொரு விடயத்தினை மட்டும் தெளிவுபடுத்தவிரும்புகின்றேன்.

/எனது சாதாரண பின்னூட்டங்களையே அழித்தவர் பெயரிலி!/

நானறிந்த வரையிலே இது வடிகட்டின பொய்யான கூற்று. அவருடைய பின்னூட்டங்களை அழிப்பதற்கான வல்லமை எனக்கு என் பதிவுகளிலே மட்டுமே உண்டு. என் பதிவுகளிலே வரும் எந்தவொரு பின்னூட்டத்தையும் - அதை இட்டவர் யாராக இருந்தாலுங்கூட, சொல்லப்படும் கருத்து எதுவாக இருந்தாலுங்கூட - நான் அழிப்பதில்லை. அவர் சென்ற வாரம் என் பதிவிலே இட்ட இந்தப்பின்னூட்டமும் இருக்கத்தான் செய்கின்றது. நான் அவருடைய பின்னூட்டங்களை எங்கே அழித்திருக்கின்றேன் என்று சுட்டி தந்து சொல்வாரானால், அதை எல்லோரும் உறுதிப்படுத்த முடியும். அதை விடுத்து, இப்படியாக ஆதாரமில்லாமல் போகின்ற போக்கிலே கூற்றுகளை அவிழ்த்துவிடுவதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

இதற்குமேலே, இது குறித்து ஏதாவது உருப்படியான பதில் ஆதாரங்களோடு வராதவிடத்து, எனக்குச் சொல்வதற்கு எதுவுமில்லை.

-/பெயரிலி முகமிலி.

இளங்கோ-டிசே said...

மதியின் நேர்காணல் நன்றாகவிருந்தது. அதைச் சாத்தியமாக்கிய அனுராக்கிற்கும் நன்றி.
........
மூர்த்தி, எனக்கு உங்களது மரத்தடி, வேம்படி, ஆலடிப் பிரச்சினைகள் தெரியாது. ஆனால் உங்களது மேலுள்ள பின்னூட்டங்களை வாசித்தளவில் ஒருவித வன்மம்தான் தெரிகின்றது. முக்கியமாய்
////இணையத்தில் பலருடைய எழுத்துகளுக்கு நான் விசிறி. 'பெயரிலி' ரமணிதரன்[ரமணியின் ஒரு வரியில் ஓராயிரம் கதை பேசும் எழுத்துக்கு விசிறி நான். முதல் விசிறி!//
என்று மதி சொல்வதில் உங்களுக்கேன் வயித்தெரிகிறது என்று தெரியவில்லை. தனிப்பட்டவர்களின் விருப்பு, வெறுப்புக்களில் போய் தலையிடுவதைப்போன்ற அநாகரிகத்தைப் போல வேறெதாவது இருக்குமா என எனக்குத் தெரியவில்லை. உங்களுக்கு விருப்பமானவர்களின் பட்டியலை உங்கள் தளத்தில் நீங்கள் போடுங்கள். யார் வேண்டாமென்றார்கள்? அதைவிட்டுவிட்டு , மதி ஏன் அப்படி தனது இணைப்பில் பெயரிலியை முதன்முதலாய் வைத்திருக்கின்றார் என்பது எனக்குத் தெரியும் தெரியும் என்று ஏதோ கிசுகிசுப்பாணியில் தயவுசெய்து எழுதாதீர்கள்.
//ஓகோ அவர் பெயர்தான் ரமணியா? பின் எதற்கு பெயரிலி என்று சொல்லிக் கொண்டு திரிகிறார்???!!! //
ஒருவர் தனக்குப்பிடித்த எந்தப்பெயரும் போடுவதும், விடுவதும் அவரவர் சுதந்திரம். உங்களுக்கு இதில் என்ன பிரச்சினை.
//அவர் எழுதுவதை அவர்மட்டும்தான் வாசித்துக் கொள்ளவேண்டும். யாருக்குமே புரியமாட்டேன் என்கிறது//
இப்படி எல்லாம் எழுதிக்கொண்டு நடுநிலைமை அது இது என்று எழுதுவதைப்பார்க்கும்போது சிரிப்புத்தான் வருகின்றது. பெயரிலி, தன் படைப்பை வாசியென்று எங்கையாவது உங்களை வற்புறுத்தியிருக்கின்றாரா? அவர் எழுதுவதை அவர் மட்டும்தான் வாசித்துக்கொள்ளவேண்டும் என்று சொல்வதில் இருக்கும் எழுத்தின் வன்முறையை நீங்களே ஆறுதலாக இருந்து யோசித்துப்பாருங்கள். பெயரிலியின் எழுத்துக்கள், யாருக்குமே புரியமாட்டேன் என்கிறது என்று சொல்ல நீங்கள் எங்கே எலக்ஷன் வைத்து இப்படியொரு பொது முடிவை எடுத்தனீர்கள்?
கார்த்திக் சொன்னதுமாதிரி,
//உங்களுக்கு வேண்டுகோளாய், நட்பை நாடுங்கள் என்று சொல்வதைத் தவிர வேறு எதுவும் சொல்லத்தெரியவில்லை.//
என்று மட்டுமே என்னாலும் உங்களுக்கு இந்தக்கணத்தில் சொல்ல முடிகின்றது.

..........
அனுராக், தயவுசெய்து மன்னிக்கவும். இவைகுறித்து எதுவும் எழுதக்கூடாதென்று மேலே நீங்கள் அறிவுறுத்தியபோதும், இப்படி ஒருவித stereo-type பின்னூட்டங்களைப் பார்க்கும்போது எதுவும் சொல்லாமல் விலகிப்போகும் மெளனம் இன்னும் ஆபத்தானது என்பதால்தான் எழுதுகின்றேன். தொடர்ந்து விவாதிக்கும் எண்ணம் எனக்கு இங்கே இல்லை. நன்றி.

ஈழநாதன்(Eelanathan) said...

மூர்த்தி மீண்டும் எதற்கு இவையெல்லாம்.இது மதியின் மனப்பதிவு அவர் தனக்குப் பிடித்தவற்றைத் தான் சொல்லமுடியும்.அவருக்கு பெயரிலியின் எழுத்துப் பிடித்திருக்கலாம் அதனை நேர்காணலில் சொல்லியிருக்கலாம்.இதில் உங்கள் பிரச்சனை பற்றிப் பேசவேண்டும் என்று எதிர்பார்ப்பது என்ன நியாயம் மதியின் வாழ்வில் உங்களால் எழுப்பப்பட்ட பிரச்சனை ஒரு சிறு துளிகூட இருக்காது அவர் தனது வாழ்வனுபவங்களைச் சொல்லும்போது.உங்களைப் பற்றியும் சொல்லவேண்டுமென எதிர்பார்ப்பது குழந்தைத்தனமாக உள்ளது.

இப்போது உங்கள் எழுத்துக்கு இலக்கிய அந்தஸ்து கிடைத்துவிட்டது.தமிழ்முரசில் உங்கள் கதை கவிதைகள் வெளிவருகின்றன.அதனால் கிடைக்கும் பெயரை இவ்வாறான உணர்ச்சிவசப்பட்ட பின்னூட்டங்கள் கெடுத்துவிடும்.யாரும் சண்டைக்காரன் மூர்த்தி என்று சொல்லிவிடுவார்கள் கிடைத்திருக்கும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.இலக்கியம் படைப்பதைவிட்டு வாய்வார்த்தையை வளர்த்து மனப் புண்களைத் தேடிக் கொள்ளாதீர்கள்.

கிஸோக்கண்ணன் said...

...தமிழை வருங்கால சந்ததியினருக்கு ஒரு சுவாரசியமான விஷயமாகக் காட்டி அவர்களையும் தமிழில் ஈடுபடச் செய்வதே என் விருப்பம்...

உன்னதமான எண்ணம் மதி. இதில் உங்களுக்கு ஏதேனும் உதவி தேவையெண்டால் கேளுங்கள்.

வெறுமனே தமது சுய புகழ்/புலம்பல் பாடாமல், வலைபதிவு மூலம் சமூகத்திற்கும் ஏதேனும் செய்யமுடிந்தால் அது பாராட்டக்கூடியதே.

விதண்டாவாத கேள்விகளுக்கும், தம்மை அதீத புத்திசாலிகள் என்று நினைக்கும் சின்னப் புத்தி கொண்டவர்களுக்கும் பதில் சொல்லி நேரத்தை வீணாக்குவதனைவிட ஏதேனும் பிரயோசனந் தரக்கூடிய விடயங்களைச் செய்வதே சிறந்தது என்று ஏன் எமக்குத் தெரியவில்லை?

கிஸோக்கண்ணன் said...

"சின்னப் புத்தி கொண்டவர்களுக்கும்"
என்ற வார்த்தைப் பிரயோகத்தை நான் வாபஸ் வாங்குகின்றேன். சில வலைப்பதிவுகளில் சற்றுமே நாகரீகமில்லாத பின்னூட்டங்களைப் படித்து மனம்நொந்துபோன ஒரு பொழுதில் அப்படி எழுதிவிட்டேன். அது எவரையும் காயப்படுத்தியிருந்தால் மன்னிப்புக் கேட்டுக் கொள்கின்றேன்.


அன்புள்ள மூர்த்தி,

அக்கா என அழைக்க விடவில்லை என்பது என்னைப் பொறுத்தவரை ஒரு சின்னப் பிரச்சினை. (பெரிய பிரச்சினை என்று நீங்கள் எண்ணினால் அது தங்கள் சொந்த எண்ணம்...அதில் உள்ள கோபம் புரிகின்றது). ஏன் என்று நீங்கள் மதியை வலைப்பதிவர் அனேகருக்குரிய நகைச்சுவையான பாணியினில் அவரது வலைப்பதிவில் கேட்டிருந்தால் பிரச்சினை முடிகின்றது. ஒருவருடைய (சிறு) சாதனையினைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கும் பொழுதில், ஏனையாரை மனம்நோகச் செய்யும் வார்த்தைகள்?