2005-02-23

பக்திக் கலாச்சாரங்கள்

நம்ம கிராமத்து சனங்களுக்கு மதம் என்பது வாழ்வியல் கலாச்சாரம் மட்டுமே. அவர்கள் ஆண்டு முழுவதும் உழைத்தபின் அந்த உழைப்பின் பயனை தங்களுக்குத் தந்த இறைசக்திக்கு நன்றி தெரிவிக்குமுகமாகவும் திருவிழாக்களை நடத்துகின்றனர்.

திருவிழா என்பது அவர்களின் கலை கலாச்சார வெளிப்பாடுகளை அரங்கேற்றும் களமாகவும் அமைந்திருக்கிறது.
வேற்றூர்களில் வசிக்கும் உறவுகளைச் சந்திக்கவும் திருவிழாவைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். எந்த ஊரில் திருவிழா நடந்தாலும் அந்தந்த ஊர்களுக்கு தங்கள் உறவினர் வீடுகளுக்குச் செல்வது கிராமத்து சனங்களின் வழமையாகும். ஊர்க்கோவில் திருவிழாவில் ஊர்மக்கள் ஒவ்வொருவரின் உழைப்பும் பங்களிப்பும் இருக்கும்.

நகரத்துக் கோவில்களிலோ பங்களிப்பு பண நன்கொடைகளாகவே இருக்கும். விழாக்களை யாரோ நடத்த பக்தர்கள் தரிசனத்துக்கு மட்டும் வந்து போவார்கள். கலாச்சாரப் பக்திக்கும் மதக் கலாச்சாரத்திற்கும் இடையே இன்னும் பல நுட்பமான வேறுபாடுகள் உண்டு.

கிராமத்தவர் பொதுவாகவே மதப்புனிதங்களில் அதிக ஈடுபாடு கொள்வதில்லை. அவர்களின் பக்தி நேரடி பக்தி வகைப்படும். பழம்புராணங்களை விட மக்கள்கதைகளில் அவர்களுக்கு ஆர்வம் அதிகம். எல்லைச்சாமிகளும் பிற தெய்வங்களும் மனிததெய்வங்களே தவிர "தேவர்களல்ல"

கிராமத்து சனங்கள் தங்கள் விளைச்சலின் பலனில் கடவுளுக்கும் பங்கு தருவார்கள். அந்தப் படையலைப் பகிர்ந்து உண்பார்கள். நோய்நொடி என்றால் தங்கள் குலதெய்வங்களுக்கு நேர்ந்து விடுவார்கள். நேர்ந்துவிட்ட ஆடு, கோழியை அடித்து ஊர்கூடி விருந்துண்ணும்.

மேற்குடியின மதக்கலாச்சாரம் மாறுபட்டது. அவர்கள் தினப்படி ஆண்டவனைப் பூசிப்பவர்கள். குறிப்பிட்ட கோயிலுக்கு விரதமிருந்து வருவதாக நேர்வர். பொன்னோ பொருளோ காணிக்கையிட நேர்வதுண்டு. தங்கள் படையலைத் தாங்களே பிரசாதமாகப் பெற்றுச் செல்வார்கள்.

சுகாதாரம் சார்ந்த முடியிறக்குதல் இருதிறத்தும் வழக்கம். அம்மன் கோவில்களில் பொங்கலிட்டு வழிபடுதல் கீழ்நடுத்தரவர்க்கப் பெண்களின் வழக்கம். தீவிர பக்தியின் அடையாளங்களாக அலகு குத்துதல், தீமிதித்தல், அங்கப்பிரதட்சணம் எனப்படும் உடலுருட்டல், மண்சோறு உண்டல் என்பவையும் வழமையாக உள்ளன. முருக வழிபாட்டில் காவடி எடுத்தல் சிறப்பிடம் பெறுகிறது.

மன ஆறுதலுக்காக கோவிலுக்குச் செல்வதும், சாமியார்களைச் சந்திப்பதும், யாகம் போன்றவையும் சிலரது வழக்கம்.

தடுக்கிவிழ நேர்ந்தால்கூட "ஐயோ ஆண்டவா" என்றழைக்கும் மேட்டுக்குடி பக்திக்கு நடுவே "ஐயோ ஆத்தா" என தாயையும் தெய்வத்தையும் ஒருங்கே அழைப்பது பாமரர்களின் தனிச்சிறப்பு.

கிராமத்து திருவிழாக்கள் முன்பெல்லாம் பண்பாடு சார்ந்த கலைநிகழ்ச்சிகள, கூத்து போன்ற கலைவடிவங்கள் நிகழ்த்தப் பட்டு கிராமத்து சனங்களின் கலாரசனைக்கும் தீனிபோட்டு வந்தன். பின்னர் திருவிழாக்களிலும் திரைப்படங்கள் திரையிடப்பட்டு கலை பின்னுக்குத் தள்ளப் பட்டது. பக்திப்படங்களில் ஆரம்பித்த திரைக்கலாச்சாரம் பின்னர் ரசிகர்மன்ற நன்கொடைகளாக மாறி மசாலாப் படங்கள் திருவிழாக்களையும் ஆக்கிரமிப்புச் செய்தன. ஆங்காங்கே எழுந்த எதிர்ப்பலைகளால் மாற்று ஏற்பாடாக சமயச் சொற்பொழிவுகள் இடம்பிடித்தாலும் அவை இன்று அரசியல் மேடைகளாகவே மாறி மாற்று மதத்தினரையும் மாற்றுக் கட்சியினரையும் தாக்கவே அதிகமாகப் பயன்படுத்தப் படுகின்றன என்பது வேதனைக்குரிய செய்தி. இது கிராமத்துத் தனித்துவங்களில் நகரத்து அழுக்குகளின் கலப்பால் விளைந்த மற்றுமொரு சீர்கேடு.

3 comments:

Kangs(கங்கா) - Kangeyan Passoubady said...

//தடுக்கிவிழ நேர்ந்தால்கூட "ஐயோ ஆண்டவா" என்றழைக்கும் மேட்டுக்குடி பக்திக்கு நடுவே "ஐயோ ஆத்தா" என தாயையும் தெய்வத்தையும் ஒருங்கே அழைப்பது பாமரர்களின் தனிச்சிறப்பு.//

உண்மைதான்

துளசி கோபால் said...

நல்ல பதிவு!

என்றும் அன்புடன்,
துளசி

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

anurag,

could you pls drop me a line at

mathygrps at gmail dot com.

nadri.