2005-10-16

சுரா எனும் எழுத்துச்சுடர் அணைந்தது

Image hosted by TinyPic.com


ஒரு மாத இடைவெளிக்குப் பிறகு இன்று தான் மீண்டும் வலைப்பதிவுகளை வாசிக்க முடிந்தது. காலை ஆறரை மணிக்கு இணையத்தில் நுழைந்து தமிழ்மணத்தில் பதிவுகளின் தலைப்புகளை மேய்ந்த போது சுந்தரமூர்த்தி மற்றும் தங்கமணி எழுதிய பதிவுகளைப் பார்த்து அதிர்ச்சியாகி விட்டது. கூகுளில் செய்திகளைத் தேடியபோது மலையாள மனோரமா இணைய தளத்தில் மட்டுமே சுராவின் மரணச்செய்தி வெளியிடப் பட்டிருந்தது. பின்னும் தேடியபோது News Today, NewKerala.com, Webindia123 போன்ற தளங்களில் காண முடிந்தது. தமிழ் யூனிகோடில் இந்தச்செய்தியை அந்த நேரத்தில் எந்தத் தளத்திலும் காணமுடியவில்லை.

காலை செய்தித்தாள்கள் வந்த பிறகு பார்த்ததில் தினமணியில் மட்டும் முதல்பக்கத்தில் குறிப்பு கொடுத்து உள்ளே விரிவாக சுராவின் வாழ்க்கைக் குறிப்பு வெளியிட்டிருந்தார்கள். தினமலரில் உள்ளே செய்தி இருந்தது. தினத்ததந்தியில் இந்தச் செய்தியை காணவில்லையென்று நண்பர் சொன்னார்.

ஆனால் மலையாளப் பத்திரிகைகளில் முதல் பக்கத்திலேயே புகைப்படத்துடன் விரிவான முக்கியச்செய்தியாக சுராவின் இறப்பு பதிவு செய்யப்பட்டிருந்தது.

அவர் மலையாள இலக்கியங்கள் பலவற்றை மொழி பெயர்த்ததும், மலையாளத்தில் மொழி பெயர்க்கப்பட்ட அவரது படைப்புக்கு சாகித்ய அகாதமி விருதை மொழி பெயர்ப்பாளர் பெற்றதும் அவர்களுக்குப் பெருமைக்குரிய விஷயங்கள்.

தேசிய விருது பெறாத சிவாஜியைப்போல சாகித்ய அகாதமி விருது பெறாமலே இறந்துவிட்ட சுராவின் படைப்புகள் பலமுறை விவாதத்துக்குள்ளாகி இருக்கின்றன. கடைசியாக பிள்ளை கெடுத்தான்விளை வரை!

* * *
92ல் உதயதாரகையை வெளியிட்ட சமயம் நான் நாகர்கோயில் செல்ல வேண்டியிருந்தது. அப்போது சுராவை சந்தித்து இதழை கொடுக்க விரும்பி அவரது வீட்டுக்குச் சென்றேன். அவர் ஊரில் இல்லை என்பதை அறிந்து கடையில் அவர் மகன் கண்ணனைச் சந்தித்து இதழைக் கொடுத்தேன். இன்னொரு முறையும் நான் சென்ற வேளை அவர் அமெரிக்காவில் இருப்பதாக அறிந்தேன். இப்படியாக அவரைச் சந்திக்கும் வாய்ப்பு தவறிவிட்டது.

என் சக சிற்றிதழ் நண்பர்கள் அவரைச் சந்தித்துப் பேசிவிட்டு வருவதும் அடுத்த இதழிலேயே அவரை கடுமையாக விமர்சிப்பதும், அதே நண்பர்கள் மீண்டும் அவரைச் சந்திக்கும் போது அவரும் எதையும் மனதில் வைத்துக்கொள்ளாமல் பேசுவதும் இலக்கியமும் வாழ்க்கையும் குறித்த பல புரிதல்களை எனக்குத் தந்துள்ளன.

அவரது படைப்புகள் தந்த அனுபவங்கள் என்பது நான் புதிதாக எதுவும் சொல்ல அவசியமில்லை. ஒவ்வொரு வாசகனும் ஒவ்வொரு படைப்பாளியும் தவிர்க்க இயலாத படைப்புகள் அவருடையவை. அவரது விமர்சகர்களாலும் மதிக்கப்படும் நமது காலத்தின் படைப்பாளிக்கு அஞ்சலி.

1 comment:

Anonymous said...

SU.RA kkurittha mathippeedu sariyaana ontru! thamil ilakkiya chsoozlalil puthup puthu muyarchikalai matrkonta avarin panikalai" kaalachuvadu" thodara vaendum!

Posted by hameedabdulla to அகரவலை at 10/16/2005 11:23:59 PM