2005-10-18

மாமதயானையும் மறக்க இயலாத நாளும்

Image hosted by TinyPic.com

நாகர்கோவில் அருகிலுள்ள வேளிமலையில் உள்ள முருகன் கோயில் பிரசித்தமானது. இதனை குமாரகோவில் என்று அழைப்பார்கள். இங்கிருந்து நவராத்திரி உற்சவத்துக்காக ஆண்டு தோறும் திருவனந்தபுரத்துக்கு சுவாமி ஊர்வலம் செல்லும். வெள்ளிவாகனம் என்னும் குதிரை சிலையுடன் குண்டனி அம்மையும் கோரச்சாமியும் ஊர்வலம் செல்வதாக பெரியவர்கள் கூறுவர். கோரச்சாமி என்பது குமாரசாமியின் மருவல்.
(இந்தப் புராணத்தை பின்னொரு சமயம் எழுதுகிறேன்.) ஊர்வலத்தில் நெற்றிப்பட்டம் சூட்டி அலங்கரிக்கப்பட்ட யானைகளும் செல்வது வழக்கம். இந்த ஆண்டு இவ்வூர்வலம் குமாரகோவிலில் இருந்து செப்டம்பர் 30 அன்று புறப்பட்டது.

*
செப்டம்பர் 30 அன்று பகல் திருவனந்தபுரத்தில் என் சகோதரர் திருமணம் முடிந்து மணமக்களுடன் வாகனங்களில் திரும்பிக் கொண்டிருந்தோம். தமிழக எல்லைக்குள் நுழைந்து மார்த்தாண்டத்தை கடந்து சென்றபோது வழியில் காவலர்கள் நின்று வாகனங்களை திருப்பிக் கொண்டு செல்லுமாறு எச்சரித்துக் கொண்டிருந்தனர். எந்த வாகனமும் அதைப் பொருட்படுத்தாமல் முன்னேற நாங்களும் அதைப் பின்பற்றினோம். சற்று தூரத்தில் சில காவலர்கள் வண்டியை நிறுத்தி விட்டு இறங்கி ஓடிவிடுங்கள் என்று கத்திக் கொண்டே ஓடிவந்தனர். நாங்கள் நிதானமாக வண்டியை நிறுத்தி என்னவென்று கேட்க காவலரோ பதட்டத்துடன் "ஊர்வல யானைக்கு மதம் பிடித்துவிட்டது. இந்தப் பக்கமாக ஓடிவந்து கொண்டிருக்கிறது. உடனே இறங்கி ஓடிவிடுங்கள்..." என்று கூவினார்.

அதைக்கேட்டதும் மணமக்கள் வாகன ஓட்டுநர் காரை நிறுத்தி இறங்கி சாலையோரமாக போய் நின்று கொண்டார். பின்னால் வந்து கொண்டிருந்த எங்கள் காரோட்டி காரை ஓரமாக செலுத்தி அங்கே நின்று கொண்டிருந்த பேருந்தின் மறுபுறம் கொண்டு போய் நிறுத்தினார். சில நிமிடங்களில் வேகமாக எதிர்ப்புறமிருந்து ஓடிவந்து கொண்டிருந்த யானையை காண முடிந்தது. அதன் பின்னாலேயே துப்பாக்கியால் குறிபார்த்தபடி வேனில் தொற்றிக்கொண்டு போலீசார். ஒருவர் வேகமாக சைக்கிளை ஓட்டியபடி வர பின்னாலிருந்தவர் கையில் ஒரு பெரிய வாழைக்குலை. சைக்கிள்வேகமாக முன்னேறி யானையைக்கடந்து சென்றது. பின்னாலிருந்தவர் வாழைக்குலையை யானையின் முன்பாக எறிந்தார். யானை திரும்பிக்கூடப் பார்க்காமல் வாழைக்குலையைக் கடந்து சென்றது. யானை கண் மறைந்ததும் நாங்கள் அந்த இடத்தை விட்டு கிளம்பினோம். கிட்டத்தட்ட ஒரு கிலோமீட்டர் வந்த பிறகே யானையை பின்னே விரட்டி வந்த மக்கள் கூட்டம் எதிர்வரக்கண்டோம். அப்போ யானை எவ்ளோ வேகமா போயிருக்கும்?

இன்னும் இரண்டு கிமீ தூரத்தில் ஊர்வலத்தில் வந்த மற்றொரு யானையும், சப்பறங்களும், பக்தர்களும் நிறுத்தி வைக்கப் பட்டிருந்தனர். அந்த இடத்தில் தான் யானைக்கு மதம் பிடித்திருக்கிறது. யானைக்கு மதம் பிடித்து ஓடினாலும் உண்மையில் அது யாரையும் துன்புறுத்தவில்லை. சாலையின் மத்தியக் கோட்டை ஒட்டியே பல கிலோமீட்டர் தூரம் ஓடி கடைசியில் ஒரு சிறிய கோவிலருகே படுத்துக் கொண்டதாக மறுநாள் பத்திரிகைகளில் பார்த்துத் தெரிந்து கொண்டோம்.

முதுமலைக் காடுகளில் காட்டு யானைக் கூட்டத்துக்கு நடுவே ஜீப்பில் சாகச சவாரி செய்தபோது கிட்டாத திரில்லை இங்கே அனுபவித்தோம். கையில் டிஜிட்டல் கேமராவை வைத்துக் கொண்டு நான் எடுக்க மறந்த ஷாட்டை கல்யாண போட்டோகிராபர் எடுத்துத் தந்தார்...

2 comments:

பொன்ஸ்~~Poorna said...

பரவாயில்லைங்க.. நல்ல அனுபவம்.. நல்ல யானை பாருங்க.. 'மத' யானைன்னு சொல்றது தப்பு :)

வலைஞன் said...

நல்ல பிள்ளையா நடந்துகிட்ட (மத) யானைதானே. உங்க வலைப்பதிவில் ஓடும் யானையின் அதே வேகம். அதுதான் மறுபடி நினைவுகளை கிளறி விட்டது.